அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 24 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அதிகாரம் புரியாத சமன்பாடு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.புஷ்பராஐன்  
Sunday, 05 December 2004

கவிஞர் மு.பொன்னம்பலத்தின் அதிகாரம் புரியாத சமன்பாடு கவிதையின் இறுதிவரிகள்:

சர்வாதிகாரம் என்பது விடுதலையை
ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு
தன்னை அறியாமலேயே அதைப் பிறப்பிக்க
யோனி வாயிலில் காத்திருக்கும் மருத்துவிச்சி.
சர்வாதிகாரம் சமன் விடுதலை.
எத்தனை தரம் சரித்திரம் இதைக் கற்பித்துக் கொடுத்தாலும்
அதிகார அமர்வுகளுக்கு புரிய முடியாது போய்விட்ட
மர்மச் சமன்பாடு.

இன்றைய அதிகார அரசியல் அகராதியின்படி இராணுவ பலம்கொண்ட நாடுகள் பொருளாதார மூலவளங்கள் கொண்ட நாடுகளை ஆக்கிரமிக்கும்போது அடிமைத் தளைகளை அகற்றிச் சுதந்திரக்காற்றை சுவாசிக்க அனுமதிக்கின்றோம் எனக்கூறித் தம்மை நியாயப்படுத்திக் கொள்வார்கள்.
அந்நியப் படைகளின் வருகையை ஆரவாரமாக வரவேற்கும் மக்கள் அவர்கள் வருகையினால் தாம் இதுவரை அனுபவித்த துயர்கள் கரைந்துவிடுமெனக் கனவு காணத் தொடங்கிவிடுவார்கள். கனவுகள் எப்போதும் பலித்துவிடுவதில்லையே. அவர்களின் வருகை பாதுகாக்கப்பட்ட மக்களின் பெயரால் ஆக்கிரமித்த அரசின் நலன்கள் சார்ந்தவை என்பதை மக்கள் உணர்வதில்லை. இவ்வாரம்ப மனநிலைதான் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாய்த்த சாதகநிலை. அதனைத் தொடர்ந்து தங்களுக்கான ஒரு பொம்மை அரசை நிறுவி விடுதலையும் அமைதியும் நிலைநாட்டுபட்டுவிட்டதாகச் சகல மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலம் செய்திகளை பரப்புவர்.
இச்சாதக நிலை நிரத்தரத் தன்மை கொண்டிருப்பதில்லை. அந்நிய படையெடுப்பால் இழக்கப்பட்ட அரசும் அதன் ஆதரவாளர்களதும் எதிர்ப்புநிலை எழும்போது அரசியல் தந்திரோபாயங்களையும் - புத்தியையும் மனங்கனையும் வெல்லுதல் - மீறி இராணுவத்தின் பதில் நடவடிக்கை உடனடியாகவே நிகழ்த்தப்பட்டுவிடும். களத்தில் நிற்பவர்கள் அவர்களாதாலால் அதன் பாதிப்பும் மேலாதிக்க மனோபாவமும் அதிக அளவில் பின்நிலையாகச் செயல்படுகின்றது. இவ்வெதிர் விளைவுகளை அதிகம் எதிர்கொள்பவர்கள் பொதுமக்களாகவே இருந்து விடுவார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு அதிகமாக அதிகமாக அதுவரை உருவாகியிருந்த இரட்சகருக்கான பிம்பம் சிதைவுகொள்ளத் தொடங்கும்போது எதிர்நிலை மனோபாவமும் உருவாகிவிடுகின்றது. இவை ஏற்கனவே பொறியாக உள்ள எதிர்ப்பு சக்திகளுக்கு ஆதரவான நிலையாக மாறும்போது எதிர்ப்பு பெருஞ்சுவாலையாகவே உருவெடுத்துவிடும். ஆக்கிரமிப்பாளருக்கோ யாரையும் நம்பமுடியாத நிலை. எல்லாரையுமே எதிரியாகக் கொள்ளும் நிலையை தோற்றுவித்துவிடுகின்றது. இது இராணுவ ரீதியாக வெற்றி கொள்ளப்பட்டாலும் அரசியல் ரீதியான தோல்வியையே சுட்டுகின்றது. அந்நியப்படைகள் ஒரு மண்ணை ஆக்கிரமிக்கும்போது அந்த மண்ணின் விடுதலைக்கான விதையையும் தம்மோடு கூடக் கொண்டு சென்றுவிடுகிறார்கள். வரலாறு இதனை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அதிகாரத் திமிர் யோனிவாயில் காத்திருக்கும் மருத்துவிச்சியாகவே தொடர்ந்தும் இருக்கின்றது. இதைத்தான் ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகள் மீண்டும் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.
ஈராக்கிய மக்களின் சுதந்திரத்திற்காகவும் சபீட்சமான வாழ்வுக்குமானது என்று சொல்லப்பட்ட ஆக்கிரமிப்பால் ஈராக்கிய மக்கள் சதாம் உசேனின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட அதிக அவதூறுக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நாளாந்த செயற்பாடுகள் நிரூபிக்கின்றன.
அபிவிருத்தி வேலைகள் நடைபெறவில்லை. வேலையில்லாதாதோர் தொகை அதிகரித்துள்ளது. அதிகரித்துவரும் கொரிலாத் தாக்குதலால் அமெரிக்க பிரிட்டன் இராணுவத்தினருக்கு எவரையும் நம்பமுடியாத நிலை. தமது படைத்தளத் துப்பரவு வேலைக்குக்கூட ஈராக்கிய மக்களை அமர்த்திக் கொள்ள முடியாமல் பிலிப்பைன்ஸ் வேலையாட்களை நியமிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. ஈராக்கிய மக்களைப் பொறுத்தவரையில் ஈராக்கில் இப்போது வெளிநாட்டவர்களையே அதிகம் காணக்கூடியதாக உள்ளது. ஆக்கிரமிப்போடு சேர்ந்து நவீன கொலணித்துவமும் இணைந்துள்ளது.
ஈராக்கின் முக்கிய கவிஞர்களுள் SAADI YOOSSEF; MUDHAFFAR AL NANAB ஆகிய இருவரும் அடங்குவர். இருவரும் சதாம் உசேனின் கொடிய சித்திரவதைகளுக்கு உள்ளானவர்கள். இன்னமும் வெளிநாடுகளில் அகதிகளாகத்தான் வாழ்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் ஈராக்கிய இருப்பை ஆக்கிரமிப்பாகவே பார்க்கிறார்கள். சாதி யூசூப் தன் கவிதையில் இவ்வாறு கூறுகிறார்...
'குள்ள நரியின் முகத்தில்
காறி உமிழ்வேன்.
அவர்களது தேடுவோர் பட்டியல்களில்
காறி உமிழ்வேன்.
நாங்கள் ஈராக்கிய மக்களென
பிரகடனம் செய்வேன்.
நாங்கள் இநத மண்ணில்
எமது முன்னோர்களின் விழுதுகள்.."
ஈராக்கிய யுத்தம் முடிவடைந்து விட்டதென அமெரிக்க ஐனாதிபதி Nஐhர்ஐ; புஷ் வெற்றிப் பெருமிதத்துடன் அறிவித்தபோது அரசியல் அறிந்தவாகள் தமக்குள் சிரிததிருப்பார்கள். உண்மையான யுத்தம் அதன் பிறகுதான் ஆரம்பமாகியது. அன்றிலிருந்து அமெரிக்க பிரிட்டன் படைகளின் இழப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்க் கொண்டே போகின்றது. அமெரிக்க பிரிட்டன் படைகளின் பிரசன்னம்தான் ஈராக்கிய மக்களை சினங்கொள்ள வைத்துள்ளது என உணர்ந்ததாலோ என்னவோ ஏனைய நாடுகளின் பிரசன்னம் தமது படைகளின் இழப்பை குறைக்குமென கருதியதாலோ என்னவோ அமெரிக்கா ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் அமைதிகாக்கும் படைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.நா சபையை மீறி அதன் பொருத்தப்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய அமெரிக்கா பின் அதனிடமே உதவி கோரவேண்டிய நிலைக்கு வந்தது.
'இன்றைய ஈராக்கிற்கு நமது(மேற்கின்) உதவிகள் தேவையாக இருக்கின்றது. நல்லெண்ணம் படைத்த எல்லா நாடுளும் இதற்கு உதவ முன்வரவேண்டும்"
'ஈராக்கின் அரசியல் சட்ட வரைவுகள் அதிகாரங்கள் வரைவதற்கு உதவியையும் தேர்தலை மேற்பார்வை செய்யும் பணியையும் (ஐநா) மேற்கொள்ள முடியும்"
இவ்வகையான வேண்டுகோள்களுக்கு யாரும் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. இதற்கு பதிலாக ஐ.நா. செயலாளர் நாயகம் யுத்தம் பற்றிக் கூறுகையில் 'சட்டத்திற்கு புறம்பான வகையில் படைகளைப் பாவித்தமை உலகின் சமாதானத்திற்கும் அதன் உறுதித் தன்மைக்குமான அடிப்படைச் சவால்" எனக் குறிப்பிட்டார். பிரான்சின் அதிபர் ஜக் சிராக் 'எல்லோருக்கமாக ஒருவன் தனியே செயல்பட முடியாது. சட்;டத்திற்குப் புறம்பான சமூக அராஐகத்தை ஒருவரும் ஒப்புக்கொள்ள முடியாது. பாதுகாப்பு சபையின் அனுமதியற்று மேற்கொள்ளப்பட்ட இந்த யுத்தம் பன்முகத் தன்மையை ஆட்டம் காண வைத்துள்ளது" என்றார்.
இந்த தலைகீழ் நிலைமை அமெரிக்கா கனவிலும் எதிர்பார்த்திருக்க முடியாது. இத்தோடு அமெரிக்க படைகளின் அதிகரிக்கும் மரணம் அமெரிக்க அதிகாரிகளை மட்டுமல்ல அமெரிக்க படைகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது.
ஈராக்கில் உள்ள அமெரிக்க படையணிகளின் மனநிலை மிக மோசமாகப் பாதிப்படைந்திருக்கின்றது. அவர்களுக்கு ஊட்டப்பட்ட கடமையுணர்வில் தியாகம் என்பதெல்லாம் பொய்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதென அவர்கள் உணருகிறார்கள். இதோ அமெரிக்காவின் 101வது விமானப் பிரிவைச் சேர்ந்த ரிம் பிறிட்மோர் (TIM PREDMORE ) கூறுகிறார்.
'நாங்கள் இங்கு இருப்பதற்கான நோக்கம் என்ன? எப்போதும் சொல்லப்பட்ட மனிதகுல அழிவு ஆயுதங்களுக்காக என்றால் அவைகள் எங்கே? பின்லாடனுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால்தான் சதாம் உசேன் ஆட்சியிலிருந்து துரத்தப்பட்டால் அதற்கான ஆதாரம் எங்கே?"
இக்குரல் முன்னர் பல்லாயிரக்கணக்கானவர்களால் அமெரிக்க போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தவர்களால் முன்வைக்கப்பட்டவைகள்தான். இப்போதுதான் சொந்தப் படையணிகளிடமிருந்தே குரல்கள் எழுந்துள்ளன. நாளாந்தம் பத்து தொடக்கம் பதினைந்து வரையிலான தாக்குதல்கள் இடம் பெறுகினறன. கொல்லப்படும் இராணுவத்தினர் தொகை அதிகமாகிக் கொண்டே போகின்றது. நிக்சன்ää றீகன்ää கிளிங்ரன் நிர்வாகத்தில் வேலை செய்த டேவிற் Nஐர்யன் (DAVID GERGEN) நியுயோhக் ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறுகையில் 'வியட்னாம் யுத்தத்திற்கு பிறகு இப்பொழுதுதான் நாம் இறந்தவர்களை எண்ணிக்கொண்டிருக்கின்றோம்" என்றார். இப்போது வெள்ளை மாளிகை அமெரிக்காவிற்க அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படும் இராணுவ வீரர்களின் சடலங்களை தொலைக்காட்சிகள் போன்ற உடகங்களில் காண்பிப்பதற்க அனுமதி  மறுத்துள்ளது. நாட்டின் வீரனாக தேசியக் கொடியால் நமது நாட்டு வீரர்களைப் பார்த்து பெருமிதம் கொள்ளும் வாய்ப்பும் கூட மறுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கொல்லப்பட்ட ஆர்ரிமஸ் பிராஸ்பீல்ட் (ARTIMUS BRASS FIELD) என்ற 22 வயது இராணுவ வீரனின் தந்தை கரி ஆர்ரிமஸ் (CARY ARTIMUS) இவரும் ஒரு முன்னாள் இராணுவ வீரர் நாட்டிற்காக தன்மகன் ஆற்றிய சேவையையிட்டுப் பெருமிதம் கொள்கிறார். ஆனால் 'தனது மகனின் வீரம் நல்ல செயல் ஒன்றிற்காகப் பயன்பட்டுள்ளதா என்பதில் சந்ததேகமே" கொள்கிறார்.
இன்று அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் ஈராக்கிய மக்களின் எதிர்ப்பு நடிவடிக்கைகளைப் பயங்கரவாதம் என்று அழைத்த போதிலும் ஈராக்கின் விடுவிற்புக்கான ஆரம்ப நிலைகள் என்றே கருதப்படுகின்றது. வியட்நாமில் அமெரிக்காää அல்ஐிரியாவில் பிரான்ஸ்ஆப்கானிஸ்தானில் இரசியா இலங்கையின் தமிழ்ஈழப் பகுதிகளில் இந்தியா எதிர்கொண்ட பதிலைத்தான் ஈராக்கிலும் அமெரிக்கா எதிர்கொள்ளப்போகின்றது. ஆக்கிரமிப்பாளர்களும் கொலணித்துவவாதிகளும் நிலையாக இருந்ததில்லை. நிலையாக இருந்தவர்கள் அந்த மண்ணின் மக்களே. ஆக்கிரமிப்பாளன் தன்னோடுகூட எடுத்துச் சென்ற சுதந்திர விதை உரிய காலத்தில் முழு உருவாக வெளிவந்தே தீரும். இது அதிகார அமர்வுகளுக்கு புரியாத மர்மச் சமன்பாடு.

 


     இதுவரை:  24799604 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3529 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com