அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பிரான்ஸ் 'தமிழ் சஞ்சிகைகள்'ஒரு பதிவு-II   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.கலைச்செல்வன்  
Friday, 06 May 2005

(சென்ற வண்ணச்சிறகில் இடம்பெற்ற க.கலைச்செல்வனின் கட்டுரையின் தொடர்ச்சி)

பிரான்ஸ் 'தமிழ் சஞ்சிகைகள்' ஒரு பதிவு - I


தமிழ்த்தென்றல்

1987ம் ஆண்டு சித்திரை முதல் ஆவணி வரை இலக்கிய இதழ்கள் மட்டுமே வெளியாகியது. இதன் ஆசிரியராக மரியயோசப் நாயகம் அவர்கள் கடமையாற்றினார்.சகல இதழ்களும் 50 பக்கங்களை கொண்ட கையேழுத்திலான போடடோகொப்பிப் பிரதியாக வெளிவந்தள்ளது. எந்த விதமான அரசியல் தன்மையும் அற்ற சஞ்சிகைகளும் சமயக் கட்டுரைகளும், எண் சாத்திரம்,குழந்தைகளுக்கான அறிவுக்கதைகள், விகடத்துணுக்குகள் மற்றும் சிறுகதை, கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

புது வெள்ளம்

பிரான்ஸில் வெளிவந்த சகல அரசியல்,இலக்கியச் சஞ்சிகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நோக்கத்தோடு வெளிவந்த ஒரே ஒரு சஞ்சிகை "புதுவெள்ளம்" ஆகும்.

புங்குடுதீவு நீர்வள அபிவிருத்தச் சபையின் வெளியீடாக இந்த சஞ்சிகை 1988 ஆண்டில் வெளிவந்தது. 72 பக்கங்களை கொண்ட இதழாக, இச் சஞ்சிகை இரு இதழ்களையே வெளியிட்டது. பதிவுசெய்யப்படாத நிறுவனமாக இருந்ததால் 3வது இதழ் தயாராக இருந்த நிலையில் அதன் எழுத்துப் பிரதிகள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இச்சஞ்சிகையை வெளியிடுவத சாத்தியமில்லாது பொய் விட்டது என்று அதன் ஆசிரியராகக் (சஞ்சிகையில் பெயர் குறிப்பிடப்படவில்லை) கடமையாற்றிய திரு.கனகசபை அரியரட்ணம் அவர்கள் கூறுகிறார். இச்சஞ்சிகையின் அனைத்து ஆக்கங்களும் புங்குடுதீவை மையமாகக் கொண்ட நீர்வள அபிவிருத்தி சம்பந்தமான கட்டுரைகள், கதைகள், கவிதைகள் ஆகியவற்றை கொண்டு அமைந்துள்ளது

இந்த இரண்டு இதழ்களும் புங்குடுதீவின் சூழல், நீர்நிலைகள்,கடல்,புழுதி,கலாச்சாரம்-பண்பாடுகள் அனைத்தையும் எம் கண்முன்னே நிறுத்துகிறது. இதில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையாவும் பயன் மிக்கவையாகும்.

குமுறல்

இது தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரெஞ்சுக் கிளையின் வெளியீடாகும். 1986-87 காலபகுதியில் கிட்டத்தட்ட 35 பக்கங்களை கொண்ட இதழாதாக இது வெளிவந்தது. திரு. காசிலிங்கம் இதன் ஆசிரியராகப் பணியாற்றினார். இச் சஞ்சிகையில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்ந்த அரசியல் கட்டுரைகளும் மற்றும் இலங்கைச் செய்திகளும் சில விடுதலைக் கவிதைகளும் காணப்படுகின்றது.

தேடல்

இயக்க சார்பு சஞ்சிகைகளும் மறுபுறம்  அரசியல் ஈடுபாடு அற்ற இலக்கிய சஞ்சிகைகளும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் எந்த ஒரு இயக்கத்தையும் சாராதருஅதே சமயம் இயக்கங்களினதும் அரசினதும் மக்கள் மீதான அடக்குதுறை, மனித உரிமை மீறல் போன்றவற்றை இனம் காட்டும் நோக்கோடு "தேடல்" வெளிவரத்தொடங்கியது.

தை 1988 மதல் மார்கழி 1988 வரை மக்கள் கலை இலக்கிய அமைப்பூபிரான்ஸின் வெளியீடாக இச் சஞ்சிகையின் 7 இதழ்கள் வெளியாகி ஒரு வருடத்திற்குள் இச் சஞ்சிகை நின்று விட்டது. இதழ்களின் ஆக்கங்கள் தட்டச்சு மூலம் பதிவு செய்யப்பட்டு 52 பக்கங்களைக் கொண்ட போட்டோ கொப்பிப் பிரதிகளாக வெளிவந்தன

அரசியல் தத்துவார்த்த கட்டுரைகள்ஈ இயக்கங்களின் அராஜகம் மற்றும் வெளிநாடுகளின் பற்றிய கட்டுரைகள்,உலக செய்திகள், பெண்விடுதலை ஆக்கங்கள் என்று பல்துறை சார்ந்த கட்டுரைகளை இச் சஞ்கிகையில் காண முடிகிறது. இச் சஞ்சிகையில் கலைச்செல்வன், கலாமோகன், அருந்ததி, சுகன், இளங்கோவன், தேவதாஸ், கெளதமன், எஸ்.அகஸ்தியர், பொ.ரவிச்சந்திரன், கோவை றைதன், உமாகாந்தன், சபாலிங்கம் போன்றவர்களின் வேறு பலர் புனை பெயர்களிலும் எழுதி உள்ளனர்.

பள்ளம்

தேடல் சஞ்சிகை நின்றதை அடுத்து 1990ம் ஆண்டு தை மாதம் இரு மாத இதழாக வெளிவந்தது. அதன் ஆசிரியர்களாக கலைச்செல்வன், சுகன் ஆகியோர் செயற்ப்பட்டனர். மற்றும் கலாமோகனட.சத்தியன், மணிவண்ணன் ஆகியோரும் இச் சஞ்சிகையில் எழுதினர். இயக்கங்களிலும் சகல அடக்கு முறையாளர்களையும் அம்பலப்படுத்த வேண்டும் என்பது இதன் நோக்கமாக இருந்தது

இந்த நொக்கத்தினால் வந்த இடையூறுகளின் நிமித்தம் இது இடைநிறுத்தப்பட்டது. இது வரை எந்த இயக்த்தையும் சாராது சகல இயக்கங்களின் அராஜககங்களையும் வெளிப்படுத்த வேண்டம் என்ற நோக்கில் பிசிறாது செயற்ப்பட்ட சஞ்சிகை இது ஒன்றாகவே இனம் காணப்பட்டது

இயக்க விமர்சனக் கட்டுரைகளும், மற்றும் புகலிடத்தை மையமாக கொண்ட சிறு கதைகள்ஈ கவிதைகளும் மற்றும் சர்வதேச நிதியமைப்பின் பங்கு பற்றிய மறுபிரசுரக் கட்டுரையும் இச் சஞ்சிகையில் இடம் பெற்றது.

ஆதங்கம்

1990ம் ஆண்டு தை மாதம் அரசியல் இலக்கியச் சஞ்சிகையாக ஓரே ஒரு இதழ் மட்டுமே வெளிவந்தது. 24 பக்கங்களை கொண்ட கையேழுத்தினாலான போட்டோக் கொப்பி பிரதியாக வெளிவந்துள்ளது

இதன் ஆசிரியராகத் திரு.மகேந்திரன் அவர்கள் (சஞ்சிகையில் குறிப்பிடவில்லை) கடமையாற்றியதாக அறிய முடிகின்றது. ஓர்  அறிமுகம் கட்டுரையோடு "பிரான்ஸில் அந்நியர்களின் எதிர்காலம் எனும் கட்டுரையும், ஜேர்மனியின் மதில் உடைப்புப் பற்றிய செய்திக் கட்டுரையும் மற்றும் ஈழத்துச் செய்திகள் என்பவற்றுடன் "வோல்தயர்" ( ) இன் சிறுகதையும் வாசுதேவனால் மெதழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

சிந்து

1989ம் ஆண்டு சித்திரை மாதம் தொடங்கி 1991 ம் ஆண்டு சித்திரையுடன் 14 இதழ்கள் வெளிவந்து நின்று விட்டது. சி.உதயகுமார் அவர்கள் பிரதான ஆசிரியராகவும் இடையே காந்திநேசன்,சு.கருணாநிதி அவர்களை இணையாசிரியராகவும் கொண்டு கலை,இலக்கிய இதழாக வெளிவந்தது. ஆரம்பத்தில் மாதத்திற்கொன்றாகவும், இடையே இருமாத இதழாகவும் வெளியாகிய  "சிந்து" பின் சில காலம் காணமல் போய் 6 மாதங்களின் பின் இறுதி இதழ் சித்திரை 91ல் மீண்டும் தலைகாட்டி மறைந்து போனது. இறுதி இதழ் தவிர்ந்த ஏனைய இதழ்கள் அனைத்தும் 38 பக்கங்களைக் கொண்ட போட்டோக் கொப்பிப் பிரதிகளானவே வெளிவந்தன. இறுதி இதழ் "பிரெஞ்சுத் தமிழ் இலக்கிய மன்றம்-பரிஸ்" வெளியீடாக வெளிவந்தது. இது மட்டும் அச்சுப் பிரதியில் வெளிவந்தது. (இந்தியாவில் அச்சடிக்கப்பட்டதாக தகவல்-இதழின் எந்த இடத்திலும் இது பதிவு செய்யப்படவில்லை)

இச்சஞ்சிகையில் சி.உதயகுமார்,சு.கருணாநிதி,காந்திநேசன், வேலணையூரான், எஸ்.ஆகஸதியர் நல்லைக் கண்ணன், இளந்திரையன், இரா.சிறி, பி.லோகதாஸ், மோகன், வாசுதேவன், பசுமைக்குமார், எம்.துரைராஜா, அஜித்குமார் ஆகியோரின் படைப்புக்கள் இடம் பெற்றன. மற்றும் பிரம்மராஜன்,சுஜாதா,ஆர்.கே.கண்ணன்,க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கே.டானியல், செ.கணேசலிங்கம், நா.பார்த்தசாரதி, டாக்டர் கி.மறைமாலை ஆகியோரது படைப்புகளும் மறுபிரசுரம் செய்யப்'பட்டுள்ளன.

பிரான்ஸில் வெளிவந்த  பெரும்பாலான சஞ்சிகைகளைப் போலவே அரசியலில் அதிக ஈடுபாடு இல்லாது இலக்கியத்திற்க்கு கூடியமுக்கியத்தவம் கொடுத்து இச் சஞ்சிகையின் சுய ஆக்கதாரர்கள் ஏறக்குறைய எல்லோருமே பிரான்ஸில் வசிப்பவர்களாகவே இருந்துள்ளனர்.

தமிழ்சுடர்

1991 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வெளியான இச் சஞ்சிகை மாதமொரு இதழாக நான்கு இதழ்களுடன் தன் ஆயுளைமுடித்துக் கொண்டுவிட்டது. இச்சஞ்சிகை சரவணையூர் விசு செல்வராசாவை ஆசிரியராகக் கொண்டு "உலக தமிழர் ஒன்றியத்தினால்" வெளியிடப்பட்டது.

ஆக்கங்கள் சில பிற சஞ்சிகைகளில் இருந்துபோட்டோ கொப்பி பண்ணியவையாகவும் ஏனைய ஆக்கங்கள் கணனி எழுத்திலுமாக அமைந்து காணப்படுகின்றது. அனைத்து இதழ்களும் 40 பக்கங்களைக் கொண்ட போட்டோக் கொப்பி பிரதிகளாகும். இதில் பி.வில்லயம், இ.சிவராசன், வி.சு.நாதன், திருமதி பவுலின் செல்வராசா , ஏர்வாடி எஸ்.ராதாகிருஸ்ணன்,ஆர்.ஈ.சந்திரசேகரம், மீசாலையூர் சுதந்திரன், க.வி.குமார், ப.தில்லைச்செழியன், பாரிஸ் ஜமால், நல்லைக் கண்ணன், ஜெயரதன், போன்றவர்கள் எழுதி இருக்கின்றார்கள்.

பிரான்ஸிலிருந்து இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகை பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன:

ஓசை

1990 ஆண்டு தை மாதம் முதல் "பாரிஸ் கலை இலக்கிய வாசகர் வட்டத்தின்" கலை இலக்கிய வெளியீடாக மாதத்திற்கு ஒரு முறையாக இச் சஞ்சிகை தொடர்ந்த வெளிவந்து கொண்டிருக்கிறது. இது வரை 12 இதழ்கள் வெளிவந்துள்ளன.

சமர்

1991 தை முதல் ஒரு அரசியல் சஞ்சிகையாக காலாண்டிதழாக வெளிவருகின்றது. சில கவிதைகளையும் காணமுடிகிறது. இது வரை 8 இதழ்கள் வெளிவந்துள்ளன.

வான் மதி

1992 சித்திரை முதல் "கலையகத்தின்" அரசியல் கலை இலக்கிய வெளியீடாக தொடர்ந்த வெளிவருகின்றது. இதுவரை 5 இதழ்கள் வெளிவந்துள்ளன.

சிரித்திரு

1992ம் ஆண்டு மாசி மாதம் முதல் பிரெஞ்ச்-தமிழ் கலைஞர்கள் நட்புறவுப் பணிமனையின் வெளியீடாக, திரு.ஐ.துரைராஜா அவர்களை பிரதம ஆசிரியராக கொண்டு வெளிவரும் நகைச்சுவை இதழ். ஐரோப்பாவில் இருந்து வெளிவரும் ஒரே ஒரு நகைச்சுவை இதழ் இதுவாகும்.

மெளனம்

1993ம் ஆண்டு வைகாசி மாதத்தலிருந்து கலை இலக்கிய முத்திங்கள் இதழாக வெளிவருகின்றது.

முடிவுரை

புகலிட எழுத்தாளர்களில் இன்று சிலாகித்துக் கூறப்படும் பல முன்னணி எழுத்தாளர்களும் கவிஞர்களும் இந்த அற்ப ஆயுளோடு மறைந்து போன சிறு சஞ்சிகைகளின் பக்கங்களிலே தான் மலர்ந்துள்ளனர் என்ற உண்மை வலியுறுத்திக் கூறப்பட வேண்டிய ஒன்றாகும். புதிய புதிய எழுத்துக்களுக்குக் களம் அமைக்கவும், அரசியல் கலை இலக்கியத் துறையில் ஆக்கபூர்வமான கருத்துப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், இவை குறித்த விரிந்த தேடல்களை விஸ்தரிப்பதற்கும், புகலிட வாழ்க்கையின் சகல அம்சங்களையும் பதிவு செய்யவும் இன்றும் நிறைய நிறைய சஞ்சிகைகளின் தேவை சம் முன் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்களும், எதிர்புகளும் கூட  சஞ்சிகை முயற்ச்சிகளை நசுக்குவதற்கு மாறாக அவை மேலும் வளம் பெற்று வளர்வதற்கே வழிவகுத்துள்ளன என்ற ஆரோக்கியமான உண்மையையும் இச்சஞ்சிகைகளின் வளர்ச்சிச் சரத்திரம் பறை சாற்றி நிற்க்கிறது எனலாம்.

குறிப்பு

இக் கட்டுரை பிரான்ஸில் வெளியான தமிழ் சஞ்சிகைகள் பற்றிய வரலாற்றுப் பதிவு என்பதால் வெளியாகி நின்று போன சஞ்சிகை பற்றிய விபரங்களுக்கு கூடிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளத. தற்போது வெளிவந்த கொண்டிருக்கும் சஞ்சிகை பற்றிய வரிவான குறிப்புகள் இதில் இடம்பெறவில்லை. பல சஞ்சிகைகளில் ஆசிரியர்களின் பெயர்கள் குறிப்பிடாத போதும் எதிர்காலஆய்வாளர்களின் வசதிக்காக ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்களின் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளது. (ஜீலை 1993)


     இதுவரை:  24782965 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5885 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com