அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 24 April 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Thursday, 16 June 2005
பக்கம் 2 of 3
 

"இவ்வுலக ஊட்டங்களின்" தொனி முன்னர் குறிப்பிட்டதுபோல், எழுச்சியானது. "விழித்து விரைந்து சென்று பட்டுணர்ந்து அனுபவித்து இன்புறும் வாழ்க்கையெனும் போராட்டத்தில் இன்றே குதித்துவிடு" என்று இளைஞனுக்கு அழைப்புவிடும் சக்தி மிகுந்த
வார்த்தைகளினாலும் கருத்துக்களினாலும் புனித ஆக்கிரமிப்புச்
செய்யும் தன்மை வாய்ந்தது:"நத்தநாயல், உனக்கு நான் உத்வேகத்தை உபதேசிக்கிறேன்."
இது ஜீத்தின் அறைகூவல்.
யார் இந்த நத்தநாயல்?
வேறு யாருமல்ல, அது ஜீத்தேதான்.
எதிர்கால இளைஞனுக்கூடாக தான் மறுபிறப்பெடுத்து மீண்டும் மீண்டும் புதிய வாழ்க்கையை வாழத் துடிக்கும் வேகம் நிறைந்த அகத்தின் பேரவா.
"எனது இந்தப் புத்தகத்தை வாசித்தவுடன், அதை எறிந்துவிட்டுப்
புறப்படு. புறப்படும் ஆசையை என் புத்தகம் உனக்களித்திருக்குமென
எண்ணுகிறேன்.
எங்கிருந்தேனும் புறப்படல்.
உனது நகரத்தில் இருந்து, உனது குடும்பத்திலிருந்து, உனது
அறையிலிருந்து, உனது சிந்தனையிலிருந்து.....
எனது புத்தகத்தை கொண்டு செல்லாதே.
நான் மெனால்க் ஆக இருந்திருந்தால், உனது இடது கை அறியாது வலது கையைப் பற்றி உன்னை அழைத்துச் சென்றிருப்பேன். பின் பல நகரங்களைக் கடந்து, என் கையை விடுத்து "என்னை மறந்து விடு" என்று கூறியிருப்பேன். எனது புத்தகம் தன்னிலும் பார்க்க உன்னில் அக்கறை காட்ட உனக்குக் கற்பிக்கட்டும். பின்னர் உன்னிலும் பார்க்க
உலகத்திலுள்ள அனைத்திலும் அக்கறை காட்டக் கற்பிக்கட்டும்"
ஜீத்தின் பேருந்தல் நிதானமானது. மனித சக்தியின் எல்லையை
மறவாதது.
"நத்தநாயல், அனைத்து இடத்திலுமன்றித் தெய்வத்தை வேறெங்கும்
காணாதே"
என்று தனது புத்தக ஆரம்பத்திலேயே கூறி, மானிட நிபந்தனையின்
பலவீனத்தை வேரறுக்க முற்படுகின்றார்.
"மற்றவர்கள் எழுதுவதிலோ அல்லது பிரசுரிப்பதிலோ ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நானோ கசடறக் கற்றவற்றை மறந்து போகும் நோக்கில் மூன்று வருடங்களாகப் பயணத்தை மேற்கொண்டிருந்தேன்"
ஜீத் மற்றவர்களுக்கு இலவச ஆலோசனை சொன்னவரல்ல. ப+ட்டிய அறைக்குள் குந்தியிருந்து புத்தகங்களை வாசித்துக்;கொண்டு மற்றவர்களுக்கு "புறப்படு" என்று கட்டளையிட்டவரல்ல.
"கடற்கரை மணலின் இதம் காலுக்குச் சுகமானது என்று வாசிப்பதில்
நான் திருப்தியுறேன். என் கால்கள் அதை உணரவேண்டும்.
அனுபவத்தால் உணராத அறிவிலெனக்கேது பயன்"
என்று கூறியவர்.
கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்ற பாத்திரங்களின் அடிமண்டிகளைப் பெறுமானமாக்கி, அதையே கல்வியென்றும் போதிக்கும் "சமூக நலவாதிகளின்" பிடியிலிருந்து வேரறுந்து தொலைந்து போ என்று அன்புடன் சபிக்கும் ஆணைக்குரலில் தேங்கி நிற்பது அகங்காரம் அல்ல. அக்கரைக்குப் போய் வந்த அனுபவத்தால் ஏற்பட்ட புளகாங்கிதம்.
"கற்றதை மறப்பதென்பது கடினமாகவும், தாமதமாகவுமே எனக்குச் சாத்தியமானது. மனிதர்களால் எனக்குத் திணிக்கப்பட்ட அனைத்துக் கல்விகளிலும் எனக்கு மிகவும் உபயோகமாய் இருந்தது இக் கற்றலை மறத்தலேயாகும். இதில்தான் எனது உண்மையான கல்வியே ஆரம்பமானது"
தப்பபிப்பிராயங்களுக்கும் தனிமனித வழிபாடுகளுக்கும் மேடைக் கூப்பாடுகளுக்கும் தலை வணங்கும் தலைமுறைக்கு வழங்கக்கூடிய புனித ஆலோசனை இதைத்தவிர வேறெதாக இருக்கமுடியும். "அனைத்துப் பெறுமானங்களுக்குமான மாற்றுப் பெறுமானங்கள்" என்ற நீட்சேயின் கோட்பாட்டுப் புனருத்தானம் இங்கும் இலகுவான
முறையில் ஜீத்திடமிருந்து வெளிப்படுகின்றது. இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்பட்ட இரவற் கோட்பாடுகளைச் சுமந்துகொண்டு செல்லும் மனிதனை அழைத்து "பாரத்துடன் எங்கே போகின்றாய் பாவி மனிதனே? இறக்கி வைத்துவிட்டு ஒரு கணம் நின்று இயற்கையிடம்
விபரம் கேள்"
என்கிறார் ஜீத்.
"உன் சிந்தனையிலிருந்தும் விடுபட்டுப் போ" என்ற ஜீத்தின் அழைப்பின் தாற்பரியம் என்ன?
ஒருவன் தன் சிந்தனையில் இருந்து நிரந்தரமாக இறந்து புதிய சிந்தனைகட்குள் பிறந்து கொண்டேயிருக்கிறான். சிந்தனையின் வளர்ச்சி ஒருவனை கோட்பாடுகளுக்குள்ளும், சித்தாந்தங்களுள்ளும் சிறை வைப்பதில்லை. அனுபவங்களின் ஆற்றல் அனைத்துச்
சிறைகளையும் உடைத்தெறிந்து அறிவிற்கு விடுதலையளிக்கின்றது
என்பதேயாகும்.
அனுபவங்களின் வாயிலாகப் பெறும் அறிவு, அறிவின் வாயிலாகப் பெறும் ஆனந்தம், ஆனந்தநிலையில் அழிந்துபோகும் அனுபவத்தின் சுவடுகள், மீண்டும் புதிய அனுபவங்களைத் தேடிய வேட்டைப் பயணம்.
"நத்தநாயல், மீண்டும் பிறந்து வாழ்விற்குள் வா!
நத்தநாயல், என் அகத்தின் வெம்மையை உனக்குவந்தளிக்கிறேன்,
எடுத்துச்செல்.
நத்தநாயல், நான் உனக்கு உத்வேகத்தை உபதேசிக்கிறேன்.
நத்தநாயல், உன்னை ஒத்த சூழலிலே ஒருபோதும் தனிக்காதே.
சூழலைப் போன்று நீ மாறிவிட்டாலோ, அன்றில் சூழல்
உன்னைப்போன்று மாறிவிட்டாலோ, அங்கு அறிய உனக்கேதுமில்லை.
விட்டுச் செல். உன் குடும்பத்தையும், உன் அறையையும்,
உன் இறந்த காலத்தையும் தவிர ஆபத்தானவை உனக்கேதுமில்லை.
ஒவ்வொன்றிலுமிருந்தும் கிடைக்கும் அனுபவத்தை மட்டும்
பெற்றுக்கொள். அதிலிருந்து பிரவகிக்கும் போதையிலே மீண்டும்
அதையிழந்துவிடு."
"இவ்வுலக ஊட்டங்களைத"; தொடரும் பின்னிணைப்பான "புதிய
ஊட்டங்கள்"(
கூடிய நிதானத்துடன், உத்வேகம் தணிந்து) மீண்டும்
அதே கருத்துக்களை வலியுறுத்துகின்றது.
"உலகின் ஓசை என் செவிகளுக்கு எட்டாதபோதும், என் உதடுகள்
அங்கு பனித்துளிகளைச் சுவைக்க முடியாதபோதும் வரவிருப்பவனே,
சிலவேளை நீ என்னை வாசிக்கக் கூடுமென்பதால், உனக்காக இந்தப்
பக்கங்களை எழுதுகிறேன். ஏனெனில் வாழ்தலைப்பற்றி சிலவேளை நீ
போதியளவு ஆச்சரியம் கொள்ளாது விடக்கூடும். வாழ்க்கை
என்ற இந்த மகா அதிசயத்தை நீரசிக்காது விடக்கூடும்"
"இப்போது என் புத்கத்தை தூக்கியெறிந்து விடு நத்தநாயல்!
அதிலிருந்து விடுபடு. என்னை விட்டகன்று போ. தொந்தரவு செய்யாது,
வழிமறியாது, என்னை விட்டகன்று போ. நான் உன்மீது கொண்ட
உயர் அன்பு உன்னை ஆக்கிரமிக்கின்றது. யாருக்கோ
கல்வியூட்டுகிறேன் என்று பாசாங்கு செய்து சலித்துவிட்டேன்.
நீயும் என் போன்றே இருக்கவேண்டும் என நான் விரும்பினேன் என்று
எப்போது கூறினேன்?
நீ வித்தியாசமாக இருப்பதாலேயே நான் உன்மீது அன்பு காட்டுகிறேன்.
வித்தியாசமாக உன்னில் உள்ளவற்றையே நான் நேசிக்கிறேன்.
கற்பித்தல்!
என்னையன்றி வேறு யாருக்கு நான் கற்பிக்க முடியும்?
நத்தநாயல்.
உனக்கு யான் ஏது கூறுவேன்?
இடையறாது கற்றேன். இன்னமும் தொடர்கிறேன்.
ஆற்ற முடிந்த காரியத்திலன்றி வேறெதிலும் நான் என்னைக்
கணிப்பிட்டறியேன்.
என் புத்கத்தை எறிந்து விடு நத்த நாயல்.
நத்தநாயல், அதில் எவ்வித திருப்தியுமுறாதே.
உனது உண்மை உனக்காக இன்னொருவரால் கண்டுபிடிக்கப்படும்
என்று நம்பாதே.
அனைத்தைக் காட்டிலும் அவ்வாறான கருத்தின்மீது வெட்கம் கொள்.
உனக்காக நான் தேடும் உணவை உண்ண உனக்கு பசியெடுக்காது.
உனக்காக நான் போடும் படுக்கையில்உனக்கு உறக்கம் வராது.
என் புத்தகத்தை எறிந்து விடு.
வாழ்வின் ஆயிரமாயிரம் சாத்தியக் கூறுகளில் அது வெறுமனே ஒன்று
மட்டும் என்பதை உணர்ந்து கொள்.
உனது பாதையை நீ தேடு.
உனக்காக மற்றவர் போட்ட பாதையிலே நீ செல்லாதே.
உன் போன்றே யாராலும் எழுதக் கூடுமெனில் நீ அதை எழுதாதே.
உன் போன்றே யாரும் ஒன்றைச் செய்ய முடியுமெனில் நீ அதைச்
செய்யாதே.
உன் போன்றே யாரும் ஒன்றைக் கூற முடியுமெனில் நீ அதைக்
கூறாதே.
உன்னில் நீ à®‰à®³à¯à®³à¯à®°
உணர்ந்தவற்றிலன்றி வேறெங்கும் உன்னை நீ
பிணையாதே.
ஆ !



மேலும் சில...
அல்பிரட் து மியூசே
குயிஸ்தாவ் ப்ளோபேர்
எமில் ஸோலா
விக்டர் ஹியூகோ
சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ல் போதலயர்.
பல்ஸாக் அல்லது நுண்விபரிப்பின் அறுதிப் பலம்.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 24 Apr 2024 03:43
TamilNet
HASH(0x56252104e038)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 24 Apr 2024 03:43