அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 08 June 2026

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் 33-34
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
தொடர்பு
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் 33-34   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 31 August 2005

33.

இந்தச் சம்பவத்திற்குப் பின் சுந்தரலிங்கம், பதஞ்சலி வீட்டுக்குச் சாப்பிடச் சென்றாலும் முன்போல் அங்கு அதிகம் தங்குவதில்லை. சிலவேளைகளில் அந்தச் சமயங்களில் கதிராமன் அங்கு இருக்கமாட்டான். பதஞ்சலி வழமைபோலவே அந்த நேரங்கிளலும் சுந்தரத்தை அன்போடு வரவேற்று உணவைப் பரிமாறுவாள். அவன் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவ வேண்டுமென்று பறிப்பாள். காட்டின் அமைதியான சூழலில் அந்தச் சின்னக் குசினிக்குள் அவனுக்கு மிக அண்மையிலிருந்து பதஞ்சலி உணவளிக்கையில் அவனுடைய மனம் அலையாய ஆரம்பித்துவிடும். அவளை நிமிர்ந்து பார்க்காமல், அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பாடசாலைக்கு வந்துவிடுவான். படித்து நாலுபேருடன் பழகி நாகரீகமடைந்திருந்த சுந்தரத்திற்குத் தன்மீதே நம்பிக்கை இருக்கவில்லை. 'ஏன் வாத்தியர் சாப்பிட்ட உடனை ஓடுறியள்?" என்று அவள் தடுத்தாலும் நிற்காமல் வந்துவிடுவான். 'வாத்தியார் கனக்கப் படிச்சவர். படிச்ச ஆக்கள் இப்பிடித்தானாக்கும், நெடுக யோசிச்சுக்கொண்டு திரிவினம்!" என்று பதஞ்சலி தனக்குள் நினைத்துக் கொள்வாள். தண்ணீருற்றில் அவள் படித்த சைவப்பாடசாலையின் பெரியவாத்தியார் அப்படித்தான் எந்தநேரமும் சிந்தனை வாய்ப்பட்டிருப்பார்.

பொழுதும் போகாமல் புத்தகங்களிலும் சிரத்தை செல்லாமல் மனப்போராட்டங்களில் சதா உழன்றுகொண்டிருந்த சுந்தரம், இப்படியான சமயங்களில் கோணாமலையரின் வீட்டுக்குச் செல்வான். பாலியார் சுந்தரத்தைத் தன் மகனாகவே எண்ணிப் பாசங்காட்டினாள். தினம் கதிராமன் வீட்டிற்குச் சாப்பாட்டுக்குச் சென்றுவரும் சுந்தரத்தைப் பார்ப்பதே, கதிராமனையும் பதஞ்சலியையும் காண்பது போலிருந்தது பாலியாருக்கு. மலையர் அங்கு இல்லாத சமயங்களில் சுந்தரம் அங்கு வந்தால், இன்றைக்கு என்ன கறி? என்பது தொட்டுப் பதஞ்சலி முழுகாமல் கொள்ளாமல் இருக்கிறாளா என்பது வரையில் துருவித்துருவி அறிந்துகொள்வாள். எல்லையற்ற பிரிவுத்துயரில் ஆழ்ந்திருந்த அவளுக்குச் சுந்தரத்தின் வருகை மிகவும் ஆறுதலையளித்தது.

  
34.

நாட்கள் கழிந்தன. வயலிலே வேலையில்லை. கதிராமன் அடிக்கடி காட்டுக்கு நாய்களையும் கூட்டிச் சென்று உடும்பு, தேன் முதலியவற்றைக் கொண்டு வருவான். இன்றும் அவன் மத்தியானம் சாப்பிட்டுவிட்டுக் காட்டுக்குப் புறப்படும் சமயம் சுந்தரமும் பாடசாலைவிட்டு சாப்பாட்டுக்காக வந்திருந்தான். சுந்தரத்தின் கையில் மாதசஞ்சிகை ஒன்று காணப்பட்டது. அதைக் கண்ட பதஞ்சலி ஆவலுடன் வாங்கிப் பார்த்தாள். வழவழப்பான அதன் அழகிய அட்டைப்படத்தைப் பார்த்தவள், வாய்க்குள் எழுத்துக்கூட்டி அந்தச் சஞ்சிகையின் பெயரை வாசித்தாள். அதைக் கண்ட சுந்தரம், 'பதஞ்சலிக்குப் புத்தகம் வாசிக்கத் தெரியுமே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது, 'ஓ! அவள் நாலாம் வகுப்புப் படிச்சவள்!" என்று கதிராமன் பெருமையோடு பதில் கூறினான்.

கதிராமனின பதிலைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே, 'நீ படிக்கேல்லையோ கதிராமு?" என்று சுந்தரம் கேட்டான். 'நான் கைக்குழந்தையாய் இருக்கேக்கை அப்பு, அம்மா இஞ்சை வந்திட்டினம். இஞ்சை எங்காலை பள்ளிக்குடம்! இந்தத் தண்ணிமுறிப்புக் காடுதான் என்ரை பள்ளிக்குடம்!" என்று சிரித்தபடியே பதில் சொல்லிய கதிராமனை ஏறிட்டுப் பார்த்தான் சுந்தரம். கள்ளமில்லாத உள்ளம். அமைதியான குணம். ஆரோக்கியம் ததும்பும் தேகம். தன்னம்பிக்கையுடன் ஒளிவீசும் கண்கள். எந்தப் பல்கலைக்கழகமுமே இவற்றையெல்லாம் ஒருவனுக்குக் கற்றுத்தர முடியாது. இந்த இருண்ட காடுகள்தானா இவனுக்கு இத்தனை சிறப்புக்களையும் வழங்கியிருக்கின்றன என்று ஒருகணம் வியந்துபோனான் சுந்தரம்.

  'வாத்தியார்! சாப்பிட்டிட்டுப் பதஞ்சலிக்கு உந்தப் புத்தகத்தை வாசிக்கக் காட்டிக் குடுங்கோ! அவளெண்டாலும் வடிவாய் எழுத, வாசிக்கத் தெரிஞ்சிருக்கிறது நல்லதுதானே!" என்ற கதிராமன், 'சரி எனக்கு நேரமாகுது! நான் காட்டுக்குப் போறன்!" என்று விடைபெற்றுக் கொண்டான்.

   சுந்தரத்திற்கு சோறு பரிமாறும் வேளையிற்கூடப் பதஞ்சலி அந்தச் சஞ்சிகையை வைத்துக்கொண்டு, படங்களைப் பார்ப்பதும் எழுத்துக்கூட்டிப் படிப்பதுமாக இருந்தாள். புதியதொரு விளையாட்டுப் பொம்மையைக் கண்ட குதூகலம் அவள் முகத்தில் தெரிந்தது. சாப்பிட்டானதும் மால் திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டான் சுந்தரம். மண்போட்டு உயர்த்தி, பசுஞ்சாணமும் முருக்கமிலைச் சாறும் கலந்து மெழுகப் பெற்றிருந்த அந்தத் திண்ணை தண்ணென்றிருந்தது.

   சட்டிபானையை மூடிக் குசினியைச் சுத்தப்படுத்திக் கைகளை அலம்பிக்கொண்டு, மாலுக்கு வந்த பதஞ்சலி, திண்ணையின் கீழே அமர்ந்துகொண்டாள். மிகவும் ஆர்வத்துடனும் பயபக்தியுடனும் புத்தகத்தைத் திண்ணையின்மேல் வைத்து விரித்த அவளைக் கூர்ந்து கவனித்தான் சுந்தரம். தற்போதுதான் கழுவப்பட்ட அவளுடைய சிவந்த கைகள், கரும்பச்சை நிறமான திண்ணையின்மேல் செந்தாமரை மலர்களைப் போன்று விரிந்திருந்தன. படங்களைப் பார்த்த பதஞ்சலி, 'என்ன வாத்தியார் இது பாடப்புத்தகமே?" என்று சந்தேகத்துடன் கேட்டாள். 'இல்லை பதஞ்சலி! இது கதைப் புத்தகம். சின்னக் கதையளும், வேறை, பாட்டுக்கள், கட்டுரையளும் உதிலை கிடக்கு!" என்று சுந்தரம் சொன்னதும், ' ஆ! கதைப் புத்தகமே! எனக்கு ஒரு கதையை வாசிக்கக் காட்டித் தாருங்கோ வாத்தியார்! கதை கேக்கிறதெண்டால் எனக்குச் சரியான விருப்பம்!" என்று களிப்புடன் கூவினாள் பதஞ்சலி.

  சுந்தரம் அந்தச் சஞ்சிகையை வாங்கி அதில் இருந்த ஒரு கதையைக் காட்டி, 'எங்கை இதை வாசி பாப்பம்!" என்றான். அவளுக்கு மிகவும் அருகே, வாழைத்தண்டு போன்றிருந்த அவளுடைய உடலின் இளமை மணத்தை நுகரும் அளவுக்கு நெருக்கமாக இருந்த சுந்தரலிங்கம், தான் மனனம்செய்து மனதில் பதிக்கமுயன்ற 'பதஞ்சலி என் தங்கை!" என்ற சொற்றொடரை அறவே மறந்துபோனான்.

   அவள் மனதுக்குள் எழுத்துக்கூட்டிக் கதையின் தலைப்பைப் படித்தாள். 'இரண்டு உள்ளங்கள்" என்று ஒருதரம் சொல்லிப் பார்த்தவள், 'அதென்ன வாத்தியார் உள்ளங்கள்?" என்று வினவினாள். 'எங்கடை மனம் இருக்கெல்லே! அதுக்கு இன்னொரு பேர்தான் உள்ளம்!" என்று சுந்தரம் விளக்கியதும், அவள் மேலே தொடர்ந்து எழுத்துக்கூட்டி உரத்து வாசிக்க ஆரம்பித்தாள். சுந்தரம் அவள் வாசிப்பதையே கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தான். இளமை கொழிக்கும் அவள் முகத்தின் வண்டுபோன்ற கருவிழிகள் அங்குமிங்கும் அசைந்த அழகு அவன் மனதை ஈர்த்தது.

  கதையின் முற்பகுதி எளிமையான சொற்களால் ஆக்கப்பட்டிருந்ததால், வசனங்களைப் படிக்கையிலேயே அவள் ஒரளவுக்கு அர்த்தங்களைப் புரிந்துகொண்டாள். இரண்டாவது பந்தியில் காதல் என்ற வார்த்தை வந்தபோது, அவள் நிமிர்ந்து சுந்தரத்தைப் பார்த்து, 'காதலெண்டால்?" என்று கேட்டாள். அவனுக்குச் சட்டென்று பதில் கூறத் தொயவில்லை. அவனையே பார்த்த அவள், அவனுடைய பதில் வரத் தாமதமானதும், 'என்ன? வாத்தியாருக்கே தெரியாதோ!" என்ற கேலியாகச் சிரித்தாள். 'காதல் எண்டால் கலியாணம் முடிக்கமுதல் ஆம்பிளையும் பொம்பிளையும் ஒருதரை ஒருதர் விரும்பியிருக்கிறதுதான்!" என்று சுந்தரம் விளக்கியபோது, 'எல்லாரும் கலியாணம் முடிக்கமுதல் ஒருதரை ஒருதர் விரும்புகினமே?" என்று சந்தேகம் நிறைந்தவளாய்க் கேட்டாள் பதஞ்சலி. தண்ணிமுறிப்புக்கு வந்தபின் பாலியார் மூலமாகக் கதிராமன் பதஞ்சலியினுடைய கதையை அறிந்திருந்த சுந்தரலிங்கம், ' ஏன்? நீயும் கதிராமனும் கலியாணம் முடிக்கமுதல் ஒருத்தரையொருதர் விரும்பியிருக்கேல்லையே! அதைத்தான் காதல் எண்டு சொல்லுறது!" என்று கூறியபோது, அவனுடைய குரல் சற்றுக் கம்மிப் போயிருந்தது. இப்படி அவன் சொன்னதும் அருவிபோலக் கலகவென்று சிரித்தாள் பதஞ்சலி! 'இல்லை வாத்தியார்! நாங்கள் கலியாணம் முடிக்கமுதல் இப்ப உங்களோடை கதைக்கிறது, சிரிக்கிறது போலைதான் அவரோடையும் கதைக்கிறனான்.... பின்னை அவரைக் கலியாணம் முடிக்கோணும் எண்டு நினைச்சுப் பழகேல்லை!" என்று கூறிவிட்டு, மீண்டும் சிரித்தாள் பதஞ்சலி. அவளுக்குத் தான் கதிராமனைத் திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் அவனோடு பழகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் சிரிப்பாகவும், வெட்கமாகவும் இருந்தது. இவளுடைய வெட்கம் கலந்த சிரிப்பு சுந்தரத்திற்குப் பெரிய புதிராக இருந்தது. அப்படியென்றால் பதஞ்சலி கதிராமனை முதலிலேயே விரும்பியிருக்கவில்லையா என்று எண்ணியவன், 'அப்ப உனக்குக் கதிராமனிலை விருப்பம் இல்லாமலே அவனை முடிச்சனி?" என்று கேட்டதற்கு, 'இல்லை வாத்தியார்! எனக்கு அவரிலை விருப்பம், விருப்பமில்லை எண்டில்லை.... அவர் வந்து தன்னை முடிக்க விருப்பமோ எண்டு கேட்டார். நான் ஒண்டும் பேசாமல் நிண்டன்.... பிறகு கலியாணம் முடிஞ்சுது!" என்று பதிலளித்த பதஞ்சலியின் முகம் நாணம் கலந்த மகிழ்ச்சியால் சிவந்திருந்தது. காட்டிலே புதையல் அகப்பட்டது போன்று கதிராமனுக்குப் பதஞ்சலி கிடைத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில், சுந்தரம் பெருமூச்சு விட்டுக்கொண்டான். பதஞ்சலி இவனுடைய நிலைமையைக் கவனிக்காது குதூகலம் நிறைந்த குறும்புடன் சட்டெனக் கேட்டாள். 'வாத்தியார்! நீங்கள் இன்னும் கலியாணம் முடிக்கேல்லைத்தானே? நீங்களும் ஆரோ ஒரு பொம்பிளையை இப்ப விரும்பிக் கொண்டிருக்கிறியளே?" எனப் பதஞ்சலி தன்னுடைய அகன்ற விழிகளை மலர்த்திக்; கேட்டபோது, சுந்தரத்தின் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போலிருந்தது. அவனுடைய கண்கள் சட்டெனக் குளமாகிவிட்டன. அதைக் கண்ட பதஞ்சலி கலங்கிப் போனாள். 'என்ன வாத்தியார் அழுறியள்?" என்று அவள் ஆதரவாகக் கேட்டபோது தன் உணர்ச்சிகளை மறைக்கப் பிரயத்தனப்பட்ட சுந்தரம் கரகரத்த குரலில், 'ஓம் பதஞ்சலி! நானும் ஒருத்தியை விரும்பிறன்தான்.... அது அவளுக்குத் தெரியாது..." என்று கூறிவிட்டு, வயல்வெளிக்கு அப்பால் தெரிந்த இருண்ட காட்டை நோக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கலங்கிய கண்களையும், கவலை தோய்ந்த முகத்தையும் கண்ட பதஞ்சலியின் விழிகளும் கலங்கிவிட்டிருந்தன. இயற்கையாகவே குதூகலமும், உற்சாகமும் நிறைந்தவளாய்ப் பதஞ்சலி இருந்தாலும், அவள் மிகவும் இளகிய இதயம் படைத்தவள். தன்னுடன் பழகும் எவர்மீதும் பாசத்தைச் சொரியும் அவள், அவர்களுடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அழுதுவிடக் கூடியவளாக இருந்தாள்.

  சில நிமிடங்களுக்குள்ளேயே தன் உணர்ச்சிகளைச் சாதுரியமாக மறைத்துக்கொண்ட சுந்தரம், அவளுடைய கலங்கிய விழிகளைக் கவனித்துவிட்டு, 'இதென்ன பதஞ்சலி குழந்தைமாதிரி!" என்று சிரித்தான். அவனுடைய முகத்தில் சிரிப்பைக் கண்டபின்தான் அவளுடைய துயரம் அகன்றது. 'ஒண்டுக்கும் கவலைப்படக்கூடாது, பயப்பிடக்கூடாது எண்டு அவர் எப்போதும் சொல்லுவார்... நீங்கள் ஏன் வாத்தியார் கவலைப்படுறியள்?" என்று பதஞ்சலி தனக்குத் தெரிந்தவரை ஆறுதல் கூறவும், 'சிச்சீ! எனக்கென்ன கவலை! ... நாளைக்கு மிச்சக் கதையை வாசிக்கக் காட்டித் தாறன்.... இப்ப எனக்கு வேறை வேலை இருக்குது ... நான் போறன்" என்று கூறிவிட்டு அவன் சென்ற பின்பும், 'வாத்தியார் ஏன் அழுதவர்?" என்று தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டாள் பதஞ்சலி. தன்னுடைய சின்னஞ்சிறு உலகத்தைவிட வெளியுலக விஷயங்களை அறிந்திராத பதஞ்சலியின் வினாவுக்கு விடையெதுவும் கிடைக்கவேயில்;லை. அதன்பின் அவள் அந்த நிகழ்ச்சியை மறந்துபோய்ப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, எழுத்துக்கூட்டிப் படிப்பதில் உற்சாகமாக ஆழ்ந்து போனாள்.

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 08 Jun 2026 10:49
TamilNet
18 May is not a day for empty remembrance. It is a day that tests whether Eezham Tamils will remain faithful to the political meaning of Mu'l'livaaykkaal and Vaddukkoaddai, or allow both to be folded back into a ?safer?language of accommodation. The issue is not whether formulas can be drafted. It is whether a people whose claim rests on homeland, sovereignty, and the insistence that Tamil political status was never validly surrendered should once again be pushed into recasting that claim as an internal arrangement within the very state whose legitimacy they dispute. That, in essence, is what lies behind the current push toward ?maximum devolution?and similar formulas. Rather than opening a new path, it risks drawing Eezham Tamils back into the constitutional grammar of containment.
Sri Lanka: 18 May is not for repackaging surrender


BBC: உலகச் செய்திகள்
Mon, 08 Jun 2026 10:49


புதினம்
Mon, 08 Jun 2026 10:49
















     இதுவரை:  28803192 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3232 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com