அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow பல்ஸாக் அல்லது நுண்விபரிப்பின் அறுதிப் பலம்.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பல்ஸாக் அல்லது நுண்விபரிப்பின் அறுதிப் பலம்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Monday, 14 November 2005

"Balzac himself always speaks of his characters as of natural phenomena, and when he wants to describe his artistic intentions, he never speaks of his psychology, but always of his sociology, of his natural history of society and of the function of the individual in the life of the social body. He became, anyhow, the master of the social novel, if not as the 'doctor of the social sciences', as he described himself, yet as the founder of the new conception of man, according to which 'the individual exists only in relation to society'." (Arnold Hauser in Social History of Art, vol. 4, 1962)

 
நொத்தாரிஸ் தொழிலை மகன் கற்க வேண்டுமெனத் தாய் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், பல்ஸாக் தாயின் விருப்பத்தையும் மீறி பத்தொன்பதாவது வயதில் தான் எழுத்தாளராக வரவிரும்புவதாகக் குடும்பத்திற்கு அறிவிக்கையில் அதற்கான ஆதரவு நலிந்ததாகவே இருந்தது. எதிர்ப்புக்கூடக் கிளர்ந்தது. ஆரம்பகால, புனைபெயரிலான எழுத்துகள் பெரும்வெற்றியையும் கொண்டுவரவில்லை. இருப்பினும் தொடர்ந்து வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்காக ஜனரஞ்சக எழுத்துகளில் தன்னை ஈடுபடுத்தும் பல்ஸாக் சில காலங்களின் பின் எடிற்றர் ஆகவும் பதிப்பாளராகவும் தொழிலில் ஈடுபட்டு மிகப்பெரிய கடனாளியாகிறார். அதனைத்தொடர்ந்து கடனை அடைப்பதற்கு வேறு வழியின்றிப் பத்திரிகைகளில் எழுதவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வரிஎண்ணிக்கையின் படி சம்பளம் கொடுக்கப்பட்டதால், போதுமானளவு சம்பாதிப்பதற்கும் கடனடைப்பதற்கும் ஏராளமாக எழுதவேண்டியிருந்தது.
பல்ஸாக் (1799-1850) 1936 க்குப் பின்னர் பல்ஸாக் எழுதிய நாவல்களில் அநேகமானவை பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் முதலில் தொடர் நவீனங்களாக வெளிவந்தவை. குறுகிய காலத்தில் ஏராளமான நாவல்களை எழுதிக் குவித்த பல்ஸாக்கின் எழுத்துகள் 19 ம் நூற்றாண்டின் பிரஞ்சுச் சமுகத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுபவை.
வாழ்பவர்களிடமிருந்து அனுபவங்களையும், காலத்திடமிருந்து சுவடுகளையும், காட்சிகளிடமிருந்து நுண் விபரங்களையும் களவாடி அவற்றையெல்லாம் காலத்தால் அழியாத இலக்கியமாக்கிய பல்ஸாக்கின் வாழ்வே மிகப்பெரிய இலக்கியம். பல்ஸாக்கின் நாவல்களைப் பற்றி எடுத்த எடுப்பில் சொல்லக்கூடிய ஒரு விடயம் அதில் காணப்படும் மிகையான நுண்விபரிப்புகள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதிக் காலத்திலான பிரஞ்சுச் சமுகத்தின் கட்டமைப்பு, அதன் கலைகலாச்சாரம், வாழ்முறை, சிந்தனைப்பண்பு, சமூக ஏற்றத்தாழ்வுகள், அரசியல் நிலப்பாடுகள், போன்றவற்றின் மீதான தாராளமான விபரங்களுடன் பின்னப்பட்டிருப்பவை பல்ஸாக்கின் நாவல்கள். அவரது பல நாவல்களில் மேற்தட்டு வர்க்க உறுப்பினர்களே பாத்திரங்களாகத் தோன்றினாலும், "தந்தை கோரியோ" போன்ற நாவல்களில் அவர் சாதாரண அடிமட்ட சமுகத்தையும் அதன் போராட்டங்களையும் மிகவும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
பல்ஸாக்கின் விபரிப்புப் பலத்தையும், கடின உழைப்பையும் கண்டு வியக்காத இலக்கியவாதிகள் இல்லை. அவர் ஒரு வீதியை விபரிக்கும் போது அதில் நடமாடுவது போன்ற பிரமையை வாசகருக்குக் கொடுத்துவிடும். ஒரு சுவரை விபரிக்கும் போது அதில் உள்ள சிறிய புள்ளிகூட பூதாகரமான பரிமாணம் அடைந்து வாசகரை வசீகரித்துவிடும். பாத்திரங்களின் தன்மைகள், அவர்களின் உடலியல், உளவியல் பாங்குகள் எல்லாம் பாத்திரங்களைத் தெளிவாக முன்னிறுத்துவதுடன் அவர்களுடன் சமகாலத்தில் வாழ்வது போன்ற எண்ணத்தை வாசிப்பவர்கள் மனதில் தோற்றுவித்து நாவலின் ஒரு பாத்திரமாக வாசகரை மாற்றும் பலம் வாய்ந்தன பல்ஸாக்கின் நாவல்கள். "தந்தை கோரியோ" எனப்படும், ஒரு தந்தையின் தியாக உணர்வை வெளிப்படுத்தும், நாவலை வாசித்து விட்டுக் கண்ணீர் சிந்தாதவர்கள் மிகக் குறைவு.
1839 ல் ஆரம்பித்து, பல்ஸாக் முழுமையாக வரையறுக்கும் இலக்கியத் திட்டம் அதுவரை கேள்விப்பட்டிராத, ஆச்சரியமான ஒன்று. அதாவது சமகாலப் பிரஞ்சு வாழ்க்கையை அதன் மொத்த வடிவங்களிலும் இலக்கியமாக்கிவிடுவது. முழுமையான ஒரு இலக்கிய வேலைப்பாட்டுத் திட்டம். இதற்காக எழுதிமுடிக்கப்பட வேண்டிய நாவல்களின் எண்ணிக்கை நூற்றி ஐம்பதாகவும், அவற்றில் பங்குகொள்ள வேண்டிய பாத்திரங்களின் எண்ணிக்கை நான்காயிரமாகவும் பல்ஸாக்கினால் வரையறை செய்யப்படுகிறது.
அளவு கணக்கற்றுக் காப்பியை அருந்தியவாறு, நாளொன்றுக்கு பதினைந்து தொடக்கம் பதினெட்டு மணித்தியாலங்கள் வரையில் தன்னை எழுதுவதில் ஈடுபடுத்தும் ஒரு எழுத்தாளனின் இத்திட்டம் அமானிடத்திட்டம் என்று சொல்லமுடியாது.
கவிஞர்களுக்கும், தத்துவவாதிகளுக்கும் அதேவேளை சாமானியர்களுக்கும் சென்றடையும் வகையில் சமுகத்தை எவ்வாறு இலக்கியமாக்குவது, சமகால வாழ்க்கைப் படிமானங்களை அவற்றின் முழுமைக்குள் எவ்வாறு படம்பிடிப்பது என்ற கேள்விகளுக்கான பதிலாகவே பல்ஸாக்கின் நாவல்கள் அமைந்துள்ளன. "பிரஞ்சுச் சமூகம் ஒரு வரலாற்றாசிரியராகவும், நான் அதன் எழுதுவினைஞனாகவுமே தொழிற்பட வேண்டியிருந்தது" என்னும் பல்ஸாக்கின் கூற்று அவர் எத்தனை தூரம் சமூக யதார்த்தங்களின் நேரடிப் பதிவாளராக இருந்தார் என்பதைப் புலப்படுத்துகிறது.
சமூகத்தின் ஒழுக்கப் பண்பாடுகள், அவற்றின் மீறல்கள், அங்கு நிலவும் பெருமைகள், சிறுமைகள், அதன் உறுப்பினர்களின் உணர்வுகள் மனோநிலைகள் அவர்களின் போராட்டங்கள், சமூகத்தின் பிரதான சம்பவங்கள், அவற்றின் மூலகாரணிகள் என இன்னோரன்ன துல்லியங்களுடன் சமூகத்தைக் காலத்தின் தேவை கருதி பதிவுகளாக்கிவிடுவதும், பின் படைக்கப்பட்ட ஒவ்வொரு படைப்புகளையும் இன்னொரு படைப்புடன் தொடர்பு படுத்தி 19 ம் நூற்றாண்டின் பிரஞ்சுச் சமூகம் பற்றிய ஒட்டுமொத்தமான பார்வைப் பதிவுகளை உருவாக்கி விடுவதும்தான் பல்ஸாக்கின் நோக்கமாவிருந்தது. அதனால் தான் இத்திட்டத்திற்கு, அதன் தொகுப்பிற்கு (Dande யின் divin comedy" பாணியில்) "மானிட நாடகம்" -comédie humain- என்று பெயரிட்டார். "தாராளமான பொறுமையுடனும் துணிவுடனும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரான்ஸின் மீதான நூலை - றோம், அதென், பாரசீகம், இந்தியா போன்றவை தமது நாகரீகத்தின் மீது துரதிஸ்டவசமாக உருவாக்காது விட்ட அந்த நூலை - நான் உருவாக்குவேன்" என்று கூறினார் பல்ஸாக்.
"மானிட நாடகத்" தை பல்ஸாக் மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்தார்: கலாச்சார-பண்பாட்டுப் படிப்பினை, தத்துவப் படிப்பினை, ஆய்வுப் படிப்பினை. கலாச்சார-பண்பாட்டுப் படிப்பினை மேலும் ஆறு காட்சிகளாக அவரால் வகுக்கப்பட்டது: தனிப்பட்ட அந்நியோன்னிய வாழ்கைக் காட்சிகள், நாட்டுப்புற வாழ்க்கைக் காட்சிகள், பாரிஸ் வாழ்க்கைக் காட்சிகள் , அரசியல் வாழ்க்கைக் காட்சிகள், இராணுவ வாழ்க்கைக் காட்சிகள், வெளிமாகாண வாழ்க்கைக் காட்சிகள். ஒவ்வொரு காட்சிகளையும் முழுமையாக வெளிப்படுத்துவதற்கு, பதிவுசெய்வதற்கு அவர்பல நாவல்களை எழுதினார். ஆரம்பத்திட்டத்தின்படி நூற்றைம்பது நாவல்களை எழுதிமுடிக்க வாழ்க்கை அவருக்கு போதிய அவகாசம் கொடுக்காத போதும், அவரால் எழுதப்பட்ட 90 நாவல்கள்-குறுநாவல்கள், முப்பது குட்டிக்கதைகள், ஒன்பது நாடகங்கள், எண்ணிக்கையற்ற தத்துவ, ஆய்வுக் கட்டுரைகள் என்பன அவரது திட்டத்தை முழுமைப்படுத்திவிட்டன என்று கூறலாம்.
எமில் சோலா, விக்டர் ஹியூகோ, அலெக்ஸாண்டர் டியூமா போன்றோரின் நாவல்கள் எவ்வாறு சினிமாப்படத் தயாரிப்புகளுக்கு தீனி போட்டதே அதே போன்றே பல்ஸாக்கினது நாவல்களில் பலவும் திரைப்படமாக்கப்பட்டது.

 


மேலும் சில...
ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்
அல்பிரட் து மியூசே
குயிஸ்தாவ் ப்ளோபேர்
எமில் ஸோலா
விக்டர் ஹியூகோ
சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ல் போதலயர்.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 09:20
TamilNet
HASH(0x55f1e6095d40)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 09:20


புதினம்
Fri, 29 Mar 2024 09:20
















     இதுவரை:  24715613 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4276 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com