அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 10 May 2026

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ - 05
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 05   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Saturday, 11 February 2006

05.

அடுத்தநாள் அதிகாலையிலேயே சேனாதிக்கு விழிப்பு ஏற்பட்டுவிட்டது. பனி கொட்டிக் கொண்டிருந்தது. படுக்கையை விட்டு எழ மனமில்லாதிருந்தவனுக்கு கோட்டைமுறிப்புக் காட்டிலே மரை ஒன்று கம்முவது கேட்டது. குசினிக்குள் செல்லம்மா ஆச்சி விடிவதற்கு முன்னரே எழுந்து அந்தப் பனியிலும் குளித்துவிட்டு, குத்துவிளக்கின் அடங்கிய ஒளியில் ஆடை நசிப்பது கேட்டது.

ஆச்சிதான் இந்த வயதிலும் எவ்வளவு சுறுசுறுப்பாகவும், கச்சிதமாகவும் வீட்டுவேலைகளைக் கவனிக்கின்றா என அவன் வியந்து கொண்டான். ஆச்சிக்கு வெளியுலகம் அதிகம் தெரியாது. அவளுடைய உலகம் அந்தச் சின்னக் கிராமமாகிய ஆண்டாங்குளந்தான். அவளுடைய முதல் தெய்வம் சிங்கராயர்தான். அவளுடைய அன்பு சுரக்கும் இதயத்தில் குடியிருப்பது அவளுடைய மகளும், பேரன்பேத்தியுந்தான். இப்போ அங்கே நந்தாவதியும் இடம் பிடித்துக் கொண்டிருப்பாள்போல் சட்டெனச் சேனாதிக்குத் தோன்றவே, அவன் மனதில் மகிழ்ச்சி கொப்பளித்தது.

சட்டெனத் துள்ளியெழுந்தவன், உற்சாகமாகக் காலைக் கடன்கைளை முடித்துக்கொண்டு ஆச்சி அன்புடன் கொடுத்த வெண்ணெய் மிதக்கும் மோரைக் குடித்தான். குத்துவிளக்கின் ஒளியில் நரைதிரையின் ஆரம்ப எல்லைக்குள் சென்று கொண்டிருக்கும் ஆச்சியைப் பாசத்துடன் பார்த்தான். அம்மாவும் ஆச்சியைப் போலத்தான். ஆச்சியின் மனம், சதா அவன் தாயான கண்ணம்மாவையும், அவள் பிள்ளைகளையும் சுற்றிவந்தாலும், ஒரு நாளேனும் அவள் சிங்கராயரை விட்டுவிட்டு மகளிடம் சென்றதில்லை. கண்ணம்மாவும் அப்படித்தான். அடிக்கடி, ஆண்டாங்குளத்தில் அப்புவும் அம்மாவும் இந்தப் பனிக்குளிருக்குள் எப்படி இருக்கின்றார்களோ எனத் தவிப்பாள். ஆனால் தன் கணவனைத் தனியேவிட்டுப் பெற்றோரிடத்துக்கு வரமாட்டாள். வாழையடி வாழை என்பது இதுதானோ?... எல்லாப் பெண்களுமே இப்படித்தானா?... என்று எண்ணியவனுக்கு கூடவே நந்தாவின் நினைவும் வந்தது.

சிங்கராயர் பொழுது பலபலவென விடிகையில் பட்டியைத் துப்பரவு செய்துகொண்டே, 'தம்பி! எருமையள் கொஞ்சத்தைக் காணேல்லை!... விண்ணாங்கம் வெளிப்பக்கமாய் சிறப்பைச் சத்தம் கேக்குது! சாய்ச்சுக் கொண்டுவா!" எனக் குரல் கொடுத்தார்.

சேனாதி வீரையடிப் பிள்ளையார் கோவிலடியில் சென்று, அங்கு வீரை மரத்தடியில் ஒரு சிறிய உருண்டைக் கல் வடிவில் வீற்றிருந்த ஆண்டாங்குளத்துப் பிள்ளையாரை வணங்கிக் கொண்டே திரும்பிப் பாடசாலைக் கட்டிடப் பக்கமாகப் பார்த்தான். அங்கே எவரையும் காணவில்லை.

மலைக் காட்டைக் குறுக்கறுத்துக்கொண்டு விண்ணாங்கம் வெளியை அண்மித்து சேனாதி, காட்டுக் குறையில் மறைந்து நின்றவாறே எதிரே கிடந்த விண்ணாங்கம் வெளியைப் பார்த்தான். அங்கே கதிரவனின் காலைக் ஒளிவெள்ளமாகக் கொட்டிக் கிடந்தது. அந்த வெய்யிலில் காடடோரமாக ஒரு காட்டுக்கோழிச் சேவலும், நாலைந்து பேடுகளும் எருக்கட்டிகளைக் கிளறி மேய்ந்து கொண்டிருந்தன. மஞ்சளும், சிவப்பும், கருநீலமும் கரும்பச்சையுமாய் அழகு காட்டிய சேவலைப் பார்த்;தான். அதன் தலையிலுள்ள இரத்தச் சிவப்பான சூட்டில், சந்தணப் பொட்டு வைத்தது போன்ற மஞ்சள் பொட்டுக்கூடத் தெளிவாகத் தெரிந்தது.

அடுத்த சனிஞாயிறு ஆண்டாங்குளத்துக்கு வருகையில் கோழிப்பொறி அடிக்கவேண்டுமென நினைத்துக்கொண்டு கொன்னாவரசின் மறைவில் இருந்து அவன் வெளிப்பட்டபோது, அவன் வரவுகண்டு காட்டுக்கோழிப் பேடுகள் யாவும் குடுகுடுவென ஓடிக் காட்டுக்குள் மறைந்துவிட்டன. அந்தச் சேவல் மட்டும் நிதானமாக கம்பீரநடை போட்டுப் பேடுகளை தொடர்ந்தது. 'ம்.. பெரிய ஆம்பிளையாம் தான்!..." எனச் சொல்லிச் சிரித்துக்கொண்ட சேனாதி, விண்ணாங்கம் வெளியைக் கடந்து சம்மளங்குடாவை அடைந்தபோது, பட்டி நாம்பனான கேப்பையானும் மற்றைய எருமைகளும் காலை வெய்யிலை அனுபவித்தவாறே புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

இந்த வயதிலேயே சாதாரண நாட்டெருமைகளைவிடப் பெரிதாய் இருந்த அந்தக் கேப்பையானின் ஆபிரிக்கக் காட்டெருமை போன்ற தோற்றத்தைக் கண்டால் புதியவர்களுக்கு வயிற்றைக் கலக்கும். பார்வைக்கு அப்படியிருக்கும் கேப்பையான் பழகுவதற்கோ குழந்தை போன்றது. இப்போ அதைக் கண்டவுடன் சேனாதி ஆசையுடன் ஓடிச்சென்று அதன் முதுகின்மேல் துள்ளி அமர்ந்துகொண்டான்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் அவன் சிங்கராயருடன் கொக்குத்தொடுவாய்க்கு மாடு பார்க்கச் சென்றிருந்தபோது, அங்கே கொக்குத்தொடுவாய் பழைய விதானையாரின் பட்டியில் கேப்பையானை முதுகன்றாகக் கண்டான். பேரனை நச்சரித்து விதானையாரிடம் அதை வாங்கி வந்திருந்தான். விரைவிலேயே அதன் முதுகில் சாவாரி செய்யுவம் பழக்கியிருந்தான். முதுகிலே தட்டி, போ! என்றால் போகும். நில்! என்றால் நிற்கும். காலால் விலாவில் இடித்தால் அந்தப் பக்கம் திரும்பும்.

இப்போதும் அதன்மேல் ஏறி, எருமைகளையும் சாய்த்துக் கொண்டு கிராமத்துக்குத் திரும்புகையில் ஒரு பட்ட மரத்தில் தனது தோகை நவரத்தினங்களாய் மின்ன, காலை வெய்யில் காய்ந்து கொண்டிருந்த ஒரு மயிலைக் கண்டான். நேற்று மாலை கிணற்றடியில் நந்தாவதி விரித்துவிட்ட ஈரக்கூந்தலுடன் நின்று சிரித்தது நினைவுக்கு வந்தது. கூடவே முன்பு அவளும் தன்னுடன் சேர்ந்து கேப்பையானில் சவாரி செய்த நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன. இப்போது, அந்த நாட்களைப்போல் எனக்குப் பின்னே உட்கார்ந்து என்னைக் கட்டிக்கொண்டு கேப்பையானில் அவள் வருவாளா என்று எண்ணிய சேனாதிக்கு, அப்படிக் கற்பனை செய்கையில் சற்றுக் கூச்சமாகவும் இருந்தது. அன்றைய நந்தாவுக்கும் இன்றைய நந்தாவுக்கும் எத்தனை வித்தியாசம்! சேனாதிக்கு தண்ணீரூற்று ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலருகில் உள்ள ஐயர் வளவில் செழுமையாக நிற்கும் வாழைகளும், செந்நிறக் குரும்பைகள் சுமந்து நிற்கும் செவ்விளைத் தென்னைகளும், செவ்வந்திப் பூஞ்செடிகளும் நினைவுக்கு வந்தன.

கேப்பையான் நின்று, தீர்த்தமாடின இறக்கப் பக்கமாக ஆற்றை நோக்கிச் சுவடித்தது. சேனாதி அதன் பார்வை சென்ற இடத்தை நோக்கினான். அங்கே ஆற்றின் கரையில், பாதி தரையிலும் மிகுதி நீரிலுமாக, ஒரு பெரிய எருமைக் கிடாரி கால்பரப்பி இறந்து கிடப்பது தெரிந்தது. சோனாதி சட்டெனக் கேப்பையானிலிருந்து குதித்து இறங்கி அந்தக் கன்றை நோக்கி ஓடினான்.

நல்ல வளர்ச்சியடைந்த ஒரு முதுகன்றுக் கிடாரி, அதன் தலையின் முன்பகுதி நொறுங்கிப்போய்க் கிடக்கக் கண்டான். ஊதிக்கிடந்த அதன் விலாப்புறத்தில் அவன் கையை வைத்து அழுத்தியபோது உள்ளே எலும்புகள் உடைந்திருப்பது தெரிந்தது. சேனாதி நிமிர்ந்து நின்று அக்கரையைப் பார்த்தான். அங்கே நேற்றுக் காலையில், கயிலாயர் வள்ளத்தில் வரும்போது காட்டிய செம்மூக்கன் முதலை ஒரு மேட்டில் கிடந்து வெய்யில் காய்வதைக் கண்டான். அவனுக்கு நடந்தது புரிந்தது. ஆற்றில் நீர் குடிக்கச் சென்ற கிடாரியை தண்ணீரில் மறைந்து கிடந்த செம்மூக்கன் வாயால் கௌவி மூஞ்சையை நொறுக்கியிருக்கின்றது. அதே சமயம் அது தன் பலம் பொருந்திய வாலினால் அசுர அடிகொடுத்து விலா எலும்புகளையும் உடைத்திருக்கின்றது. பயங்கரமாக வாயை ஆவெனப் பிளந்துகொண்டு கிடந்த செம்மூக்கனை மீண்டும் அவதானித்தவன் விரைந்து எருமைகளைச் சாய்த்துக்கொண்டு பட்டிக்குச் சென்றான்.

பட்டிக்குள் பால் கறந்து கொண்டிருந்த சிங்கராயர் விஷயத்தை அறிந்ததுமே உறுமினார். 'ஓஹோ! அப்பிடியே சங்கதி!... பொறு பாலைக் கறந்துபோட்டு வாறன்!... உந்தச் செம்மூக்கனைச் சும்மா விட்டால் சரிவராது!" எனக் கறுவிக்கொண்டார்.

பால் கலயங்களை வீட்டுக்குக் கொண்டு சென்றதும் கைகால்கூடக் கழுவிக் கொள்ளாமல், மாலுக்குள் கூரையில் செருகியிருந்த மண்டாவை எடுத்தார். சென்ற வருடம் மட்டக்களப்பிலிருந்து ஆண்டாங்குளத்துக்கு முதலை பிடிக்க வந்திருந்த அருச்சுனன் அவருக்குப் பரிசாகக் கொடுத்துச்சென்ற மண்டா அது. தன்னிடமிருந்த மெல்லிய வார்க்கயிற்றை எடுத்து, ஈட்டிபோல் நீண்டிருந்த அந்த மண்டாவின் அடிப்பகுதியில் கட்டிக்கொண்ட சிங்கராயர், 'சேனாதி! துவக்கையும் இரண்டு குண்டுத் தோட்டாவையும் எடுத்துக் கொண்டு வா! நாயள் வேண்டாம்!" எனக் கட்டளையிட்டுவிட்டு, விறுவிறென்று தீர்த்தமாடின இறக்கத்தை நோக்கி விரைந்தார். அவருடைய அந்த நடைக்கு ஈடுகொடுக்க சேனாதி ஓட்டமும் நடையுமாகச் செல்ல வேண்டியிருந்தது.

குறிப்பிட்ட இடம் நெருங்கியதும், சற்றுத் தொலைவிலேயே ஒரு பற்றை மறைவில் நின்று ஆற்றை அவதானித்தார் சிங்கராயர். செம்மூக்கன் இப்போது ஆற்றின் இக்கரையில் கிடந்த கன்றின் அருகில் கிடந்தது. நரிகள் போன்ற விலங்குகள் தன் இரையைத் தின்றுவிடக்கூடும் என்பதனால் அது காவல் காத்துக் கிடந்தது.

சிங்கராயர் காற்று வீசும் திசை, மறைந்து செல்லவேண்டிய மார்க்கம் யாவற்றையும் சில கணங்களுள் தீர்மானித்துக்கொண்டு, 'நீ இஞ்சை நில்... நான் மண்டாவை எறிஞ்சதும் துவக்கையும் கொண்டு ஓடிவா!" எனப் பணித்துவிட்டு, ஆற்றின் ஓரமாக நின்ற தில்லம் செடிகளுக்கூடாகப் பதுங்கிச் சென்றார்.

சிங்கராயர் பதுங்குவதைப் பார்த்தால் புலி பதுங்குவதைப் பார்க்கத் தேவையில்லை. தனது ஆறடி உயரத்தை அரையடி ஆக்கியதைப்போல் பதுங்கி முதலை படுத்திருந்த இடத்தை அடைந்துவிட்ட சிங்கராயர் சட்டென எழுந்து நின்று, தன் பலமனைத்தையும் ஒன்று குவித்து மண்டாவை முதலையின் கழுத்துக்குக் குறிவைத்து எறிந்தார். இவருடைய திடீர் வரவுகண்டு முதலை சட்டெனத் தண்ணீரினுள் விழுவதற்குள் சிங்கராயரின் கூர்மையான மண்டா சதக்கென்ற ஒலியுடன், செம்மூக்கனின் அகன்ற கழுத்தில் மிக ஆழமாகப் புதைந்துகொண்டது.

சேனாதி கையில் துவக்குடன் அங்கு பறந்து சென்றபோது சிங்கராயர் வெற்றிப் பெருமிதத்துடன் மண்டாவில் தொடுத்திருந்த நீண்ட வார்க்கயிற்றை முதலையின் இழுவைக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். கயிற்றின் முக்கால்பங்கு தண்ணீரினுள் மறைந்தபோது சிங்கராயர் பிடியை இறுக்கிக் கயிற்றை மெல்லச் சுண்டியிழுத்தார். சட்டெனக் கயிறு விண்ணென்று விறைத்துக் கையை வெடுக்கென்று இழுத்தது. வேறு யாருமெனில் முதலையின் அந்த இழுவைக்கு விழுந்தேயிருப்பார்கள். 'ம்ம்.. சேட்டை விடுறீரோ?" என உறுமி, குரூரமாகச் சிரித்தபடியே கொஞ்சங் கொஞ்சமாக முதலையைக் கரையை நோக்கி இழுப்பதும் பின்பு சிறிது விட்டுக் கொடுப்பதும் பின்பு சட்டென வெட்டியிழுப்பதுமாகச் சிங்கராயர் செம்மூக்கனைக் களைக்க வைத்துக் கொண்டிருந்தார். நிறைய இரத்தம் வெளிப்படுவது நீரில் தெரிந்த நிறமாற்றத்தில் தெரிந்தது.

தலைக்கு மேலே எறித்த வெய்யிலில் சுமார் இரண்டுமணி நேரம் அந்த இழுவைப் போராட்டம் நீடித்தது. முதலையின் பலம் குறைந்துகொண்டு வந்துவிட்டதை அறிந்த சிங்கராயர் சேனாதிக்குச் சைகை காட்டிவிட்டு மளமளவெனச் செம்மூக்கனைக் கரைக்கு இழுக்கலானார். விறுவிறுவென இழுபட்டு வந்த செம்மூக்கன் கரையில் மனிதரைக் கண்டதும் தன் இறுதிப் பலமத்தனையும் கூட்டி வால் நுனியில் எழுந்து சிங்கராயரை நோக்கிப் பாய்வதற்கிடையில், அவர் சட்டெனச் சேனாதியிடமிருந்து துவக்கபை; பறித்து முதலையின் நெஞ்சடி வெள்ளையை நோக்கி வெடிவைத்தார். ஒற்றைக் குண்டு போட்ட அந்த வெடி அப்படியே அந்தப் பெரும் செம்மூக்கனைத் துளைத்துச் சென்று நீரில் வீழ்த்தியது. துவக்கைச் சேனாதியிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெருமுதலையை அனாயசமாகக் கரைக்கு இழுத்துப் போட்டு, அதன் கழுத்தின்மேல் தன் காலை உறுதியாகப் பதித்துக்கொண்டு, அங்கே ஆழமாகப் புதைந்திருந்த மண்டாவை வெளியே எடுத்தார் சிங்கராயர். கரும் இரத்தம் பீரிட்டு அவருடைய பாதத்தை நனைத்தது. மண்டாவைக் கையில் பிடித்துக்கொண்டு சிங்கராயர் கடகடவெனச் சிரித்தார். இந்தக் காட்டுக்கு நான்தான் ராசா என்பதுபோல் அந்தச் சிரிப்பு அதிர்ந்தது.

மாலை மூன்று மணிக்கெல்லாம் சேனாதிராஜன் தண்ணீரூற்றுக்குப் புறப்பட ஆயத்தமானான். சிங்கராயர், நேற்றுக் காட்டில் பிடித்த உடும்புகளில் பெரிதாக இரண்டை மான்கொடியால் கப்பில் கட்டியிருந்தார். அவற்றைப் பக்குவமாகப் பன்பையினுள் வைத்துக்கொண்டே, 'இதில் ஒண்டை குமுளமுனையிலை செல்வன் ஓவசியரிட்டைக் குடுத்திட்டுப் போ மோனை!.. அந்தப் பொடியன்தான் எனக்குச் சங்கத்திலை தோட்டா வந்தால் எடுத்துத் தாறது!" எனச் சொன்னார். செல்லம்மா ஆச்சி காலையிலேயே தனியாக எடுத்துவைத்த ஆடையும் தயிரையும் ஒரு பேணியில் போட்டு அவனிடங் கொடுத்து, 'சனிக்கிழமை வரேக்கை தங்கச்சி ராணியையும் கூட்டிக்கொண்டு வா ஐயா!" என விடை கொடுத்தாள்.

சேனாதி பன்பையைத் தூக்கிக்கொண்டு தட்டிக் கண்டாயத்தின் அருகே வந்தபோது பாடசாலைப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தான். அங்கு ஒருவரையும் காணவில்லை. வழக்கமாக அவனைச் சுற்றிவரும் மான்குட்டி மணியையும் அக்கம்பக்கத்தில் காணவில்லை. வெறுமையாகி விட்டதுபோல் தோன்றிய ஒரு உணர்வுடன் அவன் பனைமரங்களினூடாக நடந்து, புல்வெளியையும் பொன்னாவரசம் பற்றைகளையும் கடந்து வட்டம்பூ காடாயப் பூத்திருந்த பாலையடி இறக்க வெண்மணல் மேட்டுக்கு வந்தபோது, அங்கு வள்ளத்தையும் காணவில்லை, கயிலாயரையும் காணவில்லை.

குமுளமுனைக்கு தண்ணீரூற்று பஸ் வருவதற்குப் போதிய நேரம் இருந்ததால் அவன் அவசரமாக ஆற்றில் இறங்கிச் செல்லவில்லை. எனவே வள்ளக்காரரைக் கூப்பிடுவதற்காகச் சேனாதி பன்பையை வெண்மணலில் வைத்துவிட்டு, வாயருகே கைகளைக் குவித்து ~ஓஹோ..| என நீட்டிக் குரல் கொடுத்தான். சில கணங்களில் பதில்குரல் கேட்டது. ஆனால் அது முதலாவது ஆற்றுப்பக்கமாகக் கேட்காது, பின்னே இருந்து மலைக்காட்டுப் பக்கமாகக் கேட்டது. கையிலாயர் மலைக்காட்டிற்குள் என்ன செய்கின்றார் எனச் சிந்தித்த வண்ணமே அவன் ஊர்ப்பக்கமாகத் திரும்பிப் பார்த்தபோது, மலைக்காட்டுச் சரிவிலிருந்து நந்தா ஓடி வந்துகொண்டிருந்தாள். அவளை ஒட்டியவாறே அவனுடைய மான்குட்டி மணியும் உற்சாகத்துடன் குதித்துக்கொண்டு வந்தது. மாலைப் பொன்வெய்யில் வெள்ளமாகத் தேங்கிநின்ற அந்த மரகதப் புல்வெளியில் நந்தா ஒரு வனதேவதையாய் ஓடி வந்துகொண்டிருந்தாள். சேனாதியின் உள்ளம் சட்டென விம்பிப்பம்மி விண்ணில் மிதந்தது.
 
மூச்சிரைக்க ஓடிவந்து அவனருகே சட்டென நின்ற அவளுடைய நெஞ்சு எழுந்து தாழ்ந்து கொண்டிருந்தது. கண்டிய சிங்களப் பெண்கள் வழமையாக அணிவதுபோலவே மேலே வெறும் சட்டையும், இடுப்புக்குக் கீழே நாலுமுழ வேட்டிபோலத் துண்டும் உடுத்தியிருந்தாள். சோனாதியின் கண்கள் அவனையுமறியாமல் அவளுடைய சிவப்புச் சட்டைக்கும், கீழே அணிந்திருந்த கருநீல பட்டிக் துணிக்கும் இடையே சற்றுத் தாராளமாகவே தெரிந்த பொன்னிறப் பிரதேசத்தில் பதிந்தன.

'என்ன சேனா, எனக்குச் சொல்லாமலே புறப்பட்டிடடீங்களே!" என மூச்சிரைக்க நந்தா கேட்டபோது, 'நீதானே இண்டுமுழுக்க வீட்டுப் பக்கமே வரேல்லை!.. நான் வரேக்கையும் பாத்தனான்!" சேனாதி, ஓடிவந்ததனால் மேலும் சிவந்திருந்த நந்தாவின் கன்னங்களையும், அந்த நிலவுமுகத்தில் மிதந்த நீலவிழிகளையும் பார்த்தவாறு கூறினான். 'இன்னிக்கு தாத்திக்கு லீவுதானே.. காலையிலை மான் இறைச்சி கிடைச்சதில்லே.. அதைக் கருவாடு போட்டுக்கிட்டு இருந்ததாலை வரமுடியலை சேனா!". தான் அவனிடம் வரமுடியாமைக்கு வருந்தும் தொனியில் நந்தா கூறியபோது சேனாவின் இதயம் கனிந்தது.

தன்னிடம் வந்து உராய்ந்த மணியைத் தள்ளிவிட்டு, நந்தா தனது மடியில் கட்டிக்கொண்டு வந்திருந்த சூரைப் பழங்களைக் கைகள் நிறைய எடுத்தாள். 'இந்தாங்க சேனா சூரைப்பழம்!.. நீங்க வூட்டுக்கு கொண்டு போகத்தான் இதைப் பறிச்சுக்கிட்டிருந்தன்!"

அவள் தன் இரு கைகளிலும் கருகருவென மின்னிய சூரைப்பழங்களைக் காட்டினாள். இரு தாமரை மலர்கள் போன்றிருந்த அந்த உள்ளங்கைகள், ஓடி வந்ததனால் கசகசவென வியர்த்திருந்தன. அந்தப் பகைப்புலத்தில், ஈச்சம் பழங்களைப்போல் கறுத்து மினுமினுத்த அந்தச் சூரைப்பழங்கள் சேனாதிக்கு அவன் இதுவரை கண்டிராத ஒரு புதிய அழகைக் காட்டின. மிகவும் சுயாதீனமாக அவனையொட்டி நின்றுகொண்டே நந்தா அவனுடைய சேட்பை நிறைய அந்தப் பழங்களை நிறைத்தாள். பின்பு, 'சாப்பிட்டுப் பாருங்க சேனா!.. எவ்வளவு ருசி!" எனச் சொல்லியவாறே தனது கைகளில் எஞ்சிய சில பழங்களை அவன் வாயருகில் கொண்டுசென்று ஊட்டிவிட்டாள். அவளுடைய அண்மையும், மிக நெருக்கத்திலிருந்து வீசிய அவளுடைய இளமை மணமும் அவனுக்குப் புதியதோர் அனுபவமாக இருந்தது. நன்கு முற்றிப் பழுத்த சூரைப்பழங்களின் புளிப்பு விரவிய இனிப்பு, அவளுடைய உள்ளங்கை வியர்வைச் சுவையுடன் வாயில் கரைந்தபோது, அவன் இதுவரை சுவைத்திராத புதிய சுவையை அறிந்துகொண்டான்.

'என்ன சேனா, வள்ளக்காரத் தாத்தாவைக் காணலியே?" என்றபோது தன் சுயநிலைக்குத் திரும்பிய சேனா, 'என்னண்டு தெரியேல்லை!.. பஸ் வந்திடும்.. நான் போட்டுவாறன்!" எனச் சாறத்தை மடித்துக் கட்டிக்கொண்டு, பன்பையை எடுத்துத் தோளில் வைத்துக்கொண்டு ஆற்றில் இறங்கினான். தை மாதமானதால் ஆற்றில் வெள்ளம் முழங்காலளவே இருந்தது. அகன்று கிடந்த அந்த நதியில் மிதந்த மஞ்சளும் சிவப்புமான காட்டுப்பூவரசம் மலர்களை விலக்கிக்கொண்டே நடந்தவன் கரையை அடைந்ததும் நின்று திரும்பிப் பார்த்தான்.

அக்கரையில், பாலையடி வெண்மணல் திட்டில், வட்டம் பூஞ்செடிகளின் பின்னணியில் மான்குட்டியை ஒரு கையால் அணைத்தபடியே மறுகையை உயர்த்தி இலேசாக அசைத்தபடியே நந்தா நின்றிருந்தாள். மேற்கிலிருந்து மாலை வெய்யில் அவள் நின்றிருந்த பாலையடி இறக்கத்தைப் பொன்னாக அடித்திருந்தது. மஞ்சளும் சிவப்புமான காட்டுப் பூவரசம் பூக்கள் மிதக்கும் கருநீல நதிக்குமப்பால், வெண்மணல் மேட்டில் தங்கச் சிலையாய் நந்தா சிரித்து நின்ற கோலம், அவனுக்குச் சினிமாக்களில் வரும் கனவுக் காட்சிபோலத் தோன்றியது. அவனுடைய இளைய, புதிய இதயத்தில், வனதேவதையாய் நின்ற நந்தா மிகமிக அழுத்தமாய், இறுக்கமாய்ப் பதிந்துபோனாள். சட்டென அவளை நோக்கிக் கையை அசைத்துவிட்டுப் பாதை வளைவில் திரும்பி மறைந்தான் சேனாதி.

பாதை வளைவில் சோனதியின் உருவம் மறையும்வரை பார்த்தவாறே நின்ற நந்தா, அவன் பார்வையிலிருந்து மறைந்த பின்பும் பாலையடி இறக்கத்தை விட்டுப் போகவில்லை. அப்படியே வெண்மணலில் முட்டுக்காலிட்டு அமர்ந்தவளுடைய விழிகள் சற்றுக் கலங்கிவிட்டிருந்தன. அவளை உரசியவாறு நின்ற அந்தக் கலைமான் குட்டியின் தலையை அவளது விரல்கள் இயல்பாகத் தடவிக் கொடுக்கையில், அதன் தலையில் அப்போதுதான் மொக்குவிடும் பச்சைக் கொம்பு அவளுடைய விரல்களில் தட்டுப்பட்டது. வெல்வெற் போன்ற அதன் மேற்புறத்தையும், அதேசமயம் வஜ்ஜரம் போன்ற அதன் கடுமையையும் அவளுடைய இளந்தளிர் விரல்கள் வருடிச் சுகங்கண்டு கொண்டிருந்தன. இப்படியே கனவில் மிதக்கும் கண்களுடன் நதிக்கரையில் சில நிமிடங்கள் இருந்த நந்தா சட்டென சுயநிலைக்குத் திரும்பியவளாய் துள்ளியெழுந்து, 'ஓடி வாங்கோ!" என மான்குட்டியை நோக்கிக் கூவிவிட்டுக் கிராமத்தை நோக்கிச் சிட்டாய்ப் பறந்தாள்.

(வளரும்)


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 06
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 10 May 2026 12:24
TamilNet
The escalating confrontation involving the U.S., Israel and Iran, combined with the growing denial of operational access to American forces in the Persian Gulf, is rapidly elevating the strategic importance of the island of Sri Lanka within U.S. military calculations in the Indian Ocean, writes Norway-based Eezham Tamil political analyst and anthropology scholar Athithan Jayapalan. As Washington faces increasing difficulties in sustaining its naval and military presence in the Gulf due to Iranian missile capabilities, drone warfare and maritime interdiction strategies, the island?s geographical position, naval infrastructure and longstanding defence ties with the United States are once again assuming major geopolitical significance.
Sri Lanka: Colombo re-emerges as strategic U.S. platform amid Persian Gulf crisis


BBC: உலகச் செய்திகள்
Sun, 10 May 2026 12:24


புதினம்
Sun, 10 May 2026 12:53
















     இதுவரை:  28680605 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 8660 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com