அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ - 09
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 09   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Sunday, 26 March 2006

09.

சனிக்கிழமை அதிகாலை தண்ணீரூற்றில் இருந்து குமுளமுனை நோக்கிப் புறப்பட்ட பஸ்ஸில் சேனாதி உற்சாகம் பொங்கும் மனதுடன் உட்கார்ந்திருந்தான். பஸ் வழமையான வேகத்தில் சென்றபோதும் அது என்னவோ நத்தைபோன்று ஊர்வது போலவே அவனுக்குத் தோன்றியது.

ஆறாங்கட்டை மலைவேம்படிச் சந்தியில் இறங்கிச் சாறத்தை மடித்துக் கட்டிக்கொண்டு, கையில் இருந்த பன்பையைத் தோளில் ஏற்றிக்கொண்டு எட்டி நடை போட்டான் சேனாதி. பரவைக் கடலைக் கடந்து அவன் முதலாவது ஆற்றைக் கடந்தபோது, கழுவைச்ச இறக்கத்துக்கும் அப்பால் இருந்த துண்டித் தீவில் வாழும் மந்திக் குரங்குகள் உற்சாகமாகக் கிளைகளில் பாய்ந்து விளையாடுவது அவன் கவனத்தை ஈர்த்தது.

இருபுறம் பரவைக் கடலாலும், மற்றைய பக்கங்களில் ஆழமான ஆறுகளினாலும் தீவாக்கப்பட்ட அந்தத் தரைப்பகுதியைத் துண்டித் தீவு எனச் சொல்வார்கள். அந்தத் தீவில் எப்படியோ முன்போர் காலம் வந்து சேர்ந்துவிட்ட குரங்குகள் இப்போ இனம் பெருகியிருந்தன. அவற்றின் முழு உலகமுமே  அந்தத் துண்டித்தீவுதான்.

சோனாதியின் தகப்பன், தாய் கண்ணம்மாவைச் சில சமயங்களில் நீ, ஆண்டாங்குளத்துத் துண்டித்தீவுக் குரங்குகள் போன்று நாட்டுநடப்புத் தெரியாதவள் எனக் கேலி செய்வது வழக்கம். அவளும் அதற்குச் சிரித்துக் கொண்டே 'அதுக்கென்ன! உங்கடை தனியூத்து பெரிய ரவுண்தான்!" என்று சீண்டுவாள். இவற்றைப்பற்றி எண்ணிக்கொண்டே சேனாதி ஏறுதுறையான மூண்டாத்துப் பவருக்கு வந்தபோது, ஆற்றின் அக்கரையை ஒட்டிக் கயிலாயர் வள்ளம் செலுத்தி வருவது தெரிந்தது. வள்ளத்தில் ஐந்தாறுபேர் பாற் கலயங்களுடன் உட்கார்ந்திருந்தனர்.

அவர்கள் யாவரும் குமுளமுனை வாசிகள். தங்களுடைய எருமைகளை ஆண்டாங்குளத்துக்கும் அப்பால், சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள வட்டுவன் என்னும் பட்டித்தலத்தில் விட்டு மேய்த்து வளர்ப்பவர்கள். ஒவ்வொரு நாளும் மாலையில் அங்கு சென்று, எருமைகளை அடக்கிச் சாய்த்து, இரவை அங்கேயே கழித்துப் பின் காலையில் எருமைப்பாலை பெரிய கலயங்களில் கறந்துகொண்டு குமுளமுனைக்குத் திரும்பும் மாட்டுக்காறர்.

என்ன இவ்வளவு சிக்கிரமாகப் பால் கறந்துகொண்டு திரும்பிவிட்டார்களே எனச் சேனாதி தனக்குள் வியந்தபோது, அவர்களுடைய பாற்கலையங்கள் கனமின்றி வெறுமையாக இருப்பதை அவதானித்தான். இதற்குள் இக்கரைக்குச் சமீபமாக வந்துவிட்ட வள்ளத்தில் இருந்த அவர்களுடைய முகங்களும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தன. அந்த முகங்கள் கலவரமும், கவலையும் தோய்ந்தனவாகத் தோன்றின. விஷயம் என்னவாக இருக்கும் என யோசிப்பதற்குள், மாட்டுக்காரரில் ஒருவரான சிதம்பரப்பிள்ளை வள்ளத்தில் எழுந்து நின்றவாறே சத்தமிட்டுச் சொன்னார், 'தம்பி சேனாதி! நாங்கள் சிங்கராயரிட்டைப் போட்டுத்தான் வாறம்... அங்கை அரில்லை... குணசேகரா ஆக்களோடை காட்டுக்குப் போட்டார்!... ராத்திரி வட்டுவனுக்கை ஒரு பெரிய குழுவன் வந்து நாம்பன்களை அடிச்சுப் போட்டுது!... கலைப்பம் எண்டு பாத்தால் ஆளை வெட்ட வருது!... சொன்னால் நீ நம்பமாட்டாய் கயிலாயர்!... அது ஒரு ஆனையளவு இருக்கும்!.. ராமுழுக்கப் பயத்திலை மரம்வழிய ஏறி இருந்திட்டு இப்ப வெறுங்கலையத்தோடை வாறம்!.. நீ மறந்துபோடாமல் ஒருக்கால் சிங்கராயர் காட்டாலை வந்ததும் சொல்லு!... எக்கச்சக்கமான குழுவன்!... ஆளை வெட்டிச் சரிச்சுப் போட்டுத்தான் மற்றவேலை பாக்கும்!... இனி என்னண்டுதான் மாடுகண்டு பாக்கிறதோ... பட்டிக்குப் போய் வாறதோ?... ஆண்டாங்குளத்து ஐயனார்தான் வழி காட்டோணும்!" எனக் கவலையுடன் கூறியவாறே வள்ளத்தினின்றும் வெறும் கலையத்துடன் இறங்கினார் சிதம்பரப்பிள்ளை.

குமுளமுனையார் சென்றதும் கையிலாயர் இறங்கி வள்ளத்தை ஆண்டாங்குளம் நோக்கித் திருப்பினார். வழமை போலவே அவரிடம் தன் பன்பையைக் கொடுத்துவிட்டு ஊன்றுகம்பை எடுத்து விரவாக வள்ளத்தைச் செலுத்தினான் சேனாதி. அவருக்கு ஒரு கை சற்றுப் பலவீனம். வேட்டைக்குச் சென்ற சமயம் முதல்நாள் வெடியை வாங்கிக்கொண்டு குற்றுயிராகக் கிடந்த சிறுத்தையொன்று கடைசிநேரத்தில் அவரது கையைச் சப்பிவிட்டடிருந்தது. குடும்பத்தைக் காப்பாற் ற இந்த வயதிலும் வள்ளமோட்டி வாழ்ந்த அவரில் சேனாதி அன்பு வைத்திருந்தான். அவன் கண்களில் பாலையடி இறக்கத்து வெண்மணல் மேடு தென்பட்டபோது அங்கே ஆவலுடன் பார்வையைப் பதித்தான். அங்கே நந்தாவதி வந்து தனக்காகக் காத்திருப்பாள் என்றதோர் எண்ணம். ஆனால் அங்கே நந்தா இல்லை. கொள்ளையாகப் பூத்திருந்த சிவப்பு வட்டடம் மலர்கள் அவன் இறங்கியபோது சிரித்து வரவேற்றன.

பனைகளினூடாக நடந்து பட்டியைக் கடக்கையில், சிங்கராயர் அதிகாலையிலேயே எழுந்து பாலைக் கறந்துவிட்டுக் காட்டுக்குப் போயிருக்கிறார் என்பது தெரிந்தது. தன்னை அன்புடன் வரவேற்ற செல்லம்மா ஆச்சியிடம் தாய் கொடுத்துவிட்ட பொருட்களை எடுத்துக் கொடுக்கையில், பாடசாலைப் பக்கமாக மான்குட்டியின் மணிச்சத்தம் கேட்டது. நந்தாவாதியும் மான்குட்டியும் ஓடிவருவது தெரிந்தது. இரைக்க இரைக்க ஓடிவந்த நந்தா, ' ஆக்காட்டி கத்தக்குள்யையே நீங்கதான் வர்றீங்க எண்டு நினைச்சன்... விட்டைச் சாத்திட்டு ஓடி வர்றன்!" எனச் சிரித்தாள்.

'நீயும் கொஞ்சம் சாப்பிடன் மோனை!" எனப் பரிவுடன் ஆச்சி கேட்டதற்கு, 'நான் சாப்பிட்டாச்சு! நீங்க சேனாவுக்கு கொடுங்க ஆச்சி!" என்றவாறே ஓடிச்சென்று குடத்திலிருந்து நீரைச் செம்பில் நிறைத்துக் கொண்டுவந்து சேனாவிடம் கொடுத்துவிட்டு, அடுப்படித் திண்ணையில் அமர்ந்துகொண்டாள் நந்தா.

சேனாதி சாப்பிட்டுக் கொண்டே, 'ஆச்சி, இண்டைக்குத் திருக்கோணம் வயலுக்கை கோழிப்பொறி அடிக்கப் போறன்!" எனச் சொன்னபோது, 'நானும் வர்ரேன் சேனா! அழைச்சிட்டுப் போறீங்களர்?" எனக் குழந்தைiயாய் நந்தா கெஞ்சியபோது அவனால் மறுக்க முடியவில்லை. செல்லம்மா ஆச்சிதான், 'ராத்திரி பெரிய குழுவன் ஒண்டு வட்டுவனுக்கு வந்திட்டுதாம்!... குமுளமுனைப் பட்டிக்காறர் காலமை வந்து சொல்லிப்போட்டுப் போறாங்கள்!... கவனமாயப் போங்கோ புள்ளையள்!" என அக்கறையுடன் எச்சரித்தாள்.

சேனாதி தண்ணீரூற்றிலிருந்து கொண்டுவந்த மெல்லிய நைலோன் நூல், கொம்புக்கத்தி ஆகியவற்றுடன் தாயார் ஐயன் கோவிலில் கொளுத்தச் சொல்லிய கற்பூரத்தையும், நெருப்புப் பெட்டியையும் எடுத்துக்கொண்டான். ஆச்சி நந்தாவதியிடம் ஒரு பனையோலை உமல் நிறைய முகப்பொலி நெல்லைப் போட்டுக் கொடுத்தாள்.

அவர்களிருவரும் வன்னிச்சியா வயலைக் கடந்து ஐயன் கோவிலுக்குச் சென்றபோது மான்குட்டி மணியும் அவர்களைப் பின்தொடர்ந்தது.

ஐயன் கோவில் வெட்டையை அடைந்ததும் சேனாதி மடித்துக் கட்டியிருந்த சாறத்தை அவிழ்த்துவிட்டுப் பயபக்தியுடன் கற்பூரத்தை எடுத்தான். சூழவரக் காடாகவிருந்த அந்த வட்டவடிவமான வெட்டைப் புல்தரையின் நடுவே சிறிது மேடிட்ட ஒரு இடத்தில் கற்பூரம் கொளுத்திக் கறுத்துப்போனதொரு கல்லும், அதையொட்டி ஒரு சூலமும் மட்டுமே இருந்தன. இவ்வளவுதான் ஐயன் கோவில். அந்தக் காட்டுத் தெய்வமாகிய ஐயன் தனக்குக் கோவில் கட்டுவதையே விரும்புவதில்லையாம். முன்பு, செல்லம்மா ஆச்சியின் மூதாதையரான கட்டாடி உடையார் ஒரு சிறிய மண்டபத்தை அங்கு அமைத்தபோது, அன்றிரவே யானைகள் வந்து அதைப் பிடுங்கி எறிந்துவிட்டனவாம். அதன்பின் எவருமே ஐயனுக்குக் கோவில் கட்ட நினைக்கவில்லை. ஆனால் மக்கள் அடிக்கடி தமது நேர்த்திக் கடன்களுக்காக அங்கு வந்து வெள்ளைத்துணி விரித்து அதன்மேல் பழம், பாக்கு, வெற்றிலை பரவி மடை போடுவார்கள். மடையில் வைக்கும் பழங்களை ஐயனின் பரிகலங்கள் வந்து உமிந்து போடுமாம். மடையில் வைத்த பழங்கள் இனிமையின்றிச் சப்பென்று இருப்பதைச் சேனாதிகூட ஆச்சி சொல்ல உணர்ந்ததுண்டு.

கற்பூரதீபத்தை ஏற்றிக் கண்மூடி சில கணங்கள் ஐயனே எனப் பயபக்தியுடன் வேண்டிக்கொண்ட சேனாதியின் பின்னால் நந்தாவதியும் தன் தாமரைக் கைகளைக் கூப்பியவாறு விழிகளை மூடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அழகிய சிவந்த முகத்தையும், மூடியிருந்த விழிகளுக்கு மேல் கருகருவென வில்லாய் வளைந்து கிடந்த புருவங்களையும் பார்த்துச் சேனாதி ஏதோ நினைத்தவனாகத் திரும்பிக் கற்பூம் கொளுத்தும் கல்லில் ஏறியிருந்த கரியைச் சுட்டுவிரலினால் கொஞ்சம் எடுத்து, நந்தாவதியின் புருவங்கள் சந்தித்த இடத்துக்கு மேலாக நெற்றியில் பொட்டாக வைத்தான். அவனுடைய விரலின் ஸ்பரிசத்தை உணர்ந்த நந்தா விழிகளைத் திறந்து அழகாகச் சிரித்தாள். 'ஆ!... இப்பதான் நந்தாவின்ரை முகம் நல்ல வடிவாய்க் கிடக்கு!" என அவன் சொன்னபோது அவளுடைய முகம் குப்பெனச் சிவந்து போயிற்று. உண்மையிலேயே அந்தக் கன்னங்கரு பொட்டு அவள் நிலவு முகத்தின் எழிலை மேலும் அழகாக்கியிருந்தது. தானும் விரலில் எஞ்சியிருந்த கரியை நெற்றியில் தீற்றிக்கொண்டு, 'வா நந்தா போவம்!" என அவளையும் அழைத்துக்கொண்டு அயலில் இருந்த திருக்கோணம் வயல்வெளிக்குச் சென்றான் சேனாதி.

அங்கு சென்றதும், அவன் உடனேயே அவ் வயல்வெளியில் நுழையாது, ஒரு பெரிய காயாம் பற்றைக்குப் பின்னால் தன்னையும் நந்தாவதியையும் மறைத்துக்கொண்டு, கிளைகளை விலக்கிக்கொண்டு வெட்டையைக் கவனித்தான். அவன் நந்தாவை மெல்ல அழைத்து எதிரே தெரிந்த காட்சியைக் காண்பித்தான். அங்கே ஒரு கூட்டம் காட்டுக்கோழிகள் தரையைக் கிண்டி மேய்ந்துகொண்டிருந்தன. காலை வெய்யிலின் ஒளியில் காட்டுச் சேவல்;களின் அழகு கண்ணைப் பறித்தது. 'அனே! போஹோம லஸ்ஸணாய்!" என அவள் தன் தாய்மொழியில் சற்று உரக்கவே வியந்தபோது கலைவு  கண்ட காட்டுக்கோழிகள் யாவும் சடசடவென இறக்கைகளை அடித்துக்கொண்டு பறந்தன. அவர்களிருவரும் கலகலவெனச் சிரித்துக்கொண்டே காயா மரத்தின் பின்னிருந்து வெளிப்பட்டபோது, சற்றுத் தொலைவில் தளிர்மேய்ந்த மான்குட்டியும் துள்ளிக்கொண்டு வந்தது.

சுமார் இருபது ஏக்கர் விஸ்தீரணத்தில் வெட்டையாய்க் கிடந்த திருக்கோணன் வயல்வெளியைச் சுற்றி இருண்ட காடு அடர்ந்து கிடந்தது. அந்தக் காட்டில் பெய்யும் மழைநீர், சிறு சிறு ஓடைகளாக, பள்ளப் பாங்காய்க் கிடக்கும் வயலை நோக்கி ஓடிவரும். இந்த ஓடைகளையே சிறு மிருகங்களும், காட்டுக்கோழிகளும் மேய்ச்சலுக்கு வரும் வழிகளாகப் பயன்படுத்தும்.

காட்டுக்கோழிகளின் காலடிகள் பதிந்திருந்த ஒரு ஓடையைத் தேர்ந்தெடுத்த சேனாதி கோழிப்பொறி அடிக்க ஆரம்பித்தான். முதலில், கோழிகள் வரும் வழியின் அருகில் விறைப்பாக, பெருவிரல் பருமனில் நின்றதொரு சிறு மரத்தினைத் தன் மார்பளவு உயத்தில் வெட்டி, அதன் நுனியில் ஒரு துண்டு நைலோன் நூலைக் கட்டினான். இந்த மரந்தான் பொறியின் விசைக்கம்பாகச் செயற்படும். அதை வளைத்துச் சிறியதொரு தடையில் நிற்கக்கூடியதாகச் செய்துவிட்டு, கட்டிய நைலோன் நூலின் மறுநுனியை வட்டச் சுருக்காகப் பொறியின்மேல் பரப்பி வைத்தான்.

நந்தா அவனருகிலேயே முழங்கால்களைத் தரையில் ஊன்றியவண்ணம் அவன் பொறி அமைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். பொறியைத் தனது திருப்திக்கு இசைய அமைத்து முடித்த சேனாதி தனக்கருகில் இருந்த நந்தாவைப் பார்த்தான். அவன் முகத்தில் குறும்புப் புன்னகை ஒன்று உதித்தது. 'எங்கே நந்தா.. இதிலை தொடு பாப்பம்!" எனப் பொறியின்மேல் வட்டமாய்க் கிடந்த நூலின் உள்ளே ஒரு இடத்தைக் காட்டினான். நந்தாவதி எவ்விதத் தயக்கமுமின்றி தனது வலதுகைச் சுட்டுவிரலை சட்டென அவன் குறித்த இடத்தில் வைத்தாள். அவ்வளவுதான்! சட்டடெனப் பொறிக்கம்பு இமைக்கமுதல் நிமிர்ந்தது. சுருக்கில் இறுகிய நந்தாவின் சுட்டுவிரலையும், கையையும் விண்ணென்று மேலே இழுத்தது. நந்தா பயத்தில் வீலென்று அலறிவிட்டாள். வலியில் துடித்த நந்தாவதியின் விரல்நுனி அப்படியே கன்றி இரத்தம் கட்டிக்கொண்டது.

சோனதி பயந்து போனான். அவசரமாக அவள் விரலில் இறுகியிருந்த சுருக்கை அவிழ்த்தவன், 'நல்லாய் நோகுதே நந்தா!" எனத் துடித்துப் போனான். கண்களில் நீர்மல்க 'ஆமா சேனா!" என அவள் தலையை அசைத்தபோது தான் பிடித்திருந்த அவளுடைய சுட்டுவிரலை மீண்டும் பார்த்தான் சேனாதி. செவ்விளை நிறத்தில்; மெலிதாக நீண்டிருந்த அவளுடைய விரலின் நுனி சிவப்பாய்க் கன்றிக் காணப்பட்டது. சட்டென அந்த விரலைப் பிடித்துத் தன் வாயினுள் வைத்துக்கொண்டான் சேனா. அவனது வாயின் ஈரமான வெம்மையும், நாவின் இதமான ஸ்பரிசமும் வலியைக் குறைத்தபோது நந்தாவதி மெல்லத் தன் விரலை விடுவித்துக் கொண்டாள்.

'இப்ப நோ குறைஞ்சிட்டுது இல்லையே?.. நான் ஒரு மடையன்.. தப்பித்தவறி விசைக்கம்பு உன்ரை கண்ணிலை பட்டிருந்தால்!.." என அவன் பயந்தபோது, 'ஒரு கண் போனா மற்றக் கண் இருக்குதானே சேனா!" என நந்தா சிரித்தாள். சேனா குனிந்;து அவளுடைய அகன்ற காயம்பூநிற விழிகளைப் பார்த்தான். மழைக்கால வெள்ளம் சந்தணஞ்சுட்ட பரவையில் பெருகும்போது துள்ளியெழுந்து பிறழும் ஆண்டாங்குளத்துக் கயல்மீன்கள் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன. அந்தக் கரிய கண்களில் இப்போதும் கட்டிக்கொண்டு நின்ற கண்ணீர், அவள் சிரிக்கையில் முத்துப்போல் விழியோரங்களில் திரண்டபோது, 'உனக்கு எப்போதும் சிரிப்புத்தான் நந்தா!" எனச் செல்லமாக அவளைக் கடிந்துகொண்டே அவன் அந்தக் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கையில், 'ஏன் சேனா, நான் சிரிக்கக்கூடாதா?" என மீண்டுஞ் சிரித்தபடி குறும்பாகக் கேட்டாள் நந்தாவதி. 'நந்தா எப்போதுஞ் சிரித்துக் கொண்டுதான் இருக்கவேணும்!.. அதுதான் எனக்கு விருப்பம்!" என்று சேனாதி சொன்னபோது அழகாகக் கன்னங்குழிய மீண்டும் சிரித்தாள் நந்தா.
முதலாவது பொறியை மீண்டும் விசையேற்றிவிட்டு மேலும் இரண்டு மூன்று பொறிகளை ஆங்காங்கே அவர்கள் அமைத்துக் கொண்டிருந்தபோது, அருகில் நின்ற மான்குட்டி சட்டென உஷாராகிச் செவிகளைப் புடைத்துக் காட்டுப் பக்கமாகக் குவித்துச் சுவடு எடுத்தது. மறுகணம் அந்த இடத்தைவிட்டு மின்னலெனத் துள்ளி ஊர்ப்பக்கமாக மறைந்தது. இதைக் கவனித்த சேனா சட்டென்று எழுந்து நின்று மான்குட்டி பார்த்த திசையில் காட்டைக் கவனித்தான்.

ஏதோவொரு பெருமிருகம் ஓடிவரும் ஒலி இலேசாகக் கேட்டது. சேனாதி அவசரமாக நந்தாவையும் இழுத்துக்கொண்டு அருகாமையில் சற்றே சாய்ந்து நின்ற பெரிய நாவல் மரமொன்றில் ஏறிக்கொண்டான். காட்டிலே பெரிய மிருகங்கள் ஓடுவதுபோலத் தடிகள் முறியும் சப்தங்களும் கிளைகள் உராயும் ஒலியும் வரவர மிக அண்மையில் கேட்டது. நந்தா பயத்தினாலும், மரத்தால் விழுந்துவிடாமல் இருக்கவும் தனக்கு முன்னே இருந்த சேனாதியை இறுக்கமாகக் கட்டிக் கொண்டிருந்தாள். சேனாதி பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் இருந்த நாவல் மரத்துக்குக் கீழாக, சிங்கராயரின் பட்டியைச் சேர்ந்த எருமை நாகு ஒன்று வெகுவேகமாகத் திருக்கோணம் வயலைக் குறுக்குவைத்து ஓடியது. அதன்பின்னே சுமார் பத்துயார் இடைவெளியில் பழையாண்டங்குளத்துக் கலட்டியன் மூர்க்கமாகத் துரத்திக்கொண்டு ஓடியது. பழையாண்டாங்குளத்துக் கலட்டியனைப் பார்த்த நந்தாவின் விழிகள் பயத்தினாலும் வியப்பினாலும் அகன்றுபோய் அவள் இன்னமும் இறுக்கமாகச் சேனாதியைப் பிடித்துக்கொண்டாள்.

கலட்டியன் துரத்திய எருமைநாகு எதிர்ப்பட்ட பற்றைக் காட்டைப் பிய்த்துக்கொண்டு, பரவைக் கடலில் எருமைகள் கடக்கும் பாதையில் ஓடியது. அதை விடாது பின்தொடர்ந்த கலட்டியனால் கடலில் வேகமாகப் போகமுடியவில்லை. ஆயினும் அது தன் திசையை மாற்றாது எருமைநாகை விடாப்பிடியாகத் தொடர்ந்தது.

கண்கொட்டாது இதைப் பார்த்துக்கொண்டிருந்த சேனாதிக்கு இப்போ சில விஷயங்கள் புரிந்தன. தலையில் புலியைக் காவிக்கொண்டு கலட்டியன் திரிந்ததால் அதன் கூட்டம் அதனைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டும். பின்னர் அது தன் வழக்கமான இடத்தைவிட்டுத் தலம் மாறி நாவற்கேணிப் பக்கமாக வட்டுவனுக்கு நேற்று வந்திருக்க வேண்டும். அங்கு குமுளமுனையாரின் பட்டிக்குள் புகுந்து அவர்களைப் பீதியுறச் செய்திருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தவனாய் சேனாதி சுயநிலைக்குத் திரும்பியபோது, நந்தா தன்னை இறுகக் கட்டிக் கொண்டிருப்பதையும், அவளுடைய இளமார்பு தன் முதுகில் அழுந்தியிருப்பதையும் உணர்ந்தான். அவளுடைய நெஞ்சு பயத்தில் வெகுவேகமாக அடித்துக் கொள்வதைக்கூட அவனால் உணர முடிந்தது. அவன் திரும்பி நந்தாவதியின் முகத்தைப் பார்த்தான். அவளுடைய சிவந்த முகம் வெளுத்துப் போயிருந்தது. விழிகள் விரிந்து இமைகள் படபடவென அடித்தன. அவளுடைய வாலிப உடலின் இறுக்கமான அழுந்தலும் நெருக்கமும் அவன் நெஞ்சுக்குள்ளும், உடலிலும் ஏதேதோ புதிய உணர்வுகளைப் பிறப்பித்தன. எச்சிலைக் கூட்டி விழுங்கிவாறே, 'என்ன நந்தா நல்லாய்ப் பயந்து போனியே!.. இதுதான் பழையாண்டங்குளத்துக் காட்டிலை கொம்பிலை புலியைக் கொண்டு திரிஞ்ச குழுவன்!" எனச் சொன்னபோது நந்தாவதி பயம் சற்றுத் தணிந்தவளாய் தனது பிடியைத் தளர்த்திக் கொண்டாள்.

சேனாதி மரத்திலிருந்து குதித்தான். நந்தா அவசரத்தில் சோனவின் உதவியுடன் மரத்தில் ஏறிக்கொண்டாளாயினும், இப்போ இறங்கமுடியாமல் தவித்தாள். அவளுடைய தவிப்பைக் கண்ட சேனாதிக்கு ஒரே சிரிப்பாகவிருந்தது. அன்று முதல்நாள் அவள் பாலையடி இறக்கத்தில் பொன்னாவரசம் பற்றைக்குப் பின்னால் ஒளிந்து நின்று தன்னைப் பயப்படுத்தியதை நினைத்தவன், 'நந்தா! அண்டைக்கு என்னைப் பயப்புடுத்தினாய் என்ன?.. இப்ப அதுக்காய் இப்பிடியே மரத்திலையிரு!.. நான் வீட்டை போறன்!.." எனச் சொல்லியபோது அவளுக்கு அழுகை வந்துவிட்டது. அதைக் கண்ட சேனாதி மனமிளகியவனாய் மேலே ஏறி அவளுடைய கையைப் பிடித்து இறங்குவதற்கு உதவினான். கீழே இறங்கியதுமே அவள், 'இன்னிக்கு நான் பயந்தது உண்மையான குழுமாட்டுக்குத்தான்!.. ஆனா நீங்க.. அன்னிக்குப் பயந்தது எனக்குத்தானே!... பெரிய ஆம்பிளை!" எனக் கைகளைத் தட்டிக் கேலிசெய்யவே சேனா அவளுடைய தலையில் குட்டு வைப்பதற்குக் கையை உயர்த்தினான். மிக இலாவகமாக அவனுடைய கைக்குத் தப்பியவள், 'ஓ! பயங்! சரியான பயங்!" எனக் கேலி செய்துகொண்டே ஊரை நோக்கி ஓடினாள். சேனாதியும் சட்டெனக் கொம்புக் கத்தியையும் எடுத்துக்கொண்டு அவளைத் துரத்திக்கொண்டு ஓடினான். அவர்கள் அந்தக் காலை வேளையில் பசும்புற்றரையைக் குறுக்கறுத்து ஓடுகையில் இளமானும் கலைமானும் ஓடி விளையாடுவபோல் இருந்தது.

சோனாதியினால் ஏற்கெனவே முன்னால் ஓடிவிட்ட நந்தாவதியைப் பிடிக்கமுடியவில்லை. கிணற்றடியில் கால்கையைக் கழுவிக்கொண்டு வீட்டை அடைந்தபோதுதான், அயல் வளவில் ஒரு மரத்துக்குக் கீழே ஒற்றைக் கொம்பனாக நின்ற பட்டிக்; கேப்பை நாம்பனைக் கண்டான். அவனுடைய நெஞ்சு திக்கென்றது. ஓடிச்சென்று செல்லம்மா ஆச்சியை விசாரித்தபோது விஷயம் புரிந்தது. பழையாண்டாங்குளத்துக் கலட்டியனை நினைக்க அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. மிகவும் துயரத்துடன் கேப்பையாiனிடஞ் சென்று வெகுநேரமாக அதைத் தடவிவிட்டுக் கொண்டான்.

அன்று மாலை, அவன் எருமைகளைச் சாய்த்துப் பட்டிக்குக் கொண்டு வருவதற்காக சுரைப்படர்ந்த குடாப் பக்கமாகச் சென்றபோது எருமைகள் அந்தக் குடாவின் கோடியில் நிற்பது தெரிந்தது. அங்கே எருமைகள் மத்தியில் உயரமாக, அகன்ற கொம்புகள் கொண்ட ஒரு எருமையைக் கண்டதும் அவன் நடப்பதை நிறுத்தி எருமைக்கூட்டத்தைக் கவனமாகப் பார்த்தான். அவனுடைய சந்தேகம் உர்ஜிதமாயிற்று. ஆமாம்!... அந்தப் புதிய பெரிய நாம்பன் நிச்சயமாகப் பழையயாண்டங்குளத்துக் கலட்டியனேதான்! பட்டி நாம்பனான கேப்பையான் அங்கே கட்டி வைக்கப்பட்டிருப்பதால் இங்கே கலட்டியனுக்குப் போட்டி எதுவுமிருக்கவில்லை. எனவே அது சிங்கராயரின் எருமைகளோடு சேர்ந்து மேய்ந்து கொண்டிருந்தது. சேனாதி சட்டெனத் திரும்பி ஊருக்கு ஓடினான்.

அங்கே, குணசேகராவுடன் காலையில் காட்டுக்குச் சென்றிருந்த சிங்கராயர் வீடு திரும்பியிருந்தார். சோனதி விஷயத்தைக் கூறியதுமே அவர் உற்சாகமாகத் தன் தொடையில் தட்டி, 'அச்சா!... இண்டைக்கு மடக்கித்தாறன் கலட்டியன் புள்ளையை!" என்று அட்டகாசமாகச் சிரித்துவிட்டு, மால் பரணில் ஏறி உயரே கட்டியிருந்த பெரிய வார்க்கயிற்றை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.

மால் திண்ணையில் அமர்ந்துகொண்டு வார்க்கயிற்றைப் பரிசீலித்தார் சிங்கராயர். மான் தோல்களை நாடாவாக வெட்டி, முறுக்கிப் பின்னப்பட்ட அந்த வார்க்கயிறு மிகவும் பாரமாகவும், மொத்தமாகவும் இருந்தது. அதன் ஒரு நுனியில், கவையுடன் கூடிய மரைக்கொம்பு அடுத்துக் கட்டப்பட்டிருந்தது. மற்ற நுனியில் சுருக்கு வளையமாகக் கிடந்தது. பொழுதுசரிந்து இருள் பரவும் வேளையில் வார்க்கயிற்றைக் கையில் எடுத்துக்கொண்டு, சேனாவை வரச்சொல்லிவிட்டு சுரைப்படர்ந்த குடாவை நோக்கி நடந்தார் சிங்கராயர்.

அவர்கள் சுரைப்படர்ந்த குடாவுக்குச் சற்றுத் தொலைவில் வந்ததும், சிங்கராயர் சேனாதியை நிற்கச் சொல்லிவிட்டு, வாயில் புகைந்த சுருட்டை இழுத்துப் புகையை ஊதினார். புகை காற்றில் அவருக்குப் பின்பாகச் சென்றது. 'காத்துவளம் சரி!.. நீ இதிலை இந்த மரத்தடியிலை நிண்டுகொள்.. நான் போய் கலட்டியனுக்கு காலிலை கொழுவிப் பாக்கிறன்.. " என்று சொல்லிவிட்டுப் பதுங்க ஆரம்பித்தார். சில கணங்களுக்குப் பின் சிங்கராயரைக் காணவில்லை. ஆங்காங்கு நின்ற தில்லம் செடிகளுள் மறைந்து, எருமைகளை நோக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தார் அவர். இருட்டிவிட்ட போதும், வானம் துடைத்துவிட்டதுபோல் கிடந்ததாலும், பரவைக் கடல் ஓரே வெளியாக இருந்ததாலும் சேனாதியால் எருமைகளை ஓரளவுக்குப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

அவனுடைய நெஞ்சு பரபரப்பில் படபடவென அடித்துக் கொண்டது. எருமைகளின் கால்களுக்கு இடையில் பதுங்கிச் சென்று, குழுவன் மாட்டுக்கு காலுக்குச் சுருக்கு வைப்பது என்பது எவ்வளவு கஷ்டமும், அபாயமானதும் என்பதை அவன் அறிந்திருந்தான். அத்துடன் கலட்டியன் சாதாரணமான குழுவன் அல்ல. அது மிகவும் மூர்க்கமும், அசுரப்பலமும் கொண்டதென்பது தெரிந்திருந்ததால், அவன் பயந்தான். குழுவன் மனித வாடையை உணர்ந்துகொண்டு தாக்க முற்படுமேயானால் உயிருடன் தப்பிவரவே முடியாது. சிங்கராயரைப்போன்ற அஞ்சா நெஞ்சமும், அனுபவமும் உடையவர்க்கே அது கஷ்டமான காரியம்.

நிமிடங்கள் கழிந்து மணித்தியாலங்களாகி விட்டிருந்தன. ஒரு அசுகையையும் காணவில்லை. நிலவுகூட கீழ்வானில் உதயமாகிக் கொண்டிருந்தது. எனினும் சேனாதி பொறுமையுடன் காத்திருந்தான். காட்டு விலங்குகளுக்குக் காலக் கணிப்பு என்பதே கிடையாது. விலங்குகளை வேட்டையாடுவதற்குரிய சமயமும் வசதியும் வரும்வரை வெகு பொறுமையாக புலி, நரி முதலியவை காத்திருக்குமாம். சிங்கராயர் தன் அனுபவத்தைச் சேனாதிக்கும் பாடமாகப் புகட்டியிருந்தார்.

இவற்றையிட்டுச் சிந்தித்துக் கொண்டிருக்கையிலே எருமைக் கூட்டத்தினருகே இருந்த ஆட்காட்டி ஒன்று கிரீச்சிட்டுக் கொண்டே எழுந்து பறப்பதும், எருமைகள் வெருண்டு ஓடுவதும் சேனாதிக்குத் தெரிந்தது. .. சே!.. தப்பிவிட்டது! .. என அவன் வாய்விட்டுச் சலித்துக் கொள்ளும்போதே திருக்கோணம் வயல் பக்கமாக ஒரு உருவம் பரவைக் கடலைக் குறுக்கறுத்து ஓடுவது தெரிந்தது. அது கலட்டியன்தான் என அவன் கணித்தபோது, அதன் பின்னால் எதுவோ நீரில் கோடுபோல இழுபடுவது தெரியவே சேனாதி மகிழ்ச்சியினால் துள்ளினான். ..ஆகா! கலட்டியன் பின்னால் அந்தரத்தில் இழுபடுவது வார்க்கயிறுதான்!.. சோனதி சந்தோஷம் கரைபுரளச் சிங்கராயரை நோக்கி ஓடினான். சிங்கராயர் தனது எருமைகளைக் குரல்கொடுத்து அமைதிப்படுத்;திக் கொண்டிருந்தார். சேனாதியைக் கண்டதுமே, 'கலட்டியனுக்கு பின்னங்காலுக்கு கொழுவியிருக்கிறன்! திருக்கோணம் வயல் காட்டுக்கையே மச்சானுக்கு கொம்பு சிலாவீடும்!" எனச் சிரித்தார் சிங்கராயர்.

வார்க்கயிற்றின் நுனியில் கொக்கை போன்று கட்டப்பட்டிருக்கும் உறுதியான பெரிய மரைக்கொம்பு, எதாவது பெருமரத்தின் வேரில் கொழுவிக் கொள்ளும்போது, கலட்டியன் மூர்க்கமாக இழுக்கும். வேர் உறுதியாகவும், பலமாகவும் இருந்தால் குழுவன் அதைக் கழற்றிக்கொள்ள இயலாமல், மூர்க்கமாக அங்குமிங்கும் சுற்றிப் பாய்ந்து காட்டில் கட்டுப்பட்டு நிற்கும். பின்னர் அங்குபோய், கவனமாகவும், அவதானமாகவும் தலைக்கு கயிற்றை எறிந்து, கொம்பைச் சுற்றிச் சுருக்குவைத்து இழுத்துக் குழுவனை விழுத்திக் கட்டிவைப்பது சோனதிக்குத் தெரிந்த விஷயந்தான். ஆனால் இந்தக் கலட்டியன் இந்தச் சங்கதிகளுக்கெல்லாம் மசியுமா எனச் சேனாதி தனக்குள் சந்தேகப்;பட்டான்.

சேனாதியும் சிங்கராயரும் எருமைகளைச் சாய்த்து வந்து பட்டிக்குள் அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, அங்கு குணசேகராவும், நந்தாவதியும் வந்திருந்தனர். நந்தாவதியின் தந்தை குணசேகராவுக்கு சிங்கராயரிடத்தில் பெரும் அபிமானம். அவனுக்குக் கீழே வேலைசெய்யும் ஆறு சேவையர் பார்டிக்காரரும், பாடசாலைக் கட்டிடத்தில் தங்கியிருக்க, குணசேகரா, பாடசாலைக் கட்டிடத்துக்கும் சிங்கராயர் வீட்டுக்கும் இடையில் தனது பட்டாப்பத்து ஓலைக் குடிசையை அமைத்து அதில் மகளுடன் தங்கியிருந்தான்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த நாலைந்து குடும்பங்களுக்கு, குமுளமுனைக்கு மேலேயுள்ள ஆறுமுகத்தா குளத்தின்கீழ் நீர்ப்பாசனக் காணிகள் வழங்கப்பட்டபோது, அவர்கள் அங்கு குடிபெயரவே, படிப்பதற்குப் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் பாடசாலையை மூடிவிட்டிருந்தனர். எனவே பாடசாலைக் கட்டிடத்தை உபயோகிக்க சேவையர் பாட்டிக்கு அனுமதி கிடைத்திருந்தது. குணசேகராவின் கீழ் வேலைபார்க்கும் அனைவரும் சிங்களவர்கள். சிங்கராயரிலும், அவர் மனைவிபேரிலும் மதிப்பும், அன்பும் உடையவர்கள். காலையில் அங்கு வந்து தயிர் வாங்கிச் செல்வார்கள். அவர்களுக்கு எதாவது நோய்நொடி என்றால், ஓடிப்போய்ப் பார்த்துக் கைமருந்து செய்யச் செல்லம்மா ஆச்சி தவறுவதில்லை. அவர்கள் சிங்கராயர் குடும்பத்துடன் அன்பாகப் பழகியபோதும், மரியாதை கருதி அனேகமாக ஒதுங்கியே இருப்பார்கள். வேலைகளை முடித்துவிட்டு இரவுப் பொழுதைச் சீட்டாடிக் கழித்துவிடுவார்கள். குணசேகராவுக்கு சீட்டு விளையாடுவதே பிடிக்காது. அதனால் பொழுதைப் போக்குவதற்காக நந்தாவதியையும் கூட்டிக்கொண்டு சிங்கராயர் வீட்டு முற்றத்துக்கு வந்துவிடுவான். நந்தாவதி செல்லம்மா ஆச்சியிடம் ஒண்டிக்கொள்வாள். ஆச்சியிடம் உலக்கையைப் பறித்து நெல் குற்றிக் கொடுப்பாள். தன் தாயை இழந்திருந்த அவளுக்கு செல்லம்மா ஆச்சியிடம் நிறையவே அன்பு கிடைத்தது.

குணசேகராவைக் கண்டதுமே சிங்கராயர் கலட்டியனுக்கு வார்க்கயிறு படுத்ததையிட்டுக் கூறிவிட்டு, காலையில் குழுவனுக்கு தலைமந்து வைக்கச் செல்கையில் குணசேகராவையும் கூடவரும்படி அழைத்தார்.

'அதுக்கென்ன! ஐயா சொன்னா நாங் வாறதுதானே!" என அவன் ஆர்வமுடன் பதில் சொன்னான். மூன்று வருடங்கள் அவன் இங்கு தொழில் புரிந்தும் இன்னமும் அவனுக்குத் தமிழ் சரியாகப் பேச வரவில்லை.

செல்லம்மா ஆச்சியும் நந்தாவதியும் முற்றத்து நிலவில், தெல்லுக்கொட்டைகளை வைத்துப் பாண்டி விளையாடிக் கொண்டிருந்தனர். சேனாதி சாப்பிட்டுவிட்டு மால் திண்ணையில் படுத்திருந்தவாறே நந்தாவதி பாண்டி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். குப்பி விளக்கின் ஒளியில் அவளுடைய சிவந்த முகத்தின் கருவிழிகள் அடிக்கடி அவனிடத்தில் பாய்ந்து திரும்புவதைப் பார்த்தவாறே அவன் உறங்கிப்போனான்.


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ - 06
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 02:13
TamilNet
HASH(0x5597d6c07fa0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 02:13


புதினம்
Fri, 29 Mar 2024 02:13
















     இதுவரை:  24714821 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4922 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com