அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ - 11
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 11   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Friday, 07 April 2006

11.

சிறந்த ஆரோக்கியமான தேகத்தைக் கொண்டிருந்த சிங்கராயரின் தொடையில் ஏற்பட்ட காயம் பத்து நாட்களுக்குள்ளாகவே ஆறிவிட்டிருந்தது. எனினும், டாக்டரின் சொற்படி அவர் உடல் பூரணமாகத் தேறும்வரையில், தண்ணீரூற்றில் மகள் கண்ணம்மாவுடன் தங்கியிருந்தார். அவளுடைய கணவனும் பிள்ளைகளும் அவரை மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொண்டனர்.

மகள் கண்ணம்மா சிங்கராயருக்குக் குழுவன் வெட்டிப் போட்டதாம் என முதலில் அறிந்தபோது மனம் பதைபதைத்துப் போனாள். ஆனால் அவர் நாளடைவில் தேறி, அவள் வீட்டில் வந்து தங்கியபோது இந்தச் சந்தர்ப்பத்துக்காக உள்ளுரச் சந்தோஷப்படவே செய்தாள். இந்த வழியிலாவது தாய்தந்தையருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்ததே என அவள் மகிழ்ந்தாள்.

சிங்கராயருக்கோ ஆண்டாங்குளத்தை விட்டு இங்கே தண்ணீரூற்றில் தங்கியிருப்பது நீரில் வாழும் மீனைத் தரையில் தூக்கிப்போட்டது போலிருந்தது. காயம் ஆறிவிட்டதுதானே, இனிப் போகலாம், அங்கே மாடுகன்று, வீடுமனை என்ன பாடோ என அவசரப்பட்டார். ஆனால் கண்ணம்மா அவர்களை விடவே இல்லை. ஒருநாள் மாலையில் அவர்கள் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கையில், கண்ணம்மா தன் மனதில் இருந்த எண்ணத்தை மெல்ல வெளியிட்டாள். 'அப்பு! நீங்கள் ஏன் இந்த வயதிலும் மாடு கண்டோடை காடு கரம்பையெல்லாம் திரியவேணும்.. அம்மாவும் இப்ப நல்லாய் தளர்ந்துபோனா.. பேசாமல் மாடுகண்டு எல்லாத்தையும் வித்துப்போட்டு இஞ்சை எங்களோடை வந்து இருங்கோ!.. இந்தப் பெரிய வீட்டிலை எல்லா வசதியும் கிடக்க அந்தக் காட்டுக்கை கிடந்து ஏன் அவதிப்படுறியள்?" எனக் கேட்டாள்.

சிங்கராயர் சிலகணம் தன் மகளை ஏறிட்டுப் பார்த்தார். பின்னர், 'தங்கச்சி!.. நீங்கள் வேணுமெண்டால் எனக்குப் பிறகு மாடு கண்டெல்லாத்தையும் வில்லுங்கோ!.. ஆனால் ஆண்டாங்குளத்தை விட்டிட்டு இஞ்சை வந்து இருங்கோ எண்டு என்னைக் கேக்காதை!.. நான் செத்தாலும் அங்கைதான் சாகவேணும்!.. நான் விடுற கடைசி மூச்சு ஆண்டாங்குளக் காத்திலைதான் கலக்கோணும்!.. என்ரை சாம்பலும் ஆண்டாங்குளத்து ஆத்திலைதான் கரையவேணும்!.." என ஆணித்தரமாக தன் முரட்டுக் குரலில் கூறினார் சிங்கராயர்.

இதைக் கேட்ட கண்ணம்மா தன்னருகே அமர்ந்திருந்த தன் தாயைத் திரும்பிப் பார்த்தாள். அவள் அமைதியான புன்னகையுடன் இருந்தாள். .. நான் அவற்றை நிழல்தான்!.. அவர் எங்கை இருக்கிறாரோ அங்கைதான் நான் இருப்பன்! .. என்பது போலிருந்தது அவளுடைய புன்னகை.

இருப்பினும் அவர்கள் சீக்கிரம் ஆண்டாங்குளம் செல்லாமலிருக்க கண்ணம்மா ஒரு உபாயத்தைத் தேடிக்கொண்டாள். 'நாளைக்குச் சனிக்கிழமைதானே!.. சேனாதியை ஒருக்கால் ஆண்டாங்குளம் அனுப்பி வீடுவாசலைப் பாத்துக்கொண்டு வரச்சொல்லுவம்.. நீங்கள் இன்னும் இரண்டுமூண்டு நாள் இருந்திட்டுப் புதன்கிழமை அளவிலை ஆண்டாங்குளம் போகிலாம்!.. அப்புவும் நடந்துபோற அளவுக்குச் சுகமாகிவிடுவார்!.." என அவள் ஆவலுடன் கேட்டபோது, சிங்கராயர் கொடுப்புக்குள் சிரித்தபடி, 'சரி! அதுக்கென்ன.. அப்பிடிச் செய்வம்!" எனச் சம்மதித்தபோது கண்ணம்மா மகிழ்ந்து போனாள்.

அவளைவிட அதிகமாக, பாடசாலைவிட்டு வீடு திரும்பிய சேனாதி விஷயத்தைக் கேட்டு மகிழ்ந்தான்.

ஆண்டாங்குளத்தில் செல்லம்மா ஆச்சி இல்லாதது நந்தாவதிக்குப் பெருங்குறையாகத் தெரிந்தது. ஆயினும், அவள் அதிகாலையிலேயே எழுந்து, தகப்பனுக்கு வேண்டியவற்றைச் செய்துவிட்டு, சிங்கராயர் வீட்டுக்குச் சென்று, முற்றம், மால், குசினி யாவற்றையும் கூட்டித் துப்பரவு செய்வாள். அடுப்பில் உலைவைத்து சிங்கராயரின் வேட்டை நாய்கள் வயிறுவாடாமல் பார்த்துக் கொண்டாள். மான்குட்டி பின்தொடர அவள் இந்த வேலைகளையெல்லாம் மிக மகிழ்ச்சியுடன் செய்தாள். அவற்றைச் செய்கையில் அவளுடைய மனம் சதா சேனாவை நினைத்துச் சுவைக்கும். அன்று அவன், கோழிப்பொறிச் சுருக்கிலே தன் சுட்டுவிரல் அகப்பட்டுக் கொண்டபோது, அதனைச் சட்டென்று அவன்தன் வாயினுள் வைத்து வலியைகை; குறைத்ததை எண்ணிக் கொள்வாள். வெதுவெதுவென்ற ஈரமும், தன் விரலைச் சுற்றி ஸ்பரிசித்த அவனுடைய கதகதப்பான நாவும், அவள் மனதில் ஒரு கிறக்கத்தை உண்டுபண்ணும். வெட்கத்தில் முகம்சிவக்க, அதே விரலைத் தன் வாயினில் வைத்துச் சுவைத்துவிட்டுச் சட்டென எடுத்துக்கொள்வாள் நந்தாவதி. ஒவ்வொரு சின்னச் சின்ன வேலையைச் செய்யும்போதும், சேனாவுக்காகவே செய்கின்றோம் என்று மனங்களிப்பாள்.

அன்று சனிக்கிழமை குணசேகரா தனது ஆட்களையும் கூட்டிக்கொண்டு அதிகாலையிலேயே வேலைக்குப் புறப்பட்டுப் போயிருந்தான். பொழுது விடிவதற்கு முன்பாகவே நந்தாவதி எழுந்திருந்து தகப்பனுக்கு மதிய உணவையும் தயாரித்துக் கட்டிக் கொடுத்திருந்தாள். சிங்கராயர் வீட்டுக்கு வந்து வீடுவாசலைத் துப்பரவு செய்து கொண்டிருக்கையில், பாலையடிப் பக்கமாக ஆட்காட்டிகள் கத்துவது கேட்டது. இன்று சனிக்கிழமை அல்லவா! ஒருவேளை சேனாதான் வருகிறானோ என்ற எண்ணம் துளிர்க்கவே, நந்தாவதி கருங்கூந்தல் காற்றில் பறக்க, பாலையடி இறக்கத்தை நோக்கி, பனைகளினூடாகப் பறந்தாள். அங்கே, அவள் நினைத்தது போன்று, சோனதிராஜன் வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது அவளால் தன் மகிழ்சியை அடக்கவே முடியவில்லை. ஓடிச்சென்று அவனுடைய கைகளை இறுகப் பற்றியவாறே கூட நடந்து வந்தாள். அவள் தனக்காகவே ஓடிவந்ததைக் கண்ட சேனாவின் நெஞ்சு பூரித்துப் போயிற்று.

தண்ணென்றிருந்த அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டே, சேனாதி பனைகளினூடாக நடந்து வந்து பட்டியையும், வீட்டையும் பார்த்தபோது வியந்துபோனான். அவை யாவும் கூட்டித் துப்பரவாகவும் ஒழுங்காகவும் இருந்தன. 'நந்தா கெட்டிக்காறிதான்!" என்று சொல்லிக் கொண்டே அவளுடைய முகத்தை நோக்கிய போதுதான், அவளுடைய அழகிய நெற்றியில் இருந்த கறுப்புப் பொட்டைக் கவனித்தான் சேனாதி. அவன் விழிகள் மகிழ்ச்சியினால் விரிய, 'ஆ.. நந்தா இப்ப எவ்வளவு வடிவு!" என்று பாராட்டியபோது, நந்தாவதி செம்மைபடரச் சிரித்தாள்.

'நந்தா!.. நீ இஞ்சை எல்லாத்தையும் செய்தது எனக்கொரு வேலையும் இல்லாமல் போச்சுது!.. நான் இப்ப வரேக்கை பாத்தனான்.. கடலிலை நல்ல றால் கிடக்கு!.. வாறியே புடிக்கப் போவம்!" என உற்சாகமாகக் கேட்டான். 'ஆமா! எனக்கு இன்னிக்குப் பூரா ஒரு வேலையும் இல்லை!.. தாத்தா அந்திக்குத்தான் வருவாங்க!.." எனக் குதூகலித்தாள் நந்தா.

சோனதி தான் உடுத்துவந்த சாறத்தையும், சேட்டையும் களைந்து வைத்துவிட்டு, சிங்கராயர் வீட்டில் வைத்திருந்த தனது சாறத்தை எடுத்து உடுத்துக் கொண்டான். பரவைக் கடலில் சேற்றில் அளைந்து இறால் தடவ வேண்டுமாதலால் அவன் நந்தாவதியையும் ஓடிச் சென்று பழையதாய் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு வரும்படி சொன்னான். அவள் உடை மாற்றிக்கொண்டு வருவதற்கிடையில், இறால் பிடித்துப் போடுவதற்கான பனையோலை உமலையும் எடுத்துக் கொண்டான். அவன் வந்ததிலிருந்தே அவனைச் சுற்றி வேட்டம் பாய்ந்த நாய்களைத் தடவி அன்புகாட்டிக் கொண்டிருக்கையில் நந்தா வந்துவிட்டாள். அவள் மேலே செம்மஞ்சள் நிறத்தில் சட்டையும், கீழே கத்தரிப்பூ நிறத்தில் துண்டுமாகக் கட்டிக்கொண்டு ஓடிவந்தாள்.

அவர்களிருவரும் அந்த இளங்காலைப் பொழுதில், குதூகலமும், உற்சாகமும் மிக்கவர்களாகக் கிராமத்துக்குக் கிழக்கே கிடந்த சுரிவாய்க்காலை அடைந்தனர். நந்தாவதியும மான்குட்டியும் கரையில் நிற்கச் சேனாதி முழந்தாளில் இருந்து சுரிவாய்க்காலில் இறால் தடவிப் பார்த்துவிட்டு, உதட்டைப் பிதுக்கிக் கொண்டான். 'இஞ்சை றால் இல்லை!.. நந்தா வா.. துண்டித்தீவுக் கடலுக்குப் போவம்!.." எனச் சொல்லிவிட்டு எழுந்து நடந்தபோது, நந்தாவதியும் சுரிவாய்க்காலில் இறங்கி அவனுடன் கூடவே சென்றாள். இடுப்பளவு ஆழமான நீரில் அவள் இறங்கிச் செல்வதைப் பார்த்த மான்குட்டி மணி, ஏக்கத்துடன் அவர்களையே சிலநிமிடங்கள் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, ஊர்ப்பக்கமாக மேயப் போய்விட்டது.

கிராமத்திலிருந்து சுமார் அரைமைல் தூரத்தில் இருந்த துண்டித்தீவு பரவைக் கடலை அவர்கள் அடைந்தபோது, சேனாதி தண்ணீரில் அமர்ந்து இறால் தடவினான். சட்டென்று அவன் முகம் மலர்ந்தது. வெற்றிப் பெருமிதத்துடன் தன் கையிலிருந்த பெரிய இறாலைத் தண்ணீரில் கழுவிவிட்டு நந்தாவுக்குத் தூக்கிக் காட்டினான். 'அனே! எவ்வளவு பெரிசு!" என வியந்த நந்தா, 'ஐயோ சேனா!.. எனக்கும் றால் பிடிக்கச் சொல்லித் தாங்களேன்!" எனச் சிறுபிள்ளைபோற் கெஞ்சினாள்.

அவளை அழைத்து தண்ணீரில் தன்னருகில் முழந்தாள்களில் அமரவைத்து அவள் கையைப் பிடித்து தண்ணீரின் கீழே மெத்தென்று சேறாக இருந்த தரையைத் தடவ வைத்தான் சேனா. சேற்றில் மாடுகளின் காற்குளம்பு பதிந்த பள்ளமான இடங்களுள், இறால்கள் ஆபத்து வருவதைக் கண்டு பதுங்கிக் கொள்ளும். அப்படியே இலேசாகத் தடவிக்கொண்டு போய், இறால் கையில் தட்டுப்பட்டதும் சட்டென்று பொத்திப் பிடித்துவிட வேண்டும். இரண்டொருமுறை காட்டிக் கொடுத்ததுமே நந்தா புரிந்து கொண்டாள். முதன்முதலில் சேனாதி பிடித்த இறாலைவிடக் கொஞ்சம் பெரிதாக ஒரு கருவண்டன் இறாலைப் பிடித்ததுமே, அவள் குழந்தையாய்க் குதித்தாள். 'பாத்தீங்களா! என்னோடைதானே பெரிசு!" எனப் பெருமையடித்துக் கொண்டாள். சேனாதி தன் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டிருந்த ஓலை உமலுக்குள் பிடித்த இறால்களைப் போட்டுக் கொண்டிருந்தான். நந்தா தனது வயிற்றருகே, உடுத்தியிருந்த துண்டை மடியாகக் கட்டிக்கொண்டு, தான் பிடித்த இறால்களை அதற்குள் கட்டிவைத்துக் கொண்டாள். மடி நிறைந்ததுமே, துள்ளிக்கொண்டு வந்து சேனாதியின் பட்டைக்குள் சேர்ந்த இறால்களைப் போடுவாள்.

நிர்மலமான நீலவானம் மேலே கவிந்திருந்தது. அவர்களைச் சுற்றிலும் அமைதியான பரவைக்கடல். அதன் கரையோரங்களில் பச்சசைப் புற்றரைகளில் மரங்களும், பற்றைகளும் காலை வெய்யிலில் குளித்துக்கொண்டு நின்றன. ஒரேயொரு வெள்ளைக் கொக்கு மட்டும் ஒற்றைக் காலில் மீனுக்காக சற்றுத் தொலைவில் தவமிருந்தது. அவர்களிருவரையும் தவிர அந்தக் காட்டுப் பிரதேசத்தில் எந்த ஜீவராசியின் நடமாட்டமே காணப்படவில்லை.

இளம் காட்டுப்பறவை ஜோடிபோல அவர்கள் தமக்குள்ளேயே பேசிச் சிரித்துக்கொண்டே இறால் தடவிப் பிடித்தனர். சிங்கராயரின் சுகசேமம், அவர்கள் எப்போ வருவார்கள், சேனாவின் தங்கை தாய் எப்படியிருக்கின்றனர், பின்பு கேப்பையான், கலட்டியன், காட்டு வேட்டை என்றெல்லாம் அவர்கள் சலிக்காமலே பேசிக்கொண்டிருந்தனர்.

அந்தப் பேச்சில் நந்தாவதியின் பிறந்த இடமாகிய கண்டியைப் பற்றிப் பேச்சு வந்தபோது, நந்தாவதி மிகவும் பாசத்துடனும், பெருமையுடனும் தனது பிறந்தகத்தைப் பற்றிக் கூறினாள். 'அங்கிட்டு பெரிய பெரிய மலையெல்லாம் இருக்கு சேனா!.. நம்மோடை வூட்டுக்கு கிட்டச்சே மாவலி ஆறு ஓடுது.. அங்கிட்டுக் குளிக்க இறங்கினால் வெளியே வர மனசே இருக்காது சேனா!.. கரையெல்லாம் சந்திரகாந்திப் பூ காடாய்ப் பூத்துக்கிடக்கும்!.. நம்ம மாவலி ஆத்திலே நெறயப் பெரிய பாறைங்க கெடக்கும்.. அதிலே உக்காந்திட்டே குளிக்கலாம்.. மேலேயிருந்து தண்ணி ஜில்லெண்டு கொட்டும்!.. ஆத்துக்கு அடியிலை இப்பிடிச் சேறாகவே இருக்காது.. ரத்ரங் பவுடர்மாதிரி.. ஆமா.. பவுனு பவுடர்மாதிரி மண்ணு மினுங்கிக்கிட்டே இருக்கும்!.." இந்தியத் தமிழின் இனிய வாடையும், சிங்களச் சொற்களுமாய் கன்னி மழலையில் பேசிய நந்தாவதியை சேனாதி இறால் தடவிக்கொண்டே கவனித்தான். அவளுடைய கண்கள் கனவில் மிதப்பனபோல் இருக்க அவள் பேசிக் கொண்டேயிருந்தாள். இவளுடைய இந்தத் தங்கநிறமான மேனியும், பூரணச் சந்திரன் போன்ற முகமும், அதன் பின்னே மழைமேகமாய்க் காணும் இருண்ட கூந்தலும், தண்ணென்று ஒளிரும் அகன்ற கரிய விழிகளும், மாவலித்தாய் அவளுக்கு ஆசையோடு வழங்கிய சீதணங்கள் போலும் என அவன் நினைத்துக் கொண்டான். உடனே தன்னுடைய நிறம் அவனுக்கு ஞாபகம் வரவே, தனது மார்பையும் கைகளையும் பார்த்துக்கொண்டான். சிங்கராயரின் மினுமினுக்கும் கருநிறம் கொஞ்சமும் மாற்றுக் குறையாது அவனிடத்தில் வந்து சேர்ந்திருந்தது. அவன் அதையிட்டு மேலே சிந்திப்பதற்குள் நந்தாவதி, 'ஆமா சேனா!.. நீங்கதான் ஒருநாளும் மலைநாடு பாத்ததில்லையே!.. அடுத்த பயணம் நாம கண்டிக்குப் போகக்குள்ள வர்ரீங்களா?" என ஆவலுடன் கேட்டாள். 'பாப்பம்!.. அம்மாவைக் கேட்டுப் பாக்கிறன்!.." எனச் சேனா சொன்னபோது, அவளுக்கு இறந்துபோன தன் தாயின் ஞாபகம் வரவே, 'சேனா! என்னோட அம்மா ரொம்ப அழகு!.. நாள்பூராப் பாத்திட்டே இருக்கலாம்!.. இப்ப அவ இல்லை!.." எனக் கண்கள் கலங்கினாள் நந்தா. அவன் அவளைத் தேற்றும் வகையில், 'கவலைப்படாதை நந்தா!.. அதுக்குத்தான் நாங்கள் இருக்கிறம்!" எனக் கூறியபோது, 'ஆமா!.. ஆமா!.." என ஆமோதித்துக் கொண்டாள் நந்தாவதி.

சேனாதி கொண்டு வந்த பெரிய பனையோலை உமல் இறால்களினால் நிரம்பி விட்டபோது, அவன் மேலே பொழுதைப் பார்த்தான். சூரியன் தலைக்கு நேரே ஏறியிருந்தது. தண்ணீரில் அமர்ந்து இருந்ததாலும், அதைத் தழுவிவந்த மென்காற்று குளிர்ந்து வீசியதாலும், நந்தாவின் இனிய குழந்தைப் பேச்சினாலும் அவனுக்குப் பொழுது கழிந்ததே தெரியவில்லை. இறால் தடவிக்கொண்டே அவர்கள் சுனையடிக்கு வந்திருந்தார்கள். ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் பரவைக் கடற்கரையருகே இருந்த இந்தச் சுனை எந்தக் கோடையிலுமே வற்றுவது கிடையாது. சில்லென்ற இளநீர்போன்ற தண்ணீர் எப்போதுமே அங்கு நிறைந்திருக்கும்.

'வா நந்தா!.. சுனையிலை இறங்கி கழுவிக்கொண்டு வீட்டை போவம்!.. மத்தியானமாயப் போச்சு.. நல்லாய்ப் பசிக்குது!.." என அவளை அழைத்துக்கொண்டு கரையேறிய சேனாவுடன் சென்றாள் நந்தாவதி. இருவருமாகச் சுனையில் இறங்கி நன்றாகச் சேறு போகும்வரை கைகால்களைக் கழுவிக்கொண்டனர். இருவருடைய உடைகளுமே நனைந்திருந்தன. நந்தா புற்றரையில் ஏறி நின்றவாறே தான் உடுத்தியிருந்து துண்டை அப்படியே பிழிந்துவிட்டுக் கொண்டிருக்கையில், சேனாதி திடீரென வலியில் ஆவென்று அலறியது கேட்கவே அவள் திடுக்கிட்டுப்போய்ச் சேனாவைப் பார்த்தாள். அவன் ஒரு காலை உயர்த்திப் பிடித்தபடி வலியில் துடிக்கவே நந்தாவதி ஓடிச்சென்று அவனைத் தாங்கிக்கொண்டு அவனுடைய பாதத்தைப் பிடித்துப் பார்த்தாள். அங்கே குதிக்காலில் ஒரு மீன்முள் இறுகிக்கிடந்தது தெரிந்தது. நந்தாவின் தோளைப் பிடித்தவாறே சேனாதி அந்த முள்ளை எடுக்க முயன்றபோது, அது அப்படியே குதிமட்டத்தில் முறிந்து போய்விட்டது. அட! என்று அலுத்துக் கொண்டவனை, 'வாங்க சேனா!.. போயி நெழல்ல உக்காந்து.. மௌ;ள நா எடுத்திடறன்!" என்று அவனைக் கைத்தாங்கலாகவே, கரையில் குடைபோலக் கவிந்துநின்ற மரத்தடிக்கு அழைத்துச் சென்றாள் நந்தா.

வெகுகாலமாக உப்புச் சேற்றில் ஊறியிருந்த கெழுத்திமீன் முள்ளாதலால், சேனாவினால் அந்த வலிக் கடுப்பைத் தாங்க முடியவில்லை. முகம் வேதனையில் கோணியது. 'கொஞ்சம் பொறுத்துக்குங்க சேனா!.. நா எடுத்திடறன்.." என்று அவனைத் தேற்றிய நந்தாவதி, அவனை அடிமரத்துடன் சாய்ந்திருக்கச் செய்துவிட்டு, அவனுடைய காலை மடித்துத் தனது மடிமீது வைத்துக்கொண்டு, முள் தைத்திருந்த இடத்தைக் கையினால் துடைத்து விரலால் தடவிப் பார்த்தாள். ஒட்டமுறிந்த முள் விரலில் நெருடியது. அந்த இடத்தில் தனது விழிகளைப் பதித்தபடியே மளமளவென்று தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை எடுத்து, ஆழமாகத் தைத்திருந்த முள்ளை எடுக்க முயற்சித்தாள். சேனாதியோ வலியினால் விழிகளை இறுக மூடிக்கொண்டு, 'பாத்து!.. பாத்து!.." எனத் துடித்தான். ஊசியினால் அந்த முள்ளை எடுக்க முடியாதென கண்டபோது, அவள் சட்டெனக் குனிந்து சேனாதியின் பாதத்தில் வாயை இறுகப் பதித்து பற்களினால் முள்ளின் அடிப்பாகத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, மெல்ல மெல்ல முள்ளை எடுத்தாள். முள்ளை எடுத்த இடத்தில் பொட்டுப்போலத் துளிர்த்த இரத்தத்தை அவள் துடைத்தபோது வலி சட்டனெக் குறையவே, சேனாதி விழிகளைத் திறந்தான். இரத்தைத் துடைத்துவிட்டு தன் விரல்களால் அவனுடைய குதிப்பகுதியை நசித்து மேலும் ஒருசொட்டு இரத்தத்தை வெளியேற்றிவிட்டு, 'இப்பவும் வலிக்குதா சேனா?" என அன்புடன் கேட்டுக்கொண்டே நிமிர்ந்தவள், சேனாவின் பார்வை தனது உடலில் பதிந்திருந்த இடத்தைக்கண்டு சிவந்துபோனாள். தலையைக் குனிந்துகொண்டு சட்டை பிரிந்திருந்த இடத்தில் ஊசியைக் குத்திக்கொண்டாள்.

 à®šà¯‹à®©à®¾à®¤à®¿ தன் உடல் முழுவதும் இளரத்தம் குப்பென்று பாய உடல் தகிக்கும் உணர்வை முதன்முதலில் அனுபவித்தவனாய், என்ன செய்வதென்றே தெரியாமல் அவளுடைய செழுமையான மடியில் அழுந்திக் கிடக்கும் தனது காலை எடுக்க முடியாதவனாய்த் தவித்தான். நந்தாவதி தனது மடிமீது கிடக்கும் அவனுடைய பாதத்தையும் அதைப் பற்றியிருக்கும் தனது கரத்தையும் குனிந்த தலை நிமிராமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அந்தப் பாதத்தைத் தூக்கி அப்பால் வைக்க முடியாதவாறு அவளுள் அலையலையாக எழுந்த புதிய உணர்வுகள் அவளை அலைக்கழித்தன. நீரோட்டத்தோடு மிதந்து செல்லும் தாமரை புஷ்பம்போன்று அவள் அவனுடைய இழுப்புக்கு இசைந்தபோது, அவனுடைய வெம்மையான இதழ்கள் அவளுடைய கன்னத்தின்மேல் சுடச்சுடப் பதிந்தபோது, அவள் தன் விழிகளை மெல்ல மூடிக்கொண்டாள்.

அவர்களுக்கு மேலே குளிர்ந்த நிழல் தரும் பச்சைமரம் குடைபிடிக்க, கடல்காற்று அந்த இளைய உடல்களைத் தழுவிச் சிரித்தது. பறவைகள் தேன் குரலில் நீட்டி நீட்டிப் பாடின. வானம் நிர்மலமாய், நீலமாய் அகன்று உயர்ந்து நின்று வாழ்த்தியது. மண்மாதா இந்த இயற்கையின் இளைய ஜோடிகளை மெத்தெனத் தாங்கி ஸ்பரிசித்து மகிழ்ந்தாள். இதுதான் இயற்கை! இதுதான் உண்மை! என்று இயற்கைத்தாய் சிலிர்த்துக் கொண்டாள்.

 à®®à¯à®¤à®©à¯à®®à¯à®¤à®²à®¾à®• நீலவானில் இறகுவிரிக்கும் இரண்டு சின்னப் பறவைகள் எழுந்தும் தாழ்ந்தும், வட்டமிட்டும் பறந்து எக்களித்தன. முதன்முதலாக நீரில் பிறந்த மீன்குஞ்சுகள் நழுவியும் வழுவியும், நீரினுள் ஊடுருவிப் பாய்ந்தும் குதூகலித்துக் கொண்டன.

கதிரவனின் சாய்வான கதிர்கள் மரக்கிளைகளின் கீழாக வந்து அவர்களைச் சுட்டுச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தபோது, சட்டென எழுந்துகொண்ட நந்தாவதி, 'நா வூட்டுக்குப் போறன்!.. வாங்க சேனா!.." எனச் சொல்லிப் பறந்துவிட்டாள்.

சேனாதி எழுந்து சுனைக்கரையில் கிடந்த இறால் உமலையும் கையில் எடுத்துக்கொண்டு காலை விந்தி விந்தி ஊரைநோக்கி நடந்தான்.

அவன் வன்னிச்சியா வயல் கிணற்றடியில் குளித்து வீட்டுக்குப் போனபோது, அங்கு நந்தாவதி குளித்துவிட்டுப் பளிச்சென்று புதிய ஆடைகளுடன், வெண்ணிலவு நெற்றியில் கறுத்தத் திலகத்துடன் 'வாங்க சேனா!.. பஸ்சுக்கு நேரமாயிடிச்சி!.. சாப்பாடு கொண்டாந்திருக்கேன்!.. சாப்பிட்டுப் புறப்படுங்கோ!" எனப் பரிவுடன் அழைத்தாள்.

சேனாதியால் அதிகம் பேசமுடியவில்லை. உடைகளை மாற்றிக்கொண்டு அமைதியாக உணவைச் சாப்பிட்டான். என்ன சாப்பிடுகின்றோம் என்பதை உணராமலேயே அவன் சாப்பிட்டான். நந்நதாவே அவனருகில் அமர்ந்து அவன் உண்பதையே வாஞ்சையுடன் பார்த்திருந்தாள்.

அவன் சாப்பிட்டானதுமே உமலில் இருந்த இறாலில் முக்கால் பங்கைத் தனது பன்பையில் வைத்துவிட்டு மிகுதியை, 'இதை உன் தாத்திக்கு எருமை நெய்யிலை பொரிச்சுக் குடு! நீயும் சாப்பிடு.. .. நல்லாயிருக்கும்!" என்று உமலை அவளிடம் கொடுத்தான்.

சேனாதியின் கையை இறுகப் பற்றிக்கொண்டு பாலையடி இறக்க வெண்மணல் மேடுவரை அவனுடன் வந்த நந்தாவதி, அவன் விடைபெற்றுக்கொண்டு ஆற்றில் இறங்கி நடந்து, பாதை வளைவைக் கடந்து மறையும்வரை அப்படியே கண்கொட்டாமல் பார்த்து நின்றாள். பாதை வளைவை அடைந்த சேனாதி நின்று திரும்பிக் கையை அசைத்துவிட்டு நடந்து மறைந்தபோது, அவளுடைய அகன்ற கருவிழிகளில் குளமாகத் தேங்கிய கண்ணீர் பொட்டென முத்தாக விழுந்து அவளுடைய கன்னத்தில் வழுக்கிக்கொண்டே போய் மார்பை நனைத்தது.

வாலிப வயதின் வசந்த காலத்தில் அவர்களை அறியாமலேயே அந்த நிர்மல உள்ளங்களில் பூத்த புனிதமான புதிய மலர்கள், பிரிவென்னும் வெம்மைபட்டு வாடிக்கொண்டிருந்தன.


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ - 06
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 11:03
TamilNet
HASH(0x559bbbb3b8b0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 11:03


புதினம்
Thu, 28 Mar 2024 11:03
















     இதுவரை:  24712093 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5444 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com