அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


என் பனை என் பூவரச மரம் எங்கே?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: செந்நெல் மருதன்.  
Thursday, 04 May 2006

என் பனை என் பூவரச மரம் எங்கே?(சென்னையில் இருந்து வெளிவரும் புதியபார்வை ஏப்ரல் 16-30. 2006 இதழில் வெளிவந்த இச்செய்தி நன்றியுடன் இங்கு மீள் பிரசுரமாகின்றது. படங்கள் எம்மால் இணைக்கப்பட்டவை. படங்கள் தந்துதவியர் வாசுதேவன்.)


ஏப்.1.2006
பாரிசில் வாழும் புலம்பெயர்ந்த எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் தொகுத்த  'பாரிஸ கதைகள்' நூலை முன்வைத்து 'சாரளம்' அறக்கட்டளையில் ஏற்பாடு  செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வனுபங்கள் குறித்த  உரையாடல் கவிஞர் இன்குலாப் தலைமையில் நிகழ்ந்தது. இடம்:வான்மலர்  கிறிஸ்டியன் மீடியா சென்டர்.சென்னை.


'சாளரம்' அறக்கட்டளை தமிழ்மண், மனிதர்கள் சார்ந்த பிரச்சனைகளையும்  அக்கறையையும் கருத்தரங்கம்,  உரையாடல் மூலம் தொடர்ந்து செயலாற்றி  வருகின்றது. இது வரவேற்கத்தக்க முயற்சி.
வரவேற்புரையில் 'பொன்னி' பதிப்பாளர் வைகறை 'அகதி என்ற வார்த்தை  மறைந்து புலம்பெயர்தல் என்பது 90களுக்கு பிறகுதான் வழக்கத்திற்கு  வந்தது' என்றார்.
'பாரிஸ் கதைகள் நூலில் கி.பி.அரவிந்தன் எழுதியுள்ள முன்னுரை  வழக்கமானவற்றிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. கதைகளைவிட அதை  ரசித்துப் படித்தேன். உலகளாவிய அளவில் கூலி என்ற சொல் தமிழர்களை  மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக மாறியிருக்கின்றது.  நான்  நெருக்கடி காலத்தில் கவிதையே எழுதவில்லை என்று மனுஷ்யபுத்திரன்  கூறியிருக்கிறார். என்று கேள்விப்பட்டேன். ஒரு போராட்டமே  நடத்தியிருக்கிறேன். அவர்களுக்கு தெரியாது. சிலர் வேண்டுமென்றே  வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறார்கள்' என்றார் தன் தலைமையுரையில்  இன்குலாப்.
அடுத்துப் பேசிய ஓவியர் மருது ஐரோப்பிய பயணங்களில் தனக்கு ஏற்பட்ட  நெகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 'என்னிடம் தொடர்ந்து  பதினைந்து ஆண்டுகள் ஈழத்தில் நடந்த போராட்டங்கள், கொடுமைகள்,  துயரங்கள் பற்றிய கதைகள் பலரால் சொல்லப்பட்டிருக்கின்றன.  அவர்களுக்காக நிறைய படங்கள் வரைந்து கொடுக்க வேண்டிய சூழல்.  ஈழமண்ணுக்காக உயிர்நீத்த வீரனின் படத்திற்கு கீழ்தான் ஒவ்வொரு  குடும்பமும் வாழ்கின்றது' என்ற நெகிழ்வுடன் குறிப்பிட்டார் மருது.
முனைவர் க.பஞ்சாங்கம் நூல் பற்றிய விமர்சனத்தை நீண்ட கட்டுரையாக  வாசித்தார். எழுத்தாளர் எஸ்.பொ.பேசும்போது 'புலம்பெயர்ந்த வாழ்க்கை  என்பது எல்லா நாடுகளிலும் ஒன்றுபோலில்லை. ஆஸ்திரேலியாவில் அகதி  கார்டு கிடையாது. 1988-ல் ஒரு வகையான வாழ்க்கை என்றால் 2002-ல்  முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை. புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம்  முழுவதும் பெரும் நெருக்கடிகளுக்கிடையிலும் தமிழ்த்துவ அடையாளத்தை  தக்க தக்க வைத்துள்ளார்கள்' என்றார் உறுதியான குரலில்.
பாரிஸ் வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர்  வாசுதேவன். 'பாரிசில் இருக்க கூடிய புலம்பெயர் வாழ்க்கை பரிமாணங்கள்  மிகவும் பலப்பட்டவை. அங்கே ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டால்  நீங்கள் வந்து எவளவு காலம் என்று கேட்டுக் கொள்வார்கள். 90க்கு முற்பட்ட வாழ்க்கை மாடுமாதிரி உழைக்க வேண்டிய கடினமான காலமாக இருந்தது.  அன்று ரெஸ்ட்டாரண்டில் கடுமையாக உழைத்தவர்களெல்லாம் இன்று  சொந்தமாக உணவகங்களை வைத்துள்ளார்கள். 19 வருடங்களுக்கு பிறகு என் சொந்த கிராமத்தை தேடி யாழ்பாணம் சென்றேன். எல்லாம் மாறிக்கிடந்தது.
அப்பா, அம்மா யார் பேரைச் சொன்னாலும் தெரியவில்லை. என்னுடைய ஊர்,  என் வேப்பமரம், என் பனை, என் பூவரச மரம் எங்கே போனதென்று  தெரியவில்லை. இந்த வலி எல்லா ஈழத்தமிழர்களுக்கும் உண்டு' என்று  புலம்பெயர் துயரத்தின் வலியை நெகிழ்ச்சி ததும்ப பேசினார் வாசுதேவன்.


     இதுவரை:  24776531 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2602 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com