அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 10 May 2026

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ - 13
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 13   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Tuesday, 23 May 2006

13.

தண்ணீரூற்றில, அன்று கிழக்கு வெளுக்கும் வேளையிலேயே எழுந்துவிட்டிருந்தான் சேனாதிராஜன். வெள்ளிக்கிழமை ஆதலால்; வழமைபோலவே, துவாயை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு, ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலுக்கு வந்திருந்தான்.

சதாகாலமும் வெண்மணலில் சுரக்கின்ற தெளிந்த தண்ணீர் ஊறிப்பாயும் அந்த அழகிய சூழலில், பசுமையான வயல்களின் ஓரமாகக் கோவில் கொண்டிருந்த ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிற் சூழல் மிகவும் ரம்மியமானது. மனதுக்கு அமைதியைத் தருவது. அங்கு சில்லென்ற தண்ணீர் தானாகவே ஊறிச் சுரந்து எப்போதுமே பாய்ந்து கொண்டிருப்பதனால், அந்தக் கிராமத்துக்கு தண்ணீரூற்று என்ற பெயர் வந்திருந்தது.

மேட்டில் அமைந்துள்ள அழகிய கோவிலுக்கும், பரந்து கிடக்கும் பச்சை வயல்களுக்கும் இடையே உள்ள பெரிய கேணியில் அமிழ்ந்து குளித்துவிட்டு, நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டு ஊற்றங்கரை வினாயகர் சந்நிதியில் போய் நின்றாலே ஒரு சொல்லரிய நிம்மதியும், நிறைவும் நெஞ்சில் தங்குவதை, அங்கு வழிபடுபவர் அறிவர்.

சேனாதி, அறிவார்ந்து அங்கு வழிபடாவிடினும், வெள்ளிதோறும் அங்கு சென்று வணங்குவதில் ஒரு திருப்தியைப் பெறுவதுண்டு. இன்று காலையில் எழுந்திருக்கும் போதே அவன் மனம் ஏனோ குழம்பிக்கிடந்தது. கேணிச் சுவரில் உட்கார்ந்து, வெளுத்துக் கொண்டுவரும் கீழ்வானை வெறித்தபடியே வேப்பங்குச்சியைச் சப்பிக் கொண்டிருந்தவனுடைய மனவானிலும் கருமேகங்கள் மூட்டமிட்டிருந்தன.

ஆண்டாங்குளத்தின் அன்றைய அனுபவம் அவன் உணர்வுகளை வெகுவாக அலைக்கழித்திருந்தது. இன்றே ஆண்டாங்குளம் செல்லவேண்டும், நந்தாவைக் கண்டு பேசி இன்புறவேண்டும் என அவனுடைய இதயம் ஒருசமயம் துடிக்கும். மறுகணம் இனிமேல் அங்கு செல்லவே கூடாது, அவளைப் பார்க்கவே கூடாது போன்றதொரு எண்ணமும் தோன்றி அலைக்கழித்தது. அதி தீவிரமாக விரும்பும் ஒன்றை அதேசமயம் அதி தீவிரமாக வெறுக்கும் ஒரு உணர்வும் அவனுள் தோன்றியது. முற்றும் பழுத்த வேப்பம்பழம் கசப்புடனே இனிப்பது போல, அன்றைய அனுபவத்தை நினைக்கும் போதெல்லாம் வெறுப்பும், விருப்பும் சமமாக விரவிக்; கலந்துகாணும் ஒரு வினோத உணர்ச்சிக்கு ஆளாகித் தவித்தான்.

கேணிச்சுவரிலே அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்த சோனதியின் தோளை ஒரு கரம் தட்டியபோது அவன் திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தான். அங்கே சிரித்தபடி குமுளமுனைக் காந்தி நின்றிருந்தான். 'நல்லது!.. நீயும் இப்போது கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்கப் பழகிக்கொண்டாய்!" என்றவன் சேனாவின் அருகில் அமர்ந்துகொண்டு, வெளுத்துக் கொண்டுவரும் கீழ்வானை ஊன்றிக் கவனித்தான். இருண்டு கிடக்கும் எமது சமுதாய வானில் எப்பொழுதுதான் உதயசூரியன் உதிக்கப் போகின்றதோ என் அவன் மனதில் எண்ணியபோதே கீழ்வானம் சிவந்தது. ஆதவனுடைய ஒளிமயமான கதிர்க்கற்றைகள் கால்விட்டு வானக்கோடியைத் தொட்டபோது காந்தியின் மெல்லிய உடல் சிலிர்த்தது. அவன் திடீரெனச் சேனாதியின் கையைப் பிடித்து, 'சேனாதி!.. அந்தப் பாட்டு!.. சீர்காழியின்.. நமது வெற்றியை நாளை சரி;த்திரம் சொல்லும்.. அந்தப் பாட்டைப் பாடு மச்சான்!" என உணர்ச்சிவசப்பட்டு அவசரமாய்க் கேட்டபோது, அவனுடைய மனநிலை சேனாதியையும் தொற்றிக் கொண்டதுபோல், அவன் சட்டென்று அந்தப் பாடலை மனம் ஒன்றிப் பாடினான். கணீரென்ற குரலில் அவன் பாடிய பாடலின் ஒவ்வொரு சொல்லையும் கேட்கையில் காந்தியின் உடல் புல்லரித்தது. கண்களில் நீர்மல்கியவனாய், அந்தப் பாடல் முடியும்வரை, எழுந்துவரும் உதயசூரியனையே பார்த்துக் கொண்டிருந்தான் காந்தி.

பாடல் முடிந்தும், சொற்பநேரம் அது எற்படுத்திய உணர்ச்சி ததும்பும் மனோநிலையிலிருந்து விடுபடமுடியாது அவர்கள் மௌனமாக அமர்ந்திருக்கையில் பொழுது நன்றாக விடிந்துவிட்டிருந்தது.

காந்தி குமுளமுனையைச் சேர்ந்தவன். தண்ணீரூற்றில், உறவினர் வீட்டில் தங்கி வித்தியானந்தாக் கல்லூரியில், பல்கலைக்கழகப் புகுமுகவகுப்பில் கற்றுக் கொண்டிருந்தான்.

அவர்களிருவரும் கேணியில் இறங்கிக் குளிக்கும்போதுதான், காந்திக்கு ஆசிரியர் கே. பானுதேவன் ஒருதடவை ஆண்டாங்குளம் செல்ல விரும்புவது ஞாபகத்துக்கு வந்தது.

ஆசிரியர் கே.பி தனித்துவமான போக்கைக் கொண்டிருந்த ஒரு சிறந்த ஆசிரியர். வரலாற்றுப் பாடத்தில் எம். ஏ பட்டம் பெற்றிருந்த அவர் பழகுவதற்கு இனியவர்.எளிமையான வாழ்க்கை வாழ்கின்ற பிரம்மச்சாரி. யாழ்;பாணத்தில் அளவெட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த அவர், விடுமுறைகளிற்கூட வீடு செல்வது குறைவு. முல்லைத்தீவு மாவட்டத்தின் காடுகளின் மத்தியில் குளங்களையொட்டி அமைந்திருக்கும் சிறிய கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களோடு தங்கி, அந்த மக்களின் வாழ்க்கையிலும், வேலைகளிலும் சந்தோஷமாகப் பங்கு கொள்வார். கிராமத்து மக்களுடன் சேர்ந்து வயலில் அருவி வெட்டுவார். இரவில் சூட்டுக் களங்களுக்குச் சென்று சூடடிப்பு வேலைகளிலும் கலந்துகொள்வார். அவரைக் கே.பி சேர் என மாணவர்கள் அன்புகலந்த மரியாதையுடன் அழைப்பார்கள்.

காந்தி அவருடைய பிரத்தியேகப் பிரியத்துக்குரிய மாணவன். அவர் அவனுடைய ஆதர்ஷ புருஷர். எனவேதான் அவன் சேனாதியிடம் கே. பி. சேரை எப்போ ஆண்டாங்குளத்துக்கு அழைத்துச் செல்லலாம் எனக் கேட்டான்.

அவன் சற்றும் தயக்கமின்றி, 'நாளைக்குச் சனிதானே!.. நான் ஆண்டாங்குளம் போவன்.. காலமை வெள்ளெண பஸ்சுக்கு நீ கே.பி சேரையும் கூட்டிக்கொண்டு வா!" எனச் சொன்னான். அப்படிச் சொல்லும்போதே அவனுடைய இதயம் கொடிகட்டிப் பறந்தது.

000

அடுத்தநாள் சனிக்கிழமை. நேரத்தோடு எழுந்து சமையலை முடித்து தகப்பனுக்குச் சாப்பாடு கட்டிக் கொடுத்து அவரைக் காட்டுக்கு அனுப்பிவிட்டுக் கிணற்றடிக்கு வந்த நந்தாவதி அவசரம் அவசரமாகக் குளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பார்வை கிணற்றடியில் நின்ற ஒற்றைப் பனையின் நீண்ட நிழலைக் கவனித்தது. இந்நேரம் குமுளமுனைக்குச் சேனாதி பஸ்ஸில் வந்து இறங்கியிருப்பான் என்ற எண்ணம் அவளுக்குத் தேனாய் இனித்தது.

பத்து நிமிடங்களில் அவள் சீவிமுடித்துச் சிங்காரித்துக்கொண்டு, பாலையடி இறக்கத்து வெண்மேட்டில் அமர்ந்தவாறே தன் செவ்வாழைக் கால்களை ஆற்றுநீரில் அளைந்து விளையாடிக் கொண்டிருந்தாள். கைகொள்ளாமல் அள்ளித் தளர்த்தி முடிந்திருந்த தனது கருங்கூந்தற்  காட்டில் ஒரு கொத்து இரத்தநிற வட்டம்பூவைச் சொருகியிருந்தாள்.

மஞ்சளும் சிவப்புமாய்க் காட்டுப்பூவரச மலர்கள் மிதந்த அந்த அகன்ற நதியில் சட்டெனத் துள்ளிய ஒரு கெண்டை மீன் காலை வெய்யிலில் வெள்ளிக் கட்டியாய்ப் பளீரிட்டுவிட்டு நீரில் வீழ்நது மறைந்தது.

நந்தாவதி தன் செவ்விதழ்களை அழகாகக் குவித்துப் புன்முறுவல் பூத்தாள். ஆமாம்! அவளுக்கு அன்று சேனாவுடன், குடைபிடித்து நின்ற மரத்தின் கீழே கிடைத்த அனுபவம் அவளுள் ஆனந்தமாய்க் கிளுகிளுத்தது.

சிறு வயதிலிருந்தே தனிமையில் வாழ்ந்ததாலும், அவளுடைய வயதுச் சினேகிதிகள் கிடையாததாலும் அவளுடைய உள்ளம் நிர்மலமாய் களங்கமின்றி இருந்தது. புஷ்பவதியாகிவிட்டிருந்த அவளே வாலிபத்தின் வாளிப்பில் மலர்க் காடாக இருந்தாள். அன்று சேனா தன்னை ஆசையுடன் அணைத்ததும், தன் வெதுவெதுப்பான இதழ்களால் தன் இதழ்களைக் கவ்விச் சுவைத்ததும் அவளுக்கு விகல்பமாகவே தோன்றவில்லை. அழகியதொரு குழந்தை அவளைக் கட்டிக் கொண்டிருந்தாலும் அவள் அவ்வாறே அந்தக் குழந்தைக்கும் முத்தம் கொடுத்திருப்பாள். இயல்பாகவே பெண்களுள் குடியிருக்கும் தாய்மை உணர்வு அவளை அறியாமலே அவளுள் முகிழ்த்திருந்தது. தனக்குச் சொந்தமான ஒன்றை அள்ளவும் அணைக்கவும், பேணவும் பாதுகாக்கவும், அந்த உணர்வு அவளை உந்தியிருந்தது. எனவே எந்தவிதக் கல்மிஷமும் இன்றி, நந்தா நதிக்கரையோரம் தனக்கே சொந்தமானவனுக்காகக் காத்திருந்தாள்.

ஆனால் சேனாவுக்கோ அது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தபோதும் அவன் முற்றும் அறியாத ஒன்றாக இருக்கவில்லை. இன்பமும் துன்பமுமாய் அன்று அவனுள் உயிர்த்தேன் சுரந்தபோது அவன் தன்னையே இழந்திருந்தான். இன்னமும் வாலிபத்தின் பூரணத்தினுள் பிரவேசிக்காத அவனுக்கு அந்த அனுபவம் எல்லையற்ற வேதனையையும், அதேசமயம் வார்த்தையில் வடிக்கமுடியாததான இன்பத்தின் உச்சத்தையும் அவனுக்குச் சிலகணங்கள் காட்டியிருந்தது. வெனை அறியாமல் அவன் அதற்காக மீண்டும் தீவிரமாக ஏங்கிக்கொண்டே, அதை அதேயளவு தீவிரத்துடன் வெறுக்கவும் செய்தான்.

ஆற்றின் அக்கரையில் கிளைவிட்டிருந்த கண்ணா மரங்களுக்கும் அப்பால் ஆட்காட்டிப் பறவைகள் கிர்Pச்சி;ட்டவாறே எழுந்து வானில் வட்டமிட்டபோது, சரேலென எழுந்துகொண்ட நந்தாவதியின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. சேனா வருகிறான் என்று களித்தவளுக்கு, இரண்டு மூன்றுபேரின் பேச்சுக்குரல் கேட்கவே அவள் வட்டம்பூச் செடிகளுக்கூடாகச் சென்று மறைந்துகொண்டாள். சேனா வந்தாலும் தனியே வரவில்லைப்போலும் என அவள் சிந்தித்துக்கொண்டு, யார் வருகின்றார்கள் என்பதைக் கவனித்தாள்.

பாதையின் வளைவில் நடுத்தரவயதான ஒரு கரிய மனிதரும், இன்னுமொரு சிவந்த மெல்லிய வாலிபனும் சேனாதியுடன் வருவதைக் கண்ட நந்தாவின் முகம் மலர்ந்தது. பின் ஏதோ நினைத்தவளாக அவள் அப்படியே பற்றைகளின்  மறைவிலே சென்று மலைக்காட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ - 06
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 10 May 2026 13:24
TamilNet
The escalating confrontation involving the U.S., Israel and Iran, combined with the growing denial of operational access to American forces in the Persian Gulf, is rapidly elevating the strategic importance of the island of Sri Lanka within U.S. military calculations in the Indian Ocean, writes Norway-based Eezham Tamil political analyst and anthropology scholar Athithan Jayapalan. As Washington faces increasing difficulties in sustaining its naval and military presence in the Gulf due to Iranian missile capabilities, drone warfare and maritime interdiction strategies, the island?s geographical position, naval infrastructure and longstanding defence ties with the United States are once again assuming major geopolitical significance.
Sri Lanka: Colombo re-emerges as strategic U.S. platform amid Persian Gulf crisis


BBC: உலகச் செய்திகள்
Sun, 10 May 2026 13:24


புதினம்
Sun, 10 May 2026 12:53
















     இதுவரை:  28680718 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 8743 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com