அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ - 14
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 14   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 14 June 2006

14.

அந்த அகலமான நதியில் முழங்காலளவு நீரில் இறங்கி வருகையிலேயே கே.பி. அக்கரையில் பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டையும், அதன் பின்னணியில் பூத்துநின்ற வட்டம்பூ செடிகளையும் மிகவும் இரசித்தவராய், அது என்ன பூ என சேனாதியிடம் வினவினார். 'அதுதான் சேர் வட்டம்பூ!" என்று சேனாதி பதிலளித்ததும், அவர் சிரித்துக்கொண்டே 'இதற்கு வட்டம்பூ என்ற பெயரைக் காட்டிலும் இரத்தம் பூவென்று பெயர் வைத்திருக்கலாம்!" என்று சொன்னவர் நடப்பதை நிறுத்தி, 'இந்தப் பூவையும் இரத்தம்போன்ற அதன் நிறத்தையும் பார்த்ததுமே நான் படித்து ரசித்த கதையொன்று எனக்கு ஞாபகம் வருகின்றது!" என்றார். காந்தி ஆவலுடன் 'சொல்லுங்கோ சேர்!" எனக் கேட்டபோது, ஆற்றினூடாக மெல்ல நடந்தபடியே அவர் அந்தக் கதையைக் கூறலானார்.

'ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னே கடலாலும், உயர்ந்த மலைகளினாலும் வளைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பிரதேசத்தில் ஒரு கூட்டம் மக்கள் வாழ்ந்திருந்தார்களாம். நாளடைவில் அங்கு உணவு, நீர் ஆகியவற்றுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. நீண்ட வறட்சியின் காரணமாக இந்த அவலநிலை ஏற்பட்டபோது அங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். ஒருபக்கம் ஏறவே முடியாத குத்தென்ற உயர்ந்த மலைகள், மறுபக்கம் அலையடிக்கும் ஆழக்கடல். இன்னொரு பக்கம் அப்பிரதேசத்தை வளைத்துக் கிடந்த பயங்கரமான இருண்ட வனம். இவற்றால் வளைக்கப்பட்ட அந்த மக்கள் மத்தியில் வீரமும், துணிவும் மிக்க ஒரு இளைஞன் இருந்தான். எவருமே இதுவரையில் நுழைந்திராத, நுழைய அஞ்சிய அந்தக் கொடிய வனத்தைக் காட்டி அவன் சொன்னான். 'இங்கிருந்தாலும் நாம் சில நாட்களில் பட்டினியால் இறந்து போவோம்!.. வாருங்கள்! இந்தக் காட்டினுள் நுழைந்து வழி சமைப்போம்!.. இந்தக் காட்டுக்கும் அப்பால் நிச்சயமாக ஒரு புதிய, ஒளிமிக்க, வளம்படைத்த உலகம் இருக்கின்றது!" என அழைத்தான். ஆனால் மக்களோ அந்தக் காட்டினுள் பிரவேசிப்பது என்று நினைக்கவே பயந்தனர். சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவர்களுடைய முன்னோர்கள் அவர்களுக்கு அந்தக் காட்டின் பயங்கரத்தைக் கூறிப் பயமூட்டியிருந்ததனால், அவர்கள் தாம் செத்தாலும் பரவாயில்லை, அந்தக் காட்டிலாவது போவதாவது என மறுத்தார்கள். ஆனால் அந்த இளைஞனோ தனது எண்ணத்தைக் கைவிடவில்லை. அந்தக் கொடிய வனத்துக்கும் அப்பால் வளமான வாழ்க்கை உள்ளது என நிச்சயமாக நம்பினான். அயராது பேசிப் பேசி, தன் வயதை ஒத்த இளைஞர் சிலரை ஒன்றுகூட்டி, அந்தக் காட்டில் நுழையப் புறப்பட்டான். மக்களில் பலர் இந்த இளைஞர்களைக் கண்டித்தனர். சிலர் கேலி செய்தனர். மற்றும் பலர் ஏனோதானோ என ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தனர்.

ஆனால் அந்த இளைஞனோ நெஞ்சுரம் மிக்கவனாய், முன்னே சென்று அந்தக் காட்டினுள் நுழைந்து, எதிர்ப்பட்ட பற்றைகளையும், செடிகளையும் வெட்டிச் சரித்தவாறு வழி  சமைத்துக்கொண்டே சென்றான். வெகுதூரம் அவர்கள் இவ்வாறு வந்துவிட்டபோது, ஒரு பயங்கரமான இருள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. அந்த அந்தகாரத்தில் சிக்கிய இளைஞனுடைய நண்பர்கள் திகிலடைந்து போயினர். வந்தவழியே திரும்பிச்சென்று உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் எனச் சொல்லிக்கொண்டனர். இந்நேரம் அவர்கள் இதுவரை முன்னர் கேட்டிராத அந்நியமான ஒலிகளும் பயங்கர ஓசைகளும் கேட்கவே, அவர்கள் பின்வாங்கித் தட்டுத்தடுமாறி அந்த இருளைவிட்டு ஓடமுயன்றபோது, அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த இளைஞன் அவர்களைத் தடுத்து, 'இந்த இருளும் அந்தகாரமும் தற்காலிகமானவைதான்! இந்தப் புதிய சத்தங்கள் நமக்கு அந்நியமானதால் எமக்குப் பயத்தை உண்டுபண்ணுகின்றன, வாருங்கள், மெல்ல மெல்ல, சிறிது சிறிதாகவேனும் முன்னே செல்வோம்!" எனக் கூறியபோது, அவர்கள் தங்களுக்குள்ளே ஒன்றுகூடி, இவனைக் கொன்றுபோட்டால் எமக்குப் பிரச்சனையில்லை! வந்தவழியே திரும்பிச்சென்று ஊரை அடைந்துவிடலாம்", என அவனை வெட்டிக் கொன்றுவிட்டனர். ஆனால் அவர்களுடைய வெட்டால் மார்பு பிளந்துபோய் மல்லாக்காகக் கிடந்த அவனுடைய உடலில் இருந்து ஒரு ஒளிக்கீற்று தெரிவதைக் கண்டு, அவர்கள் அண்மையில் சென்று பார்த்தபோது, இளைஞனுடைய மார்புக் கூட்டினுள் கிடந்த அவனுடைய இதயம் ஒளிமயமாய் பிராகாசித்ததாம்! அந்த ஒளியில் அவர்களைச் சூழ்ந்திருந்த இருள் அகன்றது. அவர்களில் ஒருவன் இறந்துகிடந்த அந்த இளைஞனின் இதயத்தை எடுத்து, முன்னே நடந்து, 'வாருங்கள்! அவனுடைய இதயம் நமக்கு வழி காட்டுகின்றது! இந்த ஒளியிலேயே வழிசமைத்து அந்தப் புதிய உலகத்துக்குச் சென்றுவிடலாம்!" என்று கூறவே, அவர்கள் தைரியத்துடன் வழியமைத்து முன்னேறி, பாலுந்தேனும் பெருக்கெடுத்தோடும் ஒரு புதிய பூமியை வந்தடைந்தனராம். அங்கு, தம்மை வழிநடத்தி வந்த அந்த இளைஞனின் இதயத்தை மண்ணிலே புதைத்தபோது, நாளடைவில் அந்த இடத்தில் ஒரு செடி, இரத்தத் துளிகள் போன்ற சிவப்புப் பொட்டுக்கள் உடைய இதயவடிவத்தில் அமைந்த இலைகளுடன் தோன்றியதாம். அந்தச் செடியை இன்றும் பிளீடிங் ஹாட், அதாவது இரத்தம் பாயும் இதயம் என்ற பெயரில் அழைக்கின்றார்கள்", எனக் கே.பி கதையைக் கூறி  முடித்தபோது, அவர்கள் பாலையடியிறக்க வெண்மணல் திட்டை அடைந்திருந்தனர்.

ஆசிரியர் கே.பி க்கு அந்த இடம் மிகவும் பிடித்துப்போகவே, அவர்கள் அந்த வெண்மணலில் சற்றுநேரம் ஆறி அமர்ந்துகொண்டனர். கே.பி கூறிய கதையில் ஆழ்ந்து தன்னை மறந்திருந்த சேனாதி, அந்த வெண்மணலில் பதிந்திருந்த காலடிச் சுவடுகளைக் கண்ணுற்றபோது களிப்பில் அவனுடைய இதயம் துள்ளியது. அவை நந்தாவினுடையவை, சில நிமிடங்களுக்கு முன்னராகத்தான் அவை இங்கே பதிந்திருக்க வேண்டும் என்பதை அவதானித்த அவன், நந்தா தனக்காக இங்குவந்து காத்திருந்துவிட்டு, அந்நியர் வருகைகண்டு மறைந்திருக்க வேண்டும் என அனுமானித்துக் கொண்டான். அவளுடைய அழகிய பாதச்சுவடுகள் ஓடிச்சென்று வட்டம்பூச் செடிகளின் பின்னே மறைவதை அவதானித்துக் கொண்டே, அவன் நந்தாவின் காலடி மண்ணை கைகளில் ஆசையுடன் அளைந்துகொண்டான். கே.பியின் கதையைக் கேட்டுத் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த காந்தியின் நெஞ்சில் ஒரு வினா உதயமாகியிருந்தது. அமைதியாக அமர்ந்திருந்து அந்த அழகிய சுற்றாடலை இரசித்துக் கொண்டிருந்த ஆசிரியரிடம் அவன் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான்.

'எனக்கென்னவோ இந்த அற்புதங்களில் நம்பிக்கை இல்லை சேர்! எங்காவது செத்துப்போனவனின் இதயம் ஒளி வீசுமா?" எனக் கேட்டபோது கே.பி சிரித்துவிட்டுப் பதில் சொன்னார்.

'காந்தி!.. அந்தக் காலத்தில் ஏடோ, எழுத்தாணியோ இருக்கவில்லை.. அவர்கள் தங்கள் கதைகளை எழுதிவைப்பதற்கு!.. ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு, பின் அவர் தன் பிள்ளைகளுக்கு அந்தக் கதையைக் கூறி, இப்படிக் கர்ணபரம்பரையாகவே இந்தக் கதைகள் நம் முன்னோர்கள் மத்தியில் பரவி, நிலவி வந்திருக்கின்றன. உண்மையில்.. அந்த வழிகாட்டியான தலைவன் தன் இதயத்தில் உதித்த உயர்ந்த, புதிய, முற்போக்கான கருத்துக்களைத் தனது மக்கள்முன் வைத்தபோது, அவர்கள் அவனை நம்பாது கொன்றுவிட்டிருந்தனர். பின்னர், அவனுடைய உயிர்த்தியாகம், அவனுடைய உன்னத கருத்துக்களை அவர்கள் பின்பற்றி நடக்கச் செய்திருக்கின்றது. இந்தக் கதை பரம்பரை பரம்பரையாகச் செவிவழிக் கதையாக வருகையில், கற்பானா சக்தி உiடையவர்களும், அந்தக் கருத்துக்கள் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியவேண்டுமென விழைந்தவர்களும், அந்தக் கதைக்கும், கருவுக்கும் கற்பனையான தெய்வீகங்களை இணைத்திருப்பர். எல்லா அவதார புருஷர்களின் கதைகளும் இவ்வாறுதான் காலப்போக்கில் மாற்றமடைந்தன என நான் எண்ணுகின்றேன். நாளடைவில் அவர்கள் சொன்ன உயர்ந்த, உன்னதமான கருத்துக்களையும், கொள்கைகளையும் கோட்டை விட்டுவிட்டு, அந்த அவதார புருஷர்களைத் தெய்வங்களாக்கி, கண்மூடித்தனமாய் சாரத்தை நழுவவிட்டு, வெறும் சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் முதலிடம் கொடுத்து வாழ்கின்றனர் மக்கள்!" எனச் சொல்லிக்கொண்டே, செடியிலிருந்து தான் பறித்துக் கையில் வைத்திருந்த வட்ம்பூவைப் பார்த்த கே.பி சிந்தனையில் ஆழ்ந்துபோனார்.

பின்பு சட்டென்று முகத்தில் ஒளிதோன்ற, 'காந்தி! இந்தப் பூவுக்கு வட்டம்பூ எனப் பெயர் வந்தது மிகவும் பொருத்தமே!" எனச் சிரித்தபோது, 'ஏன் சேர்?" என ஆவலுடன் கேட்டான் காந்தி.

'சொல்கிறேன் கேள்!" எனச் சுவாரஷ்யமாகத் தொடர்ந்தார் கே.பி.

'வாழ்க்கை வட்டம் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உனக்குத் தெரியும், மனித இனத்தின் ஆரம்பகாலந் தொட்டே அவர்கள் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும், உயர்ச்சியும் தாழ்ச்சியும் மாறி மாறி சகடமாக, சக்கரம்போல வந்திருக்கின்றது. சுரண்டலும், துன்பமும், தன்னலமும் மிக்க இருளான காலகட்டத்தினுள் அவர்கள் வருகையில், திசை தெரியாமல், ஒளியில்லாமல், வழிதெரியாமல் அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் வீழ்ந்து பீறிப்போடுகின்றார்கள். இந்த அவலமும் துன்பமும், அவர்கள் மத்தியில் ஒரு தலைவனை, வழிகாட்டியை உருவாக்குகின்றன. அந்தக் காலத்தின் அவசர, அவசியத் தேவை அப்படியானதொரு தலைவனை உருவாக்குகின்றது. அதேசமயம் அவனுடைய உன்னதமான, பொதுநலம் பயக்கும் கருத்துக்களும், கொள்கைகளும் அவன் காலத்தில் வாழும் சமுதாயத்தையும் மாற்றவே செய்கின்றன. அனேகமாக இந்த ஒப்பற்ற தலைவன் தன் உயிரைத் தியாகம் செய்தே தனது கொள்கைகளை நிலைநாட்டி ஒரு புதிய மார்க்கத்தைக் காட்டுகின்றான். அவன் காட்டும் வழிழயைப் பின்பற்றி புதியதொரு நல்ல மாற்றத்தை அடையும் மனித இனம் காலப்போக்கில் அவனது கொள்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் இருளுக்குள்ளும் அவலமிக்க அந்தகாரத்தினுள்ளும் சிக்கிக்கொள்கின்றது. ஆனால் அந்த அவலமே மீண்டும் ஒரு தலைவனை அவதரிக்க வைக்கின்றது அல்லது உருவாக்குகின்றது. இதுதான் வாழ்க்கை வட்டம் என்பதை மனித இன வரலாறு எமக்குச் சொல்கின்றது. ஆனால், நிச்சயமாக யாரோ ஒருவரோ, ஒரு இனமோ கொடுமையான துன்பங்களை அனுபவித்து தமது இரத்தத்தைச் சிந்தித்தான் ஒரு புதிய உலகம் பிறக்கின்றது. எனவே வாழ்க்கை வட்டத்தை எமக்கு ஞாபகப்படுத்தி நிற்கும் இந்த இரத்தவண்ண மலருக்கு, வட்டம்பூ என்ற பெயர் மிகப் பொருத்தமே!" எனச் சொல்லி முடித்தார் கே.பி.

'இனிப் போவம் சேர்!" எனச் சேனாதி அழைத்தபோது அந்த இரம்மியமான இடத்தைவிட்டு அகலவே மனதில்லாமல் ஆசிரியர் கே.பி, காந்தி உடன்வர கிராமத்தை நோக்கி நடந்தார். நந்தாவதி எங்கு சென்றிருப்பாள் என்ற எண்ணமே மனதில் மேலோங்கி நிற்கச் சேனாதி, ஆசிரியரையும், காந்தியையும் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

மலைக்காட்டு ஓரமாக உயர்ந்து நின்றதொரு பட்டமரத்தில் இரவைக் கழித்து, இப்போதும் சுகமாக வெய்யில் காய்ந்தபடி இருந்த மயில் தோகையன் ஒன்று அகவியபோது கே.பி நின்று அதைப் பார்த்தார். பின்னர் மேலே தொடர்ந்து அவர்கள் நடந்போது, மலைக்காட்டுப் பக்கமாக மான் ஒன்று குய்யிட்டது. அது என்ன சத்தம்? என்பதுபோல் கே.பி சேனாதியைப் பார்த்தார். 'இதுதான் சேர், மான் குய்யிடுற சத்தம்!" என அவன் பதிலளித்தான். 'ஆகா! மானும் மயிலும், கானும் கடலும் சூழ்ந்த இந்தக் கிராமம் உண்மையில் அழகுதான்!" என அவர் மனம்விட்டுப் பாராட்டியபோது, சேனாதிக்கு மனதினுள் சிரிப்புத்தான் வந்தது.

ஏனெனில் மலைக்காட்டினுள் குய்யிட்ட மான் நிஜ மானல்ல! நந்தாதான் மான்போலக் குய்யிட்டவள் என்பது சேனாதிக்குத் தெரிந்திருந்தது. ஆசிரியரும், காந்தியும் காணாதவண்ணம் அவர்கள் பின்னே வந்த சேனாதி மலைக்காட்டுப் பக்கமாக கையை அசைத்து, நந்தா அங்கே மறைந்து நிற்பது தனக்குத் தெரியும் என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டு, ஒன்றும் அறியாதவன்போல் அவர்களைப் பின்தொடர்ந்தான் சேனாதிராஜன்.

மலைக் காட்டினுள் ஒரு சிறிய பாறையின் பின்னே ஒளிந்து நின்று, சேனா கம்பீரமாக நடந்து செல்வதையே கண்கொட்டாது பார்த்து நின்ற நந்தாவதி, தனது இரகசிய சமிஞையை அவன் புரிந்துகொண்டு கையை அசைத்தபோது மகிழ்ச்சியில் மிதந்தாள்.

பாலைக் கறந்து கொண்டுபோய் செல்லம்மா மனைவியிடம் கொடுத்துவிட்டு நின்ற சிங்கராயர், நாய்கள் குரைப்பதைக் கேட்டுப் பனைகளின் பக்கம் பார்த்தார். யாரோ ஒரு புதிய மனிதர் சேனாதியுடனும், காந்தியுடனும் வரவே, நாய்களை அதட்டி அடக்கிவிட்டு வளவு வாசலுக்கு வந்தார்.

அதற்குள் அவர்கள் நெருங்கி வந்துவிட்டனர். 'அப்பு! இவர்தான் எங்களைப் படிப்பிக்கிற பானுதேவன் சேர்! ஆண்டாங்குளம் பாக்க வந்திருக்கிறார்!" என அறிமுகப்படுத்தினான் சேனாதி. 'அப்பிடியோ! அச்சா!.. வாருங்கோ வாத்தியர்!" என அன்புடன் அதிர்ந்த சிங்கராயரைச் சற்று வியப்புடனேயே பார்த்தார் கே.பி.

ஆறடி உயரம். தலையில் கட்டுக்குடுமி. சற்றே நரைதிரை தென்பட்டாலும் கருங்காலி மரமாய் மின்னிய வைரம்பாய்ந்த உடல். உறுதியான பல்வரிசையின் வெள்ளைச் சிரிப்பு. அதிரும் குரல். நிமிர்ந்த நடை. நேரிய பார்வை. இவை அத்தனையையும் உள்வாங்கிச் சிங்கராயரை வியந்தபடி அவரின் பின்னால் சென்ற கே.பி, முற்றத்தில் வந்து அக்கினிக் கொழுந்துபோல் நின்று, 'வாருங்கோ!" என்று முகம் மலர்ந்து வரவேற்ற செல்லம்மா ஆச்சியைக் கண்ணுற்றபோது, உன்னதமான சிலவற்றைத் தரிசிக்கும்போது பெறும் உணர்வை அனுபவித்தார் கே.பி ஆசிரியர்.

பசுவின் சாணமும், முருக்கமிலைச் சாறும், கரியும் சேர்ந்து அழுத்தி மெழுகி மினுக்கிய மால்திண்ணை ஆசிரியருக்குச் தண்ணென்று குளிர்ந்தது. பனையோலையால் அறுக்கையாக வேயப்பட்டிருந்த மால். பக்கத்தில், சிறிதாக ஆனால் மிகவும் தூய்மையாகவும் ஒழுங்காகவும் காணப்பட்ட அடுப்படி, வெண்மணல் முற்றத்தில் வேப்பமரத்துக்கு அருகே கம்பீரமாய் நின்ற நெல்போடும் கொம்பறை என்பவற்றின் நேர்த்தியை மனதுக்குள் வெகுவாகச் சிலாகித்த கே.பி., எளிமையும் தூய்மையுமாய் வாழும் இந்த முதிர்வயதுத் தம்பதிகள்தான் எவ்வளவு பாக்கியசாலிகள் என எண்ணிக்கொண்டார்.

'மனுசி! வாத்தியாருக்கும் பொடியளுக்கும் பால் குடு! சேனாதி!.. இப்பதான் மலைக்காட்டுப் பக்கமாய் காட்டுக்கோழிச் சாவல் ஒண்டு கத்திக் கேட்டுது! பன்பையுக்கை நாலம்நம்பர் தோட்டா கிடக்குது.. எடுத்துக்கொண்டுபோய் வெடிவைச்சுக் கொண்டு வா!.. நீங்கள் பாலைக் குடியுங்கோ வாத்தியார்! கிணத்தடிக்குப் போய்க் குளிச்சிட்டு வந்திடுறன்.." என மளமளவென உத்தரவுகளைப் பிறப்பித்தபோது, சேனா அகமகிழ்ந்து போனான். இவர்களை எப்படிக் கழற்றிவிட்டு மலைக்காட்டுக்கு நந்தாவிடம் போவது என்று குழம்பிக்கொண்டிருந்த அவனுக்கு சிங்கராயரின் கட்டளை பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று.

'இருங்கோ வாத்தியார்! வந்திடுறன்!" என விடைபெற்ற சேனாதி, நாய்களையும் அழைத்தபடி துவக்குடன் மலைக்காட்டுக்கு ஓடினான்.

நாய்களுடன் சேனாதி ஓடிவருவதைக் கண்டுகொண்ட நந்தாவும் கிளைகளை விலக்கிக்கொண்டு மலைக்காடடோரம் இறங்கி வந்தாள். அவன் அருகில் வந்ததுமே ஆசையுடன் அவனுடைய கையைப் பற்றி, 'என்ன சேனா துவக்கோட வர்றீங்க! என்னைச் சுடவா போறீங்க?" எனக் கேலியாகக் கேட்டுச் சிரித்தாள். 'ஓம் நந்தா! நான் அப்போதை வரேக்கை இஞ்சை மலைக்காட்டுக்கை பொட்டைமான் ஒண்டு குய்யிட்டுது! அதைத்தான் வெடிவைக்க வந்தனான்!" என அவன் சிரித்தபோது, 'ஓகோ! அதுதான் நீங்க அந்த மானைப் பாத்து.. நிண்டுக்கோ!.. உன்னைச் சுடறதுக்கு துவக்கு எடுத்திட்டு வர்ரேன் என்று கை காட்டினீங்களாக்கும்!" நந்தா கேட்டபோது, இருவருமே கலகலவெனச் சிரித்துக் கொண்டனர். காரணமின்றியே சிரிக்க வைப்பதும், காரணமின்றியே அழவைப்பதுமான இளங்காதல், இந்த ஜோடிகளையும் விட்டுவைக்கவில்லை.

'ஆரு சேனா ஒங்ககூட வந்த?" என நந்தா கேட்டபோது அவளுக்கு விஷயத்தைச் சொன்ன சேனாதி, சிங்கராயர் இங்கு தன்னைக் கோழி வெடிவைக்க அனுப்பியதையும் கூறினான். 'ஆமா சேனா!.. வாங்க! அதோ அந்தப் பக்கந்தான் கோழி கத்திச்சு!" என்று கூறவே, நந்தாவதி காட்டிய பக்கம் அவளுடைய கையை விடாமலே பற்றிக்கொண்டு காட்டினுள் நுழைந்த சேனாவுடன் அணைந்தவாறே நந்தா சென்றாள்.

சுமார் ஐம்பது யார் தூரம் அவர்கள் காட்டுக்குள் சென்றதுமே நாய்களின் வரவுகண்டு கலைந்து கத்திக்கொண்டே மேலே பறந்த காட்டுக்கோழிச் சேவல், உயரே ஒரு மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு, இனிமேல் உங்களால் என்ன செய்முடியும்? என்று கேட்பதுபோல், தலையைச் சரித்து நாய்களைப் பார்த்தது. அதன் கண்ணில் படாமல் நந்தாவதியையும் இழுத்துக்கொண்டு பதுங்கி வந்த சேனாதி, வெடிவைக்கக்கூடிய தூரத்துக்கு வந்ததுமே, நந்தாவை விட்டு மறைந்து நின்றவாறே துவக்கை உயர்த்திக் குறி பார்த்தான். மறுகணம் வெடியோசையில் அந்த இடமே அதிர்ந்தது. ஒரு வினாடியேனும் தாமதிக்காத சேனாதி மின்னல் வேகத்தில் சேவல் இருந்த மரத்தின்கீழ் ஓடிச்சென்று, குண்டடிபட்டு குப்புற விழுந்த சேவல் தரையில் விழுவதற்கு முன்னரே அதைத் தனது கையில் இலாவகமாக ஏந்திக் கொண்டான். இவையெல்லாம் அவன் சிங்கராயரிடம் கற்றுக்கொண்ட பாடம்! வெடிகேட்டு கோழியைக் கௌவிப் பிய்க்கச் சரேலென்று பாய்ந்து வந்த நாய்கள், ஏமாந்தவையாக சேனாவின் கையிலிருந்த சேவலைப் பற்றுவதற்குத் தொங்கிப் பாய்ந்தன. அவற்றைச் செல்லமாக அதட்டி விலகச் செய்துவிட்டு, சேவலைத் தலைக்குமேல் உயரப் பிடித்துக்கொண்டு வந்த சேனாதி, 'எப்பிடி நந்தா என்ரை வெடி!" என்று பெருமிதம் பேசினான்.

நந்தாவுக்கு அவனுடைய வெடி, அவனுடைய குரல், அவனுடைய உதடுகள், அவற்றுக்கும் மேலே இலேசாக அரும்பத் தொடங்கியிருந்த இளமீசை அத்தனையுமே மிகவும் பிடித்திருந்தன. ஆசையுடன் அவனைப் பார்த்த நந்தாவதியிடம், 'வா நந்தா வீட்டை போவம்!" எனச் சேனாதி அழைத்தபோது, 'நீங்க இப்பிடியே போங்க! நா ஒருக்கா வூட்டுக்குப் போயிட்டு வந்திர்ரேன்!" எனக் கன்னங்குழியச் சிரித்துவிட்டு ஓடிமறைந்தாள் நந்தாவதி.

பழப்புளியிட்டு அழுத்தியழுத்தி தேய்த்துத் தங்கமாய் மின்னிய வெண்கல மூக்குப்பேணிகளில் பசும்பாலை விட்டு செல்லம்மா ஆச்சி மாலுக்குக் கொண்டு வந்தபோது, எழுந்து நின்று இரு கைகளினாலும் மூக்குப்பேணியை வாங்கிக்கொண்டார் ஆசிரியர் கே.பி.

'இருங்கோ வாத்தியர்.. அவர் இப்ப வந்திடுவார்! நான் புட்டு அவிக்கிறன், சாப்பிடிலாம்!" என அவர்களிடம் சொல்லிவிட்டு செல்லம்மா ஆச்சி அடுப்படிக்குள் சென்றபோது, அவள் கொடுத்த பாலையே உற்றுநோக்கிய கே.பி, காந்தியைப் பார்த்து, 'இந்தப் பாலும் இங்கு வாழும் மக்களும் ஒன்றுதான்! இவர்கள் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள், இனிமையானவர்கள். கோபம் வந்தால் பால் பொங்குவது போலக் கொதித்துவிட்டு, பாலைப் போலவே சட்டென்று தணிந்து போவார்கள். அதிகமாக வெளியுலகம் தெரியாத இவர்களுடைய தேவைகளும், ஆசைகளும் எளிமையானவை. அவை எளிமையானவையாக இருப்பதனால் இலகுவில் நிறைவேறுகின்றன. எனவே இவர்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்துக்கும் சந்தோஷத்துக்கும் குறைவில்லை!" என்று சொன்னபோது காந்தி சட்டெனக் குறுக்கிட்டான்.

'வெளுத்ததெல்லாம் பாலெண்டு நினைச்சு எல்லாரும் எங்கடை பக்கத்திலை எளிமையாய் இருக்கிறபடியாத்தான் சேர், சில ஆக்கள் லேசிலை எங்களைச் சுறண்டி சீவிக்கிறாங்கள்!.. இவை இப்பிடியே ஒண்டும் தெரியாமல் இருக்க அவங்கள் ஏமாத்தி வாழுறாங்கள்! அதிகாரத்திலையும், பதவியிலையும் இருக்கிறவங்கள் எங்கடை ஆக்களை நெடுகத்தானே அடக்கி ஒடுக்கி அடிமையளாய் வைச்சிருக்கிறாங்கள்! அதுக்கு முதலிலை.. அவங்களுக்கு உதவியாய் இருக்கிற சில கோடாலிக் காம்புகளை அடிச்சு முறிக்கோணும்!.. குட்டக்குட்டக் குனியிறவனும் பேயன்!.. குனியக்குனியக் குட்டறவனும் பேயன்!.. இவங்களையெல்லாம் அழிச்சால்தான் எங்கடை சமுதாயம் உருப்படும்!" என ஆத்திரப்பட்டான் காந்தி.

'உனக்குப் போய் காந்தி எண்டு பேர் வைச்சினமே!" எனச் சிரித்தார் கே.பி. 'எங்களுடைய இலட்சியம் எங்களுக்கு முக்கியந்தான் காந்தி!.. ஆனால் நாங்கள் அந்த இலட்சியத்தைச் சென்றடைகின்ற வழி இன்னமும் முக்கியமானது காந்தி!.. இலட்சியங்களைப் போன்றே எமது வழிகளும் தூய்மையாக இருக்கவேணும்!.. காந்தி மகான் அஹிம்சா வழியைப் பின்பற்றித்தான் போராடி வென்றர்!" என்ற கே.பியை இடையில் மறித்துப் பேசினான் காந்தி.

'சேர்!.. அது விளங்கக்கூடிய, உணரக்கூடிய எதிரிக்குத்தான் பொருந்தும்!.. பன்றிகளுக்கு முன்னால் முத்துக்களைப் போடாதீர்கள்!.. அவற்றின் அருமை அவற்றுக்குத் தெரியாது, அவை முத்துக்களைப் பீறிப்போடும் எண்டு யேசு சொன்னதாய் நீங்கள்தானே சேர் அடிக்கடி சொல்லுவியள்!" என மடக்கினான் காந்தி.

காந்தி இவ்வாறு வினவியபோது, 'உடனேயே பதிலளிக்காது சிந்தனையில் ஆழ்ந்த கே.பி பின்பு சிறிது நேரத்தின் பின்னர் பேசினார்.

'காந்தி! பலகோடி வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த மனிதவாழ்வு எனக்கு ஒரு முடிவில்லாத, நீண்ட நெடும்பயணமாகத் தெரிகின்றது! ஏற்றமும் இறக்கமும், பள்ளமும் படுகுழிகளும் கொண்ட பாதையில் முன்னே நகரும் மனித இனம், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமநிலத்துக்கு வரும்போது துன்பங்கள் அற்றதாய், சந்தோஷம் நிறைந்த ஒரு நிலையை அனுபவிக்கின்றது. இந்த நெடும்பயணம் நின்றுவிட்டதுபோல் தோன்றும் இந்தக் காலத்தில் மறுபடியும் சுரண்டலும், சுயநலமும் தலைதூக்குகின்றன. இந்த நிலையில் அங்கு வாழும் ஒருசிலர், குறிப்பாக இளைஞர்கள், இந்த நிலைக்கு எதிராக, இந்த அவலநிலையை மாற்றுவதற்குக் குரல் கொடுக்கின்றனர். தற்சமயம் வசதியாக வாழ்பவர்களுக்கு இந்த இளைஞர்களின் செயல்கள் பிடிக்காது! இவர்களைப் புரட்சிக்காரர் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் கண்டனஞ் செய்வார்கள். சௌகரியத்தை அனுபவிக்கும் வேறு சிலரும், நமக்கேன் பொல்லாப்பு! என ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் இந்த இளைஞர்களின் புரட்சி, மறுபடியும் மனித இனம் இன்னும் மேன்மையான நிலையை நாடித் தன் பயணத்தைத் தொடர்கின்றது எனலாம். இரத்தமும், துன்பமும், சித்திரவதைகளும் மலிந்த இந்தப் பயணத்தின் முன்னோடிகள் உனக்காகவும், எனக்காகவும் காத்திருப்பதில்லை காந்தி!.. இயேசு, மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர்கிங், இப்படிப் பல சமய, சமூக சீர்திருத்தவாதிகளையும் அவர்களுடைய வழிகளையும் நீ அறிவாய்தானே காந்தி! அஹிம்சைதான் அவர்களுடைய பலமான ஆயுதமாக இருந்தது. உடற்பலம் அற்றவர்கள்கூட அந்தப் புனித ஆயுதத்தைப் பயன்படுத்தி வெற்றிகாணக் கூடியதாகவிருந்தது."

'ஆனால் அவர்கள் யாவரையும் கொன்றுதானே சேர் போட்டாங்கள்!" எனக் குறுக்கிட்டான் காந்தி.

'ஆமாம்! உன்னதமானதொன்றை நாம் அடைவதற்கு அதேயளவு உன்னதமான இன்னொன்றை இழக்க ஆயத்தமாக இருத்தல் வேண்டும். இது இயற்கையின் எழுதா விதிகளில் ஒன்று காந்தி!" என்றார் கே.பி.

காந்தி தனது மெலிந்த உடல்; இலேசாக நடுங்க, 'இவ்வளவு அறிவும், வழிகாட்டக்கூடிய வல்லமையும் கொண்ட நீங்கள் ஏன் சேர் ஒரு இயக்கத்தைத் தொடங்கி வழி காட்டக்கூடாது?" என உணர்ச்சி மேலிடக் கேட்டான்.

காந்தி இவ்வாறு பதட்டப்பட்டுக் கேட்டபோது அமைதியாகவே பதிலளித்தார் கே.பி. 'காந்தி! உண்மையைச் சொன்னால், எனக்கே வழி எதுவெனச் சரியாகப் புலப்படவில்லை. உன்னுடைய இலட்சியமும் என்னுடைய இலட்சியமும் ஒன்றேதான்! நான் தீபங்களை ஏற்றி இருளை அகற்ற விரும்புகின்றேன். நீயோ யாவற்றுக்கும் தீ வைத்தே ஒளிகாணத் துடிக்கின்றாய்!" எனக் கே.பி சொல்லிக் கொண்டிருக்கையில் சிங்கராயர் கிணற்றடியிலிருந்து வந்தார். அதேசமயம் சேனாதியும் தான் வெடிவைத்த காட்டுச் சேவலைக் கையில் கொண்டு வந்தான்.

அதைத் தனது கரத்தில் வாங்கிப் பார்த்த கே.பி, 'இந்த வனங்களில் வாழும் பிராணிகள்தான் எத்தனை அழகாக, ஆரோக்கியமாக இருக்கின்றன!" என வியந்தபோது சிங்கராயர், 'நானும் என்ரை வயதுமுழுக்கக் காட்டிலைதான் திரிஞ்சிருக்கிறன். ஆனால் ஒரு நொண்டி மரையையோ, கிழட்டுப் பிராணிகளையோ காணேல்லை!" எனக் கூறினார்.

'ஓமோம் பெரியவர்! காடுகளில் வலிமை குன்றியவை, ஊனமானவை, முதுமை அடைந்தவை யாவும் வேறு விலங்குகளுக்கு இரையாகி விடுவதால் நீங்கள் அவற்றைக் காணவில்லைப் போலும்!.. காட்டில் வாழும் பிராணிகள் சதா எச்சரிக்கையுடனும், இயற்கைக்குக் கட்டுப்பட்டும் வாழ்வதாலேயே அவை இவ்வளவு அழகும், ஆரோக்கியமும் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன போலும்!" என விளக்கினார் கே.பி.

'நல்லாய்ச் சொன்னியள் வாத்தியார்!.. காட்டிலை வாழுற சீவன்கள் மட்டமல்ல.. இந்தக் காட்டுக்கை இருக்கிற நாங்களும் எப்பவும் கவனமாய்த்தான் சீவிக்கவேணும்! கொஞ்சம் கவலையீனமாய் இருந்தால் காடு வீட்டுக்கை வந்திடும்!.. பழையாண்டாங்குளத்துக் குழுவன் ஒண்டு இப்ப எங்களுக்குப் பெரிய இடைஞ்சலாய் வந்திட்டுது! அதைப்போலை ஒரு குழுவனை நான் என்ரை சீவியகாலத்திலை சந்திக்கேல்லை!.. இஞ்சை பாத்தியளே இந்தக் காயத்தை?.. அந்தக் கலட்டியனை நான் மடக்கப் பாத்தபோது அது துடையிலை வெட்டி என்னைக் கொல்லப் பாத்தது!.. என்ரை பட்டி மாப்பிளை நாம்பன்ரை கொம்பை முறிச்சுது!.. வாருங்கோ காட்டுறன்!.." எனக் கே.பியையும், காந்தியையும் அழைத்துச்சென்று, பின் வளவில் ஒற்றைக் கொம்பனாக நின்ற கேப்பையானைக் காட்டினார் சிங்கராயர்.

ஒரு சின்ன யானையளவு பெரிதாய் நின்ற கேப்பையானைப் பார்த்தபோது ஆசிரியர் கே.பிக்கு, அந்தப் பழையாண்டாங்குளத்துக் கலட்டியன் எத்தனை அசுரபலமும், மூர்க்கமும் உடையதாக இருக்கும் என்பது புலப்பட்டது.

அங்கே இரண்டு பனைகளில் நீளமாக இழுத்துக் கட்டப்பட்ட மான்தோல் வார்களைக் காட்டிய சிங்கராயர், 'அண்டைக்கு என்ரை வார்க்கயிறு அறுந்தபடியால்தான் கலட்டியன் ஆளிலை வந்திட்டுது!.. அதுக்குத்தான் இண்டைக்கு ஒரு புது வார்க்கயிறு திரிக்கப்போறன்!.. " எனச் சிங்கராயர் சொல்லிக் கொண்டிருக்கையில் நந்தாவதி வந்தாள்.

அவள் அணிந்திருந்த உடையைப் பார்த்தே அவள் ஒரு சிங்களப்பெண் என்பதை உணர்ந்துகொண்ட கே.பி,  இது யார்? என்பதுபோலச் சிங்கராயரைப் பார்த்தார்.

'இதுதான் வாத்தியார் நந்தாவதி! இஞ்சை சேவையர் பாட்டியிலை வேலை செய்யிற கங்காணி குணசேகராவின்ரை மோள்!.. தாய் செத்தபிறகு கண்டியாலை வந்து இஞ்சை தேப்பனோடை நிக்கிறாள்.. அருமையான பொடிச்சி!.." எனச் சிங்கராயர் நந்தாவதியை அறிமுகப்படுத்தியபோது அவள் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள்.

பருவத்தின் தலைவாசலில் பூரித்து நின்று, ஒரு தேவதைபோல் தோன்றிய அவளுடைய பெயரைக் கேட்டதுமே காந்திக்குப் பொறிதட்டியதுபோல் ஒரு ஞாபகம் வந்தது. அன்று சேனாதிராஜன் மாணவர் ஒன்றியத்தில், 'நந்தா நீ என் நிலா!", என உருகிப் பாடியது நினைவில் பளீரிட்டது. அவன் திரும்பி வேலியருகில் காட்டுக்கோழியை உரித்துக் கொண்டிருந்த சேனாதியைப் பார்த்தான். நந்தாவதியை அவன் பார்க்கும் பார்வையிலேயே காந்தி விஷயத்தைப் புரிந்துகொண்டான்.

'வாத்தியார்! நீங்கள் இண்டைக்கு காந்தியையும் கூட்டி;கொண்டு வந்தது நல்லதாய்ப் போச்சுது! வார்க்கயிறு திரிக்க என்னோடை சேர்த்து நாலுபேர் வேணும். நான் கயித்தைத் திரிக்க மூண்டுபேர் மூண்டு புரியைப் புடிக்கவேணும். நீங்கள் இந்த வேப்பமர நிழலிலை சாக்குக் கட்டிலிலை இருங்கோ. நான் கயித்தைத் திரிக்கிறன். நந்தாவதியும் வந்தது நல்லதாய்ப் போச்சுது!.. தம்பி சேனாதி!.. கெதியிலை கோழியை உரிச்சுக் ஆச்சீட்டைக் குடுத்திட்டு வா!.. கயித்தைத் திரிப்பம்!" எனச் சொல்லிக்கொண்டே சிங்கராயர் மளமளவென கயிறு திரிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளலானார்.

காந்தி, சேனாதி, நந்தா மூவரும் ஆளுப்பொரு வார்புரியைப் பிடிக்க, உறுதியும் பருமனும்கொண்ட வார்க்கயிறு சிங்கராயரின் அனுவபம் மிக்க செயற்றினால் மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது.

ஆசிரியர் கே.பி சாக்குக் கட்டிலில் அமர்ந்தவாறே வார்க்கயிறு உருவாவதை அவதானித்துக் கொண்டிருந்தார். சேட்டைக் கழற்றிவிட்டு வெறும் மேலுடன் வெகு எளிமையாகக் காணப்பட்ட அவருடைய தீட்சண்யம் மிக்க விழிகளைக் கவனித்த காந்தி, இவருடைய அறிவுக்கும், கல்விக்கும் எங்கேயோ உயர் பதவியில் இருக்கவேண்டியவர், ஏன்தான் இந்தக் காட்டுப் பகுதியில் வந்து கிராம வாழ்க்கையில் இன்பம் காண்கின்றார் எனச் சிந்தித்தான் காந்தி.

தலைக்கு மேலே வந்துவிட்ட சூரியனின் கிரணங்கள் கடுமையாகத் தகித்தன. அந்த வெய்யில் தனக்குச் சுட்டதேயன்றி, சேனாதிக்கும் நந்தாவதிக்கும் நிலவுபோல் இருப்பதை நேரில்கண்டு வியந்தான் காந்தி. அவர்களின் விழிகள் அடிக்கடி சந்தித்து ஒன்றையொன்று கௌவிப் பின் பிரிந்துகொண்டிருந்தன. நாடு இருக்கும் நிலையில் இந்தக் காட்டுக்குள் இப்படியொரு காதலா? இதன் முடிவுதான் எப்படி இருக்கப் போகின்றது? என அவன் தனக்குள் எண்ணிக்கொண்டான்.

வார்க்கயிற்றைத் திரித்தவாறே சிங்கராயர், தான் கலட்டியனைப் பிடிக்கப்போகும் திட்டங்களை ஆசிரியர் கே.பிக்குக் கூறிக்கொண்டிருந்தார்.

'வாத்தியார்! எனக்குத் துடையிலை வெட்டின கலட்டியன் இப்ப பழையாண்டாங்குளத்து நடுப் புல்லுக்கை இருக்கிற தண்ணி மோட்டைக்கை கிடக்குது.. சேனாதி அதுக்கு வெடிவைச்ச குண்டு எங்கையோ பட்டு, அந்தக் காயம் ஆறத்தான் அது அங்கை கிடக்குது.. அந்தப் பெரிய குளம் முழுக்க ஆளுயுரப் புல்லு காடாய்க் காஞ்சுபோய்க் கிடக்குது.. கலட்டியன் கிடக்கிற நடுக்குளத்துக்குத் தண்ணி வாற பவுர் மட்டும் புல்லில்லாமல் ஒரு மணல் ஓடையாய் இருக்குது.. என்ரை திட்டம் என்னெண்டால், எட்டுப் பத்துப் பேராய்ப்போய், குளத்தைச் சுத்திவர ஒரே நேரத்திலை புல்லுக்கு நெருப்பு வைக்கவேணும்.. நெருப்பு நல்லாய்ப் பத்தி, மோட்டையைச் சுத்தி எரிய, கலட்டியன் தப்பி ஓடப்பாக்கும்.. எந்தப் பக்கமாய் அவர் ஓடுவார்?.. அந்தத் தண்ணிவாற மணல் ஓடைவழியாலைதான் அவர் ஓடித் தப்போணும்!.. வேறை வழியே இல்லை!.. அவர் அப்பிடி ஓடிவர, அவர் வாற வழியிலை நிக்கிற முதிரை மரத்திலை நான் வார்க்கயித்தோடை இருப்பன்!.. இந்தக் கயித்தின்ரை ஒரு பக்கத்தை முதிரை மரத்திலை கட்டியிருப்பன்.. தலைப்புச் சுருக்காலை கழுத்துக்குப் படுப்பன்!.. கலட்டியன் புள்ளை தப்பவே முடியாது!.. எப்பிடி என்ரை திட்டம்?" எனப் பெருமிதத்துடன் விளக்கினார் சிங்கராயர்.

சேனாதி தன் பாட்டனார் வகுத்திருந்த திட்டத்தைக் கேட்டுப் பிரமித்துப் போனான். சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் பழையாண்டாங்குளம் அவன் கண்ணில் தெரிந்தது. ஆளுயுரத்திற்கு வளர்ந்து வைக்கோலாய்க் கிடக்கும் புல்லுக்காடு. அதன் நடுவே ஒரு சிறிய ஒழுங்கைபோல் செல்லும் மணற்பவர்... நாற்புறமும் புசுபுசுவெனப் பற்றிக்கொள்ளும் நெருப்பு, காட்டுத் தீபோலக் கொழுந்துவிட்டு எரிந்து கலட்டியன் கிடக்கும் மோட்டையை வளைத்துக்கொள்ள, அது மிரண்டுபோய், தப்புவதற்காக அந்த மணற்பாதை வழியாக ஓடிவரும் காட்சி அவன் மனதில் அப்படியே தெரிந்தது. அவன் தன்னருகில் நின்றுகொண்டிருந்த நந்தாவைக்கூட மறந்து, தன் பார்வையாலேயே சிங்கராயரைப் பார்த்துப் பாராட்டி மகிழ்நது கொண்டான்.

செல்லம்மா ஆச்சியின் கைப்பாங்கில், எருமை நெய்யில் பொரித்தெடுத்த காட்டுக்கோழி இறைச்சியை வெகுவாக அனுபவித்து உண்டு மகிழந்தார் கே.பி. அவர் வயிறார உண்ட களைதீர, வேப்பமர நிழலில் ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தபின்னர், ஆசிரியரும் காந்தியும் தண்ணீரூற்றுக்குப் புறப்பட்டனர். செல்லம்மா ஆச்சி தன் கையாலே உருக்கிய புத்துருக்கு நெய்யில் ஒரு போத்தலை ஆசிரியருக்குக் கொடுத்தார். சிங்கராயர் சேனாதியை அழைத்து, 'வாத்தியாரை குமுளமுனைமட்டும் கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு, நான் சொன்னதெண்டு சொல்லி குமுளமுனை மணியத்திட்டை மூண்டுபோத்தில் வடிசாராயம் வாங்கிக்கொண்டு வா! நாளைக்கு குழுவனைப் புடிச்சபிறகு குணசேகராவின்ரை ஆக்களுக்குக் குடுக்கவேணும்! அவங்கடை உதவியில்லாமல் ஒரே நேரத்திலை குளத்தைச் சுத்தி நெருப்புக் குடுக்கேலாது!" எனக் கட்டளையிட்டார்.

அவர்கள் புறப்படும் சமயத்தில் மீண்டும் நந்தாவதி வந்தபோது, 'மங் கீல நங்கி!" என அவளுடைய பாஷையிலேயே ஆசிரியர் விடைபெற்றபோது, 'போயிட்டு வாங்க சார்!" என அவள் தான் பழகியிருந்த இனிய இந்தியத் தமிழில் கூறியபோது யாவரும் சிரித்துக் கொண்டனர்.

சிங்கராயர், ஆச்சி, நந்தாவதி மூவரும் தட்டிக்கண்டாயம் வரையில் வந்து வழியனுப்ப அவர்கள் புறப்பட்டனர்.

மாலை வெய்யில் பொன்னாக அடித்துக்கொண்டிருந்த பசும்புற்றரையில் நடந்து பாலையடி இறக்கத்தை அடைகையில் சிந்தனையில் ஆழ்ந்தவனாய் நடந்துவந்த காந்தி திடீரென்று, 'சேர்! சிங்களவரும் தமிழரும் திருமணம் செய்துகொண்டால் இன ஒற்றுமை பிறக்குமா?" எனக் கேட்டபோது சிரித்த கே.பி, 'அப்படித் திருமணஞ் செய்துகொண்டால் பிள்ளைதான் பிறக்கும்!.. இன ஒற்றுமை பிறக்காது என்று ஒரு தமிழ்த் தலைவர் சொன்னது உனக்குத் தெரியுமா?" எனக்கூறி மீண்டும் சிரித்துக்கொண்டார்.

சோனதி சட்டடென உஷாராகி கே.பி மேலே சொல்வதைக் கேட்பதற்காகக் காதைத் தீட்டிக்கொண்டான்.

பாலையடியிறக்க வெண்மணல் மேட்டில் நின்ற கே.பி, 'காந்தி! ஒவ்வொரு இனத்துக்கும் தனித்துவமான சில குணாதிசயங்கள் உண்டு. பனையையும் தென்னையையும் நாம் மாங்கன்று ஒட்டுவதுபோல் ஒட்டிவிட முடியுமா? பனை பனையாகத்தான் இருக்க முடியும். தென்னை தென்னையாகத்தான் இருக்க முடியும். அது பனைக்கும் நல்லது, தென்னைக்கும் நல்லது. சிங்களவர்களும் தமிழர்களும் மனித இனமாகிய ஒரே குடும்பம் என்றபோதும் அவரவர் தத்தம் தனித்துவம் கெடாது வாழ்ந்து சமூகத்திற்குப் பயன்தர வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன்!" என்றார்.

'ஆனால் எமது தனித்துவம்தான் பதவிவெறி கொண்டவர்களினால் நாளுக்கு நாள் நசித்துக்கொண்டு போகின்றதே சேர்! அப்படி எமது இனத்தையும் கலாச்சாரத்தையும் தனித்துவத்தையும் அழிப்பவர்களை நாம் பொங்கியெழுந்துது அழிப்பதுதான் நியாயம் சேர்!" எனத் துடித்தான் காந்தி.

முகஞ்சிவக்க உணர்ச்சிவயப்பட்டு நின்ற அவனைத் தோளில் தட்டிய ஆசிரியர் கே.பி, 'காந்தி! இனவெறியை இந்த அளவுக்கு வளர்த்துவிட்டது யார்? இன்று எல்லா அதிகாரங்களிலும் நாட்டை ஆள்கின்ற அதிகராமே மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது. அரசியல்வாதிகள், எமது நாட்டில் குறுக்குவழியில் மிகவிரைவாகப் பதவிக்கு வந்துவிட இனம், மொழி, மதம், சாதி போன்ற உணர்ச்சியைத் தாக்கும் விஷயங்களை மக்கள்முன் வைக்கின்றார்கள். இந்த விஷயங்களில் மக்களுக்கு இயல்பாக உள்ள அபிமானத்தையும், பற்றையும் இவர்கள் வெறியாக்கி அவர்களது வாக்குச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். நாட்டின் பொருளாதார அவலம், சமூகச் சீர்கேடு என்பவற்றை மக்கள் கண்டுகொள்ளாதபடி சதா இந்த வெறிக்குத் தூபமிட்டுக்கொண்டே, பிரச்சனைகளைத் தீர்க்க மார்க்கமிருந்தாலும் அவற்றைத் தீர்க்க முயலாமலே அப்பிரச்சனைகளில் தமது வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்கள்!" எனக் கே.பி கூறியபோது, 'இப்படியான சமூகத் தூரோகிகளை உயிரோடு விட்டுவைக்கக் கூடாது சேர்!" எனக் குறுக்கிட்டான் காந்தி. 'அரசியல் ஒரு துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலுமே ஏமாற்றியும், சுரண்டியும் வாழ்பவர்கள்தான் இன்றைய உலகில் பெரும்பான்மையினராக உள்ளனர்! சுயநலவாதிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் இந்த விஷயத்தில் நெருங்கிய உறவுக்காரரே! இந்த நிலைக்கு உண்மையான காரணம் மக்கள் மத்தியில் நிலவும் வறுமையும், அறியாமையுமே! மனிதன் ஒன்றில் தானாக உணர்ந்து திருந்தவேண்டும் அல்லது இன்னொருவர் சொல்வதைக் கேட்டுத் திருந்த வேண்டும்! இல்லையேல் தண்டனைகளுக்குப் பயந்து, பின்விளைவுகளுக்குப் பயந்து திருந்த வேண்டும்!" என்றார் கே.பி.

ஆற்றைக் கடந்து அவர்களுடன் கூடவே நடந்துகொண்டிருந்த சேனாதிக்கு இவர்களுடைய உரையாடல் ஓரளவு புரிவதுபோல இருந்தது.

கே.பி யை இடைமறித்துச் சட்டென்று சொன்னான் காந்தி: 'மனிதன் தானாகத் திருந்துவது நடக்காத ஒன்று! இன்னொருவர் சொல்லியும் இவர்களைப் போன்றவர்கள் திருந்தவே மாட்டார்கள்! அப்படியான சமய, சமூக சீர்திருத்தவாதிகளைத்தான் அவர்கள் கொன்று விடுகின்றார்களே!" எனக் கூறிக்கொண்டு வந்தபோது, 'நீ சொல்லும் மூன்றாவது வழியான தண்டனைகூட நெடுநாட்களுக்குப் பயனளித்ததாய் சரித்திரமே கிடையாதே!" என்றார் கே.பி.

'அப்ப என்ன சேர் செய்யச் சொல்லுறியள்? கையைக் கட்டிக்கொண்டு நடக்கிற அநியாயங்களைச் சும்மா பாத்துக் கொண்டிருக்கச் சொல்லறியளே?"

'எனக்கும்கூடத்தான் வழி எதுவென்று இன்னமும் புரியவிலலை காந்தி! மனித வரலாற்றின், இப்படியான இடர்சூழ்ந்த காலகட்டத்தில், பொதுநல நோக்கமும், உன்னத இலட்சியங்களையும் உடைய ஒப்பற்ற ஒரு தலைவன் தோன்றி, மக்களை நல்வழியில் இட்டுச்சென்று சுபீட்சமடைய வைப்பது, நிச்சயமான ஒரு விஷயமாக இருக்கின்றது. உன்னைப்போன்ற உன்னதமான மனம் படைத்த வாலிபர்களினதும், யுவதிகளினதும் இதயங்கள் இந்தக் கொடுமைகளில் கருகி, வதைகளினால் நசுக்கப்படும்போது, அவை வைர நெஞ்சங்களாகின்றன. காட்டுத்தீயில் கருகிய மரம் எப்படிப் பூமியின் அடியில் அழுந்தி அமுக்கத்தால் வைரமாகின்றதோ, அதைப்போன்றே இந்த இளநெஞ்சங்களும், இப்படியான சூழ்நிலைகளில் கறுப்பு வைரங்களாகி விடுகின்றன. வலிமை மிக்க இந்த வைரநெஞ்சங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி எத்தனையோ இலட்சியங்களை அடைந்துவிடலாம்! அவர்களை அப்படியானதொரு புனித போராட்டத்தில் ஈடுபடவைக்கும் ஒரு தலைவன் நிச்சயமாக எம்மத்தியில் உருவாகியே ஆகவேண்டும்! நாம் ஏன் நசுக்கப்படுகின்றோம், எவ்வாறு நசுக்கப்படுகின்றோம் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதே, பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதற்கட்டம்! எமது வாலிபர்களுக்கும், யுவதிகளுக்கும் அறிவையூட்டி அவர்களை ஆயத்தம் செய்வதொன்றே இப்போது என்முன் உள்ள ஒரே வழியாக எனக்குத் தோன்றுகின்றது!" எனச் சொன்ன கே.பியின் முகம் சிந்தனையில் இறுகிப்போய்க் கிடந்தது.

காந்தியின் மனதில் காலையில் ஆசிரியர் கே.பி, வட்டம்பூவைப் பார்த்துவிட்டுக் கூறிய அந்த வழிகாட்டியான வாலிபனின் கதை நினைவுக்கு வந்தது. இரத்தம் சிந்தித் தன் உயிரையே இழந்து தன் இனத்தை வாழவைத்த அந்த இளைஞனின் ஞாபகம் காந்தியின் மனதில் இறுகப் பதிந்து போயிற்று.

ஆசிரியர் கே.பியையும், காந்தியையும் குமுளமுனையில் வழியனுப்பிவிட்டு சேனாதி ஆண்டாங்குளம் திரும்பியபோது கிராமத்தை இருள் கவ்விக் கொண்டிருந்தது.

நந்தாவின் குடிசைப் பக்கமாகப் பார்த்தான். குப்பி விளக்கின் ஒளி தெரிந்தது.

சிங்கராயரும் அவனுமாக அன்று பகல் திரித்திருந்த பருமனான வார்க்கயிற்றில், கொக்கை போன்ற பலமான ஒற்றை மரைக்கொம்பை அடுத்துக் கட்டிவிட்டுப் படுக்கையில் சரிந்தபோது இரவு பத்து மணிக்கும் மேலாகிவிட்டிருந்தது.


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ - 06
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 07:18
TamilNet
HASH(0x5625a6bc14a8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 07:18


புதினம்
Fri, 29 Mar 2024 07:18
















     இதுவரை:  24715298 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4313 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com